எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே!! சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்!
வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறுவதும், அதனை போலீஸார் கண்டறிந்து அத்தகையவர்களுக்கு அபராதம் விதிப்பதும் உலகம் முழுவதும் பரவலாக நடைபெறக்கூடிய ஒன்று.

நம் நாட்டில் சாலையில் வாகனம் ஓட்டுவோரை கண்டறிய போலீஸார் முக்கிய சாலைகளின் ஓரத்தில் நின்றப்படி கடந்து செல்லும் வாகன ஓட்டிகளை கண்காணித்து கொண்டிருப்பர். ஆனால் போலாந்து நாட்டில் இவ்வாறெல்லாம் போலீஸார் சாலையில் நிற்பது இல்லையாம்.

ஏனெனில் அந்த நாட்டில் சாலை விதி மீறுவோர்கள் மற்றும் சாலையில் நடைபெறும் விபத்துகளை கண்காணிக்க ட்ரோன்களை போலீஸார் பயன்படுத்தி வருகின்றனர். தங்களது ட்ரோன்கள் எவ்வாறு வாகனங்களை கண்காணிக்கின்றன என்பதை வீடியோவாக போலாந்து போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோவில், சில கார்களும், மோட்டார்சைக்கிள்களும் தங்களுக்கு முன்னால் குறைந்த வேகத்தில் செல்லும் வாகனங்களை வெள்ளை கோடுகளை தாண்டி சென்று முந்தி செல்வதை பார்க்க முடிகிறது. அந்த சமயத்தில் நிச்சயம் வாகன ஓட்டிகளுக்கு தாம் போலீஸாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறோம் என்பது தெரிய வாய்ப்பு இல்லை.

ஏனெனில் இந்த போலீஸ் ட்ரோன்கள், வழக்கமான டிஜிஐ-ஸ்டைல் ட்ரோன்களை காட்டிலும் அளவில் சிறியதாகும். தரையில் இருந்து சற்று உயரம் சென்றாலே இவை கண்ணிற்கு புலப்படாதவை. ஆனால் வழக்கமாக அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு நன்கு தெரிந்திருக்கும், இந்த பகுதியில் ட்ரோன்கள் உள்ளன என்று.

சாலை விதிமீறல்களில் ஈடுப்படுவோரை அடையாளம் காண ட்ரோன்களை போலீஸார் பயன்படுத்துவது இது ஒன்றும் புதியது அல்ல. இங்கிலாந்து போலீஸார் தான் முதன்முதலாக 2019இல் உயர்தெளிவு கொண்ட கேமிராக்களுடன் ட்ரோன்களை பயன்படுத்த ஆரம்பித்தனர்.

தற்போதும் இங்கிலாந்தில் பல மாகாணங்களில் ட்ரோன்களை பயன்படுத்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில் ஹென்லே & லாங்க்ஃபோர்ட் போலீஸார் கடந்த மே மாதம் ட்ரோன்களை பறக்கவிட்டு சோதித்து பார்த்தது தொடர்பான ட்விட்டை தான் கீழே பார்க்கிறீர்கள்.

ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து நகர போலீஸார் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும், சட்ட விரோதமாக நடத்தப்படும் வாகன பந்தய போட்டி அமைப்பாளர்களை கைது செய்வதற்கும் ட்ரோன்களை இந்த 2021ஆம் ஆண்டில் இருந்து பயன்படுத்தி வருகின்றனர்.

அமெரிக்காவிலும் ட்ரோன்களை போலீஸார் பயன்படுத்துகின்றனர். ஆனால் இவ்வாறான சாதாரண சாலை விதிமீறுவோர்களை பிடிப்பதற்காக இல்லாமல், முக்கிய குற்றவாளிகளை கண்காணிப்பதற்கு, முக்கிய வழக்குகளில் முதன்மையான சாட்சியாக விளங்குவோரை கண்காணிப்பதற்காக என பெரிய பெரிய விஷயத்திற்காகவே பயன்படுத்துகின்றனர்.


Click it and Unblock the Notifications








