மகளிர் மட்டும் ஆட்டோரிக்ஷா சேவை: ராஞ்சி போலீசாரின் புதிய முயற்சி
ஜார்கண்ட் தலைநகர், ராஞ்சியில் பெண்கள் பாதுகாப்பாக செல்லும் வகையில், மகளிர் மட்டும் ஆட்டோரிக்ஷா சேவை துவங்கப்பட உள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்கவும், தவிர்க்கும் வகையிலும், போலீசார் பல்வேறு முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். அந்த வகையில், ராஞ்சி போலீசார் புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளனர்.

நகர்ப்புறங்களில் பெண்கள் பாதுகாப்பாக செல்லும் வகையில் மகளிர் மட்டும் ஆட்டோரிக்ஷா சேவையை ராஞ்சி போலீசார் துவங்க உள்ளனர். "பிங்க் லைன்" சர்வீஸ் என்ற பெயரில் துவங்கப்பட இருக்கும் இந்த சேவையில் இயக்கப்படும் ஆட்டோரிக்ஷாக்களை பெண்களே ஓட்டுனராக இருப்பர்.
மொத்தம் 200 மகளிர் மட்டும் ஆட்டோரிக்ஷாக்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, பெண் ஓட்டுனர்களுக்கு தட்டுப்பாடு இருப்பதால் சிறப்பு அடையாள அட்டை கொண்ட ஆண் டிரைவர்களை நியமிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஆண் டிரைவர் இயக்கினால் பின்புற இருக்கையில் அமர்ந்திருப்பவர் தெரியாதவாறு திரைசீலை கொண்டு மறைக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த ஆட்டோரிக்ஷாக்களின் கூரை இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
மேலும், இந்த ஆட்டோரிக்ஷாக்களை கண்காணிக்கும் வகையில் செயற்கைகோள் தொடர்பில் இயங்கும் ஜிபிஎஸ் கருவி மற்றும் அவசர கால பட்டன் ஒன்றும் பொருத்தப்பட்டிருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்றும் ராஞ்சி போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழக போலீசார் இதை பின்பற்றி சிறப்பு ஆட்டோரிக்ஷாக்களை இயக்குவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்


Click it and Unblock the Notifications








