பிப்.19ல் பயன்பாட்டுக்கு வருகிறது சென்னை- மதுரை இடையிலான அதிவேக தேஜஸ் ரயில்!
சென்னை - மதுரை இடையிலான நவீன வசதிகளுடன் கூடிய தேஜஸ் சொகுசு ரயில் விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைக்க இருக்கிறார்.
நாட்டின் முதல் தேஜஸ் எக்ஸ்பிரஸ் அதிவேக ரயில் மும்பை- கோவா இடையே அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இரண்டாவது தேஜஸ் அதிவேக ரயில் சென்னை - மதுரை இடையே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சென்னையிலிருந்து மதுரைக்கு வெறும் ஆறரை மணிநேரத்தில் இந்த ரயில் சென்றடையும் என்பதால் பயணிகள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த புதிய தேஜஸ் ரயில் சேவையை பயணிகள் பயன்பாட்டிற்காக வரும் 19ந் தேதி பிரதமர் மோடி துவங்கி வைக்க இருக்கிறார்.
இந்த ரயிலில் ஏராளமான சொகுசு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பிற ரயில்களிலிருந்து வித்தியாசப்படுத்தும் வகையில் மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் வண்ணத்தில் வினைல் ஸ்டிக்கருடன் கவரும் வகையில் பெட்டிகள் உள்ளன. உட்புறத்தில் இருக்கைகள் சரியான இடைவெளியில் அதிக இடவசதியுடன் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த ரயிலில் 3+2 இருக்கை அமைப்புடன் 72 பேர் பயணிப்பதற்கான ரயில் பெட்டிகளும், 2+2 ஆகிய இருக்கை அமைப்புடன் 56 பேர் பயணிப்பதற்கான ரயில் பெட்டிகளும் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. 2+2 இருக்கை அமைப்புடைய பெட்டிகள் மிக தாராளமான இடவசதியை அளிக்கும். ஜெனரேட்டர் கார் உள்பட 15 பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்படும்.
ஒவ்வொரு இருக்கைக்கும் தனித்தனியாக 9 அங்குல திரை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, திரைப்படங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை காண முடியும் என்பதுடன், ரயில் பற்றிய தகவல்களையும் பெற முடியும். திண்பண்டங்களை வைத்துக்கொள்வதற்கான சிறிய டேபிள், வைஃபை இன்டர்நெட் வசதி உள்ளிட்டவையும் இருக்கின்றன.

ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் உணவு பதார்த்தங்களை சூடு படுத்திக் கொள்வதற்கான ஓவன், காபி மற்றும் டீ வழங்கும் எந்திரம், குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்டவை பொருத்தப்பட்டு இருக்கின்றன. கழிவறைகள் மிக நவீன முறையில் இருப்பதுடன், கை கழுவுவதற்கான திரவ சோப்பு வினியோகிக்கும் சாதனம், தானியங்கி தண்ணீர் குழாய்கள் போன்றவை பொருத்தப்பட்டு இருக்கிந்றன.
ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது. தீ பிடிப்பது குறித்து எச்சரிக்கும் சாதனம், கெட்ட வாடைகளை ரயில் பெட்டியிலிருந்து அகற்றும் சாதனம் உள்ளிட்டவை ஹைலைட்டாக கூறலாம்.
தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் அதிகபட்சமாக 200 கிமீ வேகம் வரை இயக்குவதற்கான விசேஷ கட்டமைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை தற்போது தண்டவாளங்கள் மற்றும் பாதுகாப்பு கொள்கைகளின்படி, மணிக்கு 130 கிமீ வேகத்தில் இயக்கப்படும்.
தேஜஸ் ரயில் பெட்டிகளில் ஸ்டெயிலெஸ் ஸ்டீல் பிரேக் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வகை பிரேக்குகள் மிகவும் சிறப்பான செயல்திறனுடன் இருக்கும். எனவே, அதிவேகத்தில் இயக்கும்போதும் மிக குறைவான தூரத்திலேயே ரயிலை நிறுத்தும் வாய்ப்பு ஓட்டுனர்களுக்கு கிடைக்கும்.

சென்னையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமார்க்கத்தில் மதுரையில் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு சென்னையை வந்தடையும். திருச்சி மற்றும் கொடை ரோடு ஆகிய இடங்களில் மட்டுமே நின்று செல்லும்.


Click it and Unblock the Notifications









