2015இல் சந்தித்தார், உலகின் No.1 பணக்காரர் ஆனார்... எலான் மஸ்க்கை பிரதமர் மோடி மீண்டும் சந்திக்கிறாரா?
அமெரிக்காவிற்கு அரசியல் பயணமாக சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, டெஸ்லா கார் நிறுவனரும் உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க்கை அங்கு சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது எந்த அளவிற்கு உண்மையானது? நரேந்திர மோடியின் அமெரிக்க பயண ஷெட்யூல் குறித்த விபரங்களை இனி பார்க்கலாம்.
ஜூன் 21ஆம் தேதி நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச யோகா தின விழாவில் கலந்து கொள்வதற்காக நம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். நம் பிரதமரின் இந்த அமெரிக்க பயணம் இன்று (ஜூன் 20) துவங்குகிறது. நாளை (ஜூன் 21) அமெரிக்காவில் தரையிறங்கியவுடன் யோகா தின கொண்டாட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

அதன்பின் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கும் பிரதமர் மோடி, ஜூன் 24ஆம் தேதி வரையில் அமெரிக்காவில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள உள்ளார். இதற்கிடையில் டெஸ்லா சிஇஓ-வும், பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரின் தற்போதைய உரிமையாளர்களுள் ஒருவருமான எலான் மஸ்க்கையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
எலான் மஸ்க்கை பிரதமர் மோடி சந்திப்பது இது முதல்முறையல்ல. ஏற்கனவே 2015இல் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலையில் வைத்து எலான் மஸ்க்கை மோடி அவர்கள் சந்தித்து இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட, இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அந்த சந்திப்பு நடைபெற்ற சமயத்தில் டுவிட்டர் எலான் மஸ்க்கின் கட்டுப்பாட்டில் இல்லை.

அதன்பின்பே டுவிட்டரை சொந்தமாக்கிய எலான் உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் சில காலம் இருந்தார். இவ்வாறு 2015இல் இருந்து எலான் மஸ்க் பல மாற்றங்களை கண்ட போதிலும், டெஸ்லாவின் இந்திய வருகை அப்போதில் இருந்து இப்போதுவரையில் அப்படியே உள்ளது. 2015இல் எலான் மஸ்க்கை சந்தித்த போது, இந்தியாவிற்கு டெஸ்லாவை கொண்டுவருவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பார் என நினைக்கிறோம்.
அதேபோன்று, இந்த முறை சந்திப்பின்போதும் டெஸ்லாவின் இந்திய வருகை குறித்து இவர்கள் இடையேயும் பேச்சுவார்த்தை இருக்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் செய்தியாளர் ஒருவர் எலான் மஸ்க்கிடம், "இந்திய சந்தையில் ஆர்வம் உள்ளதா?" என கேட்டு இருந்தார். இதற்கு எலான் மஸ்க், "நிச்சயமாக" என கூறியிருந்தார். அத்துடன் இந்த 2023ஆம் வருடத்திற்கு உள்ளாக இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் இடத்தை டெஸ்லா இறுதிச்செய்யும் எனவும் தெரிவித்து இருந்தார்.

எலானின் இந்த பேட்டிக்கு பின்பே, சற்று அமைதியாகி இருந்த டெஸ்லாவின் இந்திய வருகை குறித்த பேச்சுகள் மீண்டும் அதிகமாகியுள்ளன. இந்திய சந்தைக்குள் டெஸ்லா நுழைய ஆயத்தமாகி வருவதாக கடந்த பல வருடங்களாகவே கூறப்பட்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன், கர்நாடகா அல்லது தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமையலாம் என்றும், பின்னர் அது உறுதிச்செய்யப்பட்டு கர்நாடகாவில் டெஸ்லா தொழிற்சாலை அமையவுள்ளது என்றெல்லாம் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இதுவரையில் ஒன்றும் நடந்தது போல் தெரியவில்லை.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: டெஸ்லா ஓர் பிரீமியம் தரத்திலான எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமாகும். இதனாலேயே, தங்களது பிராண்டை இந்தியர்கள் ஏற்று கொள்வார்களா என்கிற பயம் டெஸ்லாவிற்கு உள்ளது. இதனால்தான் அருகில் உள்ள சீனாவில் இருந்து கார்களை கொண்டுவந்து இந்தியாவில் விற்பனை செய்ய சில வருடங்களுக்கு முன்பு டெஸ்லா முயன்றது. ஆனால் இதற்கு நமது மத்திய அரசு முற்றிலுமாக சம்மதிக்கவில்லை. தற்போது அமெரிக்கா செல்லும் இந்திய பிரதமரின் சுற்றுப்பயணத்திலாவது இதற்கு ஓர் முடிவு கிடைக்குமா என்பதை பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









