ஏர் இந்தியா விற்பனைக்கு... பிரதமர் விமானத்துக்கு வந்த சோதனை!
ஏர் இந்தியா நிறுவனம் விற்பனைக்கு என்ற நிலையில், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் பயன்படுத்துவதற்கு புதிய விமானங்களை கையகப்படுத்துவதற்கு இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏர் இந்தியா நிறுவனம் தனியாரிடம் விற்பனை செய்வதற்கு அரசு திட்டமிட்டு இருக்கும் நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் பயன்படுத்தும் போயிங் 747 விமானங்களை பராமரிப்பது குறித்த விஷயத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விமானங்களை வாங்குவதா அல்லது புதிய விமானங்களை பிரதமருக்கு வாங்குவதா என்ற ஆலோசனை தீவிரமாக நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட விவிஐபி.,கள் பயன்படுத்துவதற்காக போயிங் 747 விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த விமானங்கள் ஏர் இந்தியா ஒன் என்ற சிறப்பு குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகின்றன.

இந்த விமானங்களில் விவிஐபி.,கள் மற்றும் அவர்களுடன் செல்லும் அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் தங்குவதற்காகவும், ஆலோசனைகள் நடத்துவதற்காகவும் பல விசேஷ அறைகளை கொண்டதாக இருக்கின்றன.

மேலும், சேட்டிலைட் போன் வசதி, பொழுதுபோக்கு வசதிகள், சிறிய அறுவை சிகிச்சை அரங்கம், சமையல் செய்யும் வசதிகளும் இந்த விமானங்களில் உள்ளன.

இந்த விமானங்கள் தற்போது ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமானதாக உள்ளன. இவற்றின் பராமரிப்புப் பணிகளை ஏர் இந்தியாவும், இயக்குதல் மற்றும் பாதுகாப்புப் பணிகளை இந்திய விமானப் படையும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், இந்த விமானங்களை தொடர்ந்து விவிஐபி.,கள் பயணங்களுக்கு பயன்படுத்துவதில் சிக்கல் எழும் நிலை உள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசு துறைகள் ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. மேலும், இந்த போயிங் 747 விமானங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக புதிய விமானங்களை வாங்குவதற்கும் மத்திய அரசிடம் திட்டம் உள்ளது.

இதற்காக புதிய போயிங் 777 விமானங்களை வாங்குவதற்கான திட்டமும் மத்திய அரசிடம் உள்ளது. இந்த புதிய போயிங் 777 விமானங்களை இந்திய விமானப்படையே கொள்முதல் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இயக்குதல், பராமரிப்புப் பணிகளையும் இந்திய விமானப்படையே மேற்கொள்ளும். எனவே, ஏர் இந்தியா நிறுவனம் விற்பனை செய்யப்பட்டால், இனி விவிஐபி., விமானங்களை இந்திய விமானப்படையின் கட்டுப்பாட்டில் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய போயிங் 777 -300 ரக விமானம்தான் பிரதமர் உள்ளிட்ட விவிஐபி.,களின் பயன்பாட்டிற்கு வாங்கப்பட உள்ளன. இந்த விமானத்தில் பிரதமரின் முகாம் அலுவலகம், படுக்கை வசதி கொண்ட தனி அறை இருக்கும்.

இந்த விமானத்தில் 2,000 பேருக்கு தேவையான உணவுப் பொருட்கள் கையிருப்பில் வைக்கப்பட்டு இருக்கும். நவீன அறுவை சிகிச்சை வசதி,19 தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளிட்டவை இந்த விமானத்தில் இருக்கும்.

ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் வசதிகள், அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கான சேட்டிலைட் போன் வசதி உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கும். மற்றொரு விமானம் மூலமாக எரிபொருள் நிரப்புவதற்கான வசதியையும் இந்த விமானங்கள் பெற்றிருக்கும்.

ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் அதிகபட்சமாக 17,500 கிமீ தூரம் வரை பறக்கும். எனவே, எரிபொருள் நிரப்புவதற்காக இடையில் நிறுத்தாமல் மிக நீண்ட தூர வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள முடியும்.

ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் இந்த புதிய போயிங் 777 விமானங்கள் பிரதமர் உள்ளிட்ட விவிஐபி.,களின் பயன்பாட்டிற்காக வாங்க திட்டமிடப்பட்டுள்ளன. இந்த விமானங்களை கையகப்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வந்த நிலையில், தற்போது ஏர் இந்தியா நிறுவனம் விற்பனைக்கு என்ற தகவல் சற்றே தாமதத்தை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications








