இனி தினமும் சென்னை-பெங்களூர் வேலைக்கு போயிட்டு வரலாம்! பக்கத்து தெருவுக்கு போற மாதிரி டிராவல் மாற போகுது!
ஒரு நாடு பொருளாதார ரீதியில் வேகமாக வளர்ச்சியடைய வேண்டுமென்றால், வாகனங்கள் விரைவாக பயணம் செய்ய கூடிய வகையில், தரமான சாலைகள் இருக்க வேண்டியது அவசியம். இதன் காரணமாக தற்போதைய மத்திய அரசு இந்தியா முழுக்க பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ்வே சாலை பணிகளை விரைவுபடுத்தியுள்ளது. இதில், சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே (Chennai-Bangalore Expressway) ஒன்றாகும். இந்தியாவின் 2 முக்கியமான பெருநகரங்களான சென்னை மற்றும் பெங்களூரை இந்த எக்ஸ்பிரஸ்வே இணைக்கிறது. சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே சாலையின் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய 3 மாநிலங்கள் வழியாக பயணிக்கிறது.
இதன் மொத்த தூரம் 262 கிலோ மீட்டர்கள் ஆகும். தமிழ்நாட்டில் 106 கிலோ மீட்டர்கள், ஆந்திராவில் 85 கிலோ மீட்டர்கள் மற்றும் கர்நாடகாவில் 71 கிலோ மீட்டர்கள் என மொத்தம் 262 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலையில் சொந்த வாகனங்களில் சென்னை-பெங்களூர் இடையே பயணம் செய்தால், சுமார் 6 மணி நேரம் ஆகும். இந்த பயண நேரத்தை புதிதாக பயன்பாட்டிற்கு வரவுள்ள சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே சாலை அப்படியே பாதியாக குறைத்து விடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
அதாவது வெறும் 3 மணி நேரத்திலேயே சென்னையில் இருந்து பெங்களூருக்கும், பெங்களூரில் இருந்து சென்னைக்கு சென்று சேர்ந்து விடலாம். இது கிட்டத்தட்ட ஒரு முழு நீள திரைப்படம் பார்க்கும் நேரம் மட்டுமே என்பதால், சென்னை-பெங்களூர் இடையே அடிக்கடி பயணம் செய்பவர்கள், இந்த எக்ஸ்பிரஸ்வே சாலையை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

முதலில் சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே சாலை நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதமே முழுமையாக பயன்பாட்டிற்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. எனினும் தற்போது பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனவே வரும் 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள், சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே சாலை முழுமையாக பயன்பாட்டிற்கு வந்து விடும்.
அதற்கான பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலத்தில் பயணிக்கும் சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே சாலை பணிகள் தற்போது கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளன. அதாவது கர்நாடக மாநிலத்தின் வழியாக செல்லும் 71 கிலோ மீட்டர்களுக்கான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.
அனேகமாக நடப்பு நவம்பர் மாத இறுதிக்குள்ளாக, கர்நாடக மாநிலத்தின் வழியாக பயணிக்கும் 71 கிலோ மீட்டர்களுக்கான, சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே சாலை பணிகள் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரும் டிசம்பர் மாதத்திற்குள், சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே சாலையை திறக்கும் திட்டத்தில், மத்திய அரசு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi), வரும் டிசம்பர் மாதத்திற்குள் சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே சாலையை திறந்து வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களின் வழியாக பயணிக்கும் சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே சாலை பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அங்கு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களில் பணிகள் முடிவடைந்த பிறகு, வரும் 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள், சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே சாலை முழுமையாக பயன்பாட்டிற்கு வரும். அந்த நாளுக்காக பல லட்சக்கணக்கான மக்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே சாலை NE-7 என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. National Expressway-7 என்பதன் சுருக்கம்தான் NE-7. சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே அமைக்கப்பட்டு வருகிறது. இந்த எக்ஸ்பிரஸ்வே சாலையில் அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோ மீட்டர்கள் வேகத்தில் வாகனங்களால் பயணிக்க முடியும்.
எனவே சென்னை-பெங்களூர், பெங்களூர்-சென்னை இடையேயான பயணம் மிகவும் எளிமையான ஒன்றாக மாறும். அத்துடன் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியிலும், சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே சாலை மிகவும் முக்கியமான பங்களிப்பை வழங்கும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications








