வியர்வை சொட்ட சொட்ட சைக்கிளில் உணவு டெலிவரி செய்த இளைஞருக்கு புதிய பைக் வாங்கி தந்த காவல் துறையினர்!
சைக்கிளில் உணவு டெலிவரி செய்த இளைஞருக்கு காவல் துறையினர் புதிய மோட்டார்சைக்கிள் வாங்கி கொடுத்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரை சேர்ந்த காவல் துறையினர், ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு தற்போது மோட்டார்சைக்கிள் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஊழியர் வியர்வை சொட்ட சொட்ட வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்வதை பார்த்து, காவல் துறையினர் மனம் கலங்கினர்.

இதன்பின் 22 வயதான அந்த இளைஞருக்கு காவல் துறையினர் புதிய மோட்டார்சைக்கிளை வாங்கி கொடுத்துள்ளனர். தற்போது அந்த இளைஞர், மோட்டார்சைக்கிளில் உற்சாகமாக உணவு டெலிவரி செய்து வருகிறார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள விஜய் நகர் போலீஸ் ஸ்டேஷனில் இன்-சார்ஜ் ஆக இருப்பவர் தெஹ்ஜீப் க்வாசி (Tehzeeb Qazi).

இவர் சமீபத்தில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஜே ஹால்டே (Jay Halde) என்பவர் வேகமாக சைக்கிள் ஓட்டி கொண்டிருந்தார். அவரிடம் பேசியதில், ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் ஒன்றில் அவர் பணியாற்றி வருவது தெரியவந்தது. வீடுகளுக்கு உணவு பார்சல்களை டெலிவரி செய்வதற்காக வேகமாக சைக்கிள் ஓட்டியதில் அவர் உடல் வியர்வையில் நனைந்திருந்தது.

இதை கண்ட தெஹ்ஜீப் க்வாசி மனம் வருந்தினார். இதன்பின் தன்னுடன் பணியாற்றும் காவலர்களுடன் இணைந்து, ஜே ஹால்டேவிற்கு புதிய மோட்டார்சைக்கிள் ஒன்றை தெஹ்ஜீப் க்வாசி வாங்கி கொடுத்துள்ளார். இதுகுறித்து தெஹ்ஜீப் க்வாசி கூறுகையில், ''ஜே ஹால்டேவிடம் பேசியதில் இருந்து எங்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியவந்தன.

அவரது குடும்பம் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து கொண்டுள்ளது. எனவே சொந்தமாக மோட்டார்சைக்கிள் வாங்குவதற்கு தேவையான பணம் ஜே ஹால்டேவிடம் இல்லை'' என்றார். இந்த விஷயங்கள் தெரிந்ததையடுத்துதான், ஜே ஹால்டேவிற்கு புதிய மோட்டார்சைக்கிளை வாங்கி தருவதற்கு காவல் துறையினர் முடிவு செய்தனர்.

தெஹ்ஜீப் க்வாசி மற்றும் விஜய் நகர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் காவலர்கள் இணைந்து, தங்களால் இயன்ற அளவிற்கு, மோட்டார்சைக்கிளுக்கு பணம் வழங்கினர். இதன்பின் அங்குள்ள ஆட்டோமொபைல் ஷோரூம் ஒன்றில் அதனை முன்பணமாக செலுத்தி, ஜே ஹால்டேவிற்கு புதிய மோட்டார்சைக்கிள் ஒன்றை வாங்கினர்.

இங்கே மற்றொரு விஷயத்தை கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். மோட்டார்சைக்கிளை வாங்கி கொடுத்ததும், ஜே ஹால்டே காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் புதிய மோட்டார்சைக்கிளுக்கு எஞ்சியுள்ள மாத தவணைகளை தானே கட்டி கொள்வதாகவும் காவல் துறை அதிகாரிகளிடம் ஜே ஹால்டே தெரிவித்து விட்டார்.

இதுகுறித்து ஜே ஹால்டே கூறுகையில், ''எனக்கு உதவி செய்த காவல் துறை அதிகாரிகளுக்கு நன்றி. முதலில் சைக்கிளில் மட்டுமே உணவு டெலிவரி செய்து கொண்டிருந்தேன். அப்போது என்னால் 6 முதல் 8 உணவு பார்சல்களை மட்டுமே டெலிவரி செய்ய முடிந்தது. ஆனால் தற்போது என்னால் ஒரு இரவில் 15-20 உணவு பார்சல்களை டெலிவரி செய்ய முடிகிறது.

தற்போது மோட்டார்சைக்கிளில் உணவு டெலிவரி செய்வதுதான் இதற்கு காரணம்'' என்றார். காவல் துறையினரின் இந்த நல்ல மனதிற்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. நெட்டிசன்கள் பலரும் காவல் துறையினரை பாராட்டி சமூக வலை தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் இந்தியாவில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில், கடும் வெயிலில் சைக்கிளில் உணவு டெலிவரி செய்தவர்களுக்கு சமூக வலை தளங்கள் மூலம் நிதி திரட்டி மோட்டார்சைக்கிள் வாங்கிய சம்பவங்களும் நடந்ததுண்டு. இந்த வரிசையில் தற்போது நடைபெற்றுள்ள சம்பவமும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆனால் ஜே ஹால்டேவிற்கு காவல் துறையினர் எந்த நிறுவனத்தின் மோட்டார்சைக்கிளை வாங்கி கொடுத்துள்ளனர்? அதன் விலை எவ்வளவு? போன்ற விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. எது எப்படியோ, பொதுவாக சமூக வலை தளங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் காவல் துறையினர் தற்போது பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கின்றனர்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








