சீனாவிற்கு இந்தியா ’செக்’: எல்லையில் மிக நீளமான ஆற்றுப்பாலத்தை எழுப்பிய இந்தியா- காரணம் என்ன?
9.15 கிலோ மீட்டர் தொலைவில் இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப்பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
சீனாவில் எல்லைக்கு அருகில் இந்தியா, நாட்டின் நீளமான ஆற்றுப்பாலத்தை கட்டமைத்துள்ளது. வரும் 26ம் தேதி இப்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார்.

ஆறுகளுக்கு மீதாக கட்டப்படும் பாலங்களில் இந்தியா, நாட்டின் மிக நீளமான பாலத்தை அசாம் மாநிலத்தில் கட்டமைத்துள்ளது.
9.15கிலோ மீட்டர் தொலைவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆற்றுப்பாலம் சீனாவின் எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

பிரம்மபுத்திரா நதியின் மேல் அமைந்திருக்கும் இந்த பாலம் அசாமின் தோலா மற்றும் சத்தியா என்ற இரு பகுதிகளுக்கு மத்தியில் கட்டப்பட்டுள்ளது.
பாஜக அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இந்த பாலத்தை நேரடியாக சென்று 26ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

மும்பையின் பாந்தரா முதல் வோர்லி வரையில் 5 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட பாலம் தான் இந்தியாவின் மிக நீளம் கொண்டதாக இருந்து வந்தது.
விரைவில் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் தோலா-சத்தியா பாலம் இனி இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப்பாலம் என்ற பெயர் பெறவுள்ளது.

சீனா மற்றும் இந்தியாவின் எல்லை பங்கீட்டு பிரச்சனைகளால் இந்தியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள அருணாச்சல பிரதேசம் எப்போதும் பதற்றம் நிறைந்த மாநிலமாக உள்ளது.
இதனால் எப்போதும் இந்தியா அம்மாநில எல்லைப்புறத்தை இராணுவம் கொண்டு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

எப்போது வேண்டுமானாலும் அவசர நிலை எழலாம் என்ற சூழல் இப்பகுதிகளில் உருவாகியுள்ளதால், இதற்காகவே இந்தியா பிரம்மபுத்திர நதியின் மீது தோலா-சத்தியா ஆற்றுப்பாலத்தை கட்டமைத்துள்ளது.
சீனாவின் நெருக்கடியை சமாளிக்க எளிதான ஒரு போக்குவரத்து வசதியாக இந்த ஆற்றுப்பாலம் இராணுவ தேவைகளுக்கு பயன்படுத்தப்படும்.

2011ம் ஆண்டு தொடங்கப்பட்ட இதற்கான பணிகள் 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டின் தொடக்கத்தில் தான் நிறைவுப்பெற்றன.
60 டன் எடைக்கொண்ட இராணுவ டாங்குகளை தாங்கும் அளவிற்கான திறனுடன் சுமார் ரூ.950 கோடி செலவில் இந்தியா தோலா-சத்தியா ஆற்றுப்பாலத்தை கட்டமைத்துள்ளது

அசாம் மாநிலத்தின் தலைநகரமான திஸ்பூர்லிருந்து தோலா-சத்தியா ஆற்றுப்பாலம் 300 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
அதேபோல அருணாச்சால பிரதேசத்தின் தலைநகரான இத்தாநகருக்கும் இதற்கும் 300 கிலோ மீட்டர் தூரம்.
மேலும் சீனாவின் எல்லையிலிருந்து தோலா-சத்தியா ஆற்றுப்பாலம் 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இராணுவ பயன்பாட்டை காரணமாக காட்டி தோலா-சத்தியா ஆற்றுப்பாலம் கட்டப்பட்டு இருந்தாலும். பொதுமக்கள் போக்குவரத்திற்கு இது பெரியளவில் பயன்படும்.
அசாம் முதல் அருணாச்சால பிரதேசத்திற்கு செல்லும் பல மணிநேரமாகும் பயணம் இனி 4 மணி நேரமாக குறையும்.

2015ம் ஆண்டே மக்கள் போக்குவரத்திற்காக திறக்கப்பட வேண்டிய இந்த பாலம், மத்தியில் ஆட்சி மாற்றம் நடந்ததன் காரணமாக கட்டமைப்புகளால் தாமதமாகி தற்போது நிறைவுப்பெற்றுள்ளது.

மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து துறையின் முக்கிய பணியாக இருந்த தோலா-சத்திய ஆற்றுப்பாலம் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது அசாம் மற்றும் அருணாச்சல மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து இந்தியளவில் சாலைப் பணிகளில் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சி சார்ந்த பணிகளில் தொடர்ந்து மத்திய அரசு கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








