டிச.29-ல் இந்தியாவின் அதிவேக ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்!
சென்னையில் தயாரிக்கப்பட்ட டிரெயின்-18 அதிவேக ரயிலானது வரும் 29ந் தேதி பயணிகள் சேவைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.
சென்னையில் தயாரிக்கப்பட்ட டிரெயின்-18 அதிவேக ரயிலின் முதல் பயணத்தை பிரதமர் மோடி துவங்கி வைக்க உள்ளார். கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் ரயில்வே துறை தீவிரமாக இறங்கி உள்ளது. ஏற்கனவே உள்ள ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு வருவதுடன், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் புதிய செமி புல்லட் ரயில் ஒன்றும் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

டிரெயின்-18 என்ற பெயரிலான அந்த அதிவேக ரயில் சென்னையிலுள்ள ஐசிஎஃப் ஆலையில்தான் உருவாக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட அந்த ரயில் தற்போது தீவிர சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.

அண்மையில் கோட்டா- சவாய் மதோப்பூர் இடையே நடந்த சோதனை ஓட்டத்தின்போது இந்த ரயில் மணிக்கு 180 கிமீ வேகத்தை கடந்து சாதனை படைத்தது. சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடந்துள்ளதையடுத்து, இந்த ரயிலை பயணிகள் சேவைக்கு அர்ப்பணிக்க ரயில்வே துறை முடிவு செய்தது.

அதன்படி, இந்த அதிவேக ரயில் வரும் 29ந் தேதி பயணிகள் சேவைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. டெல்லியிலிருந்து பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசிக்கு இந்த டிரெயின்-18 அதிவேக ரயில் சேவையை துவங்கப்பட இருக்கிறது.

வாரணாசியில் நடைபெறும் விழாவில் டிரெயின்-18 அதிவேக ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

டிரெயின்-18 ரயில் தொழில்நுட்ப அளவிலும், பயணிகள் வசதிகளிலும் முன்மாதிரி ரயிலாக தயாரிக்கப்பட்டு இருக்கிறது. புல்லட் ரயில்கள் போன்று இந்த ரயிலை இயக்குவதற்கு தனி எஞ்சின் தேவையில்லை.

குறிப்பிட்ட ரயில் பெட்டிகளில் பொருத்தப்பட்டு இருக்கும் மின் மோட்டார்கள் இந்த ரயில் இயங்குவதற்கான உந்துசக்தியை கொடுக்கும். இதன் மூலமாக, அதிவேக பிக்கப்பையும், விரைவாக நிறுத்துவதற்கான வாய்ப்பையும் இந்த ரயில் வழங்கும். பயண நேரம் 15 சதவீதம் வரை குறையும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ரயிலில் தானியங்கி கதவுகள், சிசிடிவி கேமரா, பொழுதுபோக்குக்கான டிவி திரைகள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன. மிக சொகுசான இருக்கைகள் சவுகரியமான இடவசதியுடன் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த ரயிலை 200 கிமீ வேகம் வரை இயக்க முடியும். ஆனால், அதற்கான வலுவான தண்டவாளங்கள் மற்றும் சிக்னல் சிஸ்டம் நம்மிடம் இல்லை. இதனால், 180 கிமீ வேகம் வரை மட்டுமே சோதனை ஓட்டத்தின்போது இயக்கப்பட்டுள்ளது.

வெறும் 18 மாதங்களில் இந்த புதிய அதிவேக ரயிலை ஐசிஎஃப் தயாரித்து சாதித்துள்ளது. மேலும், வெளிநாட்டு ரயில்களுக்கு இணையான தரத்துடன், அதிக பாதுகாப்பு வசதிகளுடன் இந்த ரயில் உருவாக்கப்பட்டு இருப்பதும் இந்திய ரயில்வேயில் ஒரு புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

சதாப்தி ரயிலுக்கு மாற்றாக இந்த புதிய ரயில் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில் சோதனை ஓட்டங்களில் வெற்றி பெற்றிருப்பதால், அடுத்து 4 புதிய டிரெயினஅ-18 ரயில்களை தயாரிப்பதற்கும் ஐசிஎஃப்.,பிற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு இருப்பதா ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், புதிதாக தயாரிக்கப்படும் டிரெயின்-18 ரயில்கள் கூட வட இந்தியாவிலேயே சேவைக்கு கொண்டு செல்லப்பட இருக்கின்றன. டெல்லியிலிருந்து 10 வழித்தடங்களில் புதிய டிரெயின்-18 ரயில்கள் இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளன.

இதனால், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு தென்னகத்தில் ஒரு டிரெயின்-18 ரயில் கூட இயக்கப்படும் வாய்ப்பு இல்லை. மத்திய அரசின் இந்த முடிவு தென் இந்திய மக்களிடையே ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
Image Courtesy:Financial Express


Click it and Unblock the Notifications