நடுரோட்டில் தீப்பிடித்த கார்... போலீஸாரால் மயிரிழையில் காப்பாற்றப்பட்ட கல்யாண மாப்பிள்ளை
தலைநகர் டெல்லியில் திருமண மாப்பிள்ளை ஒருவர் சென்ற கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்துள்ளது. சில தீப்பொறிகள் வெளிவந்த போதே சோதனையில் இருந்த போலீஸார் கண்டறிததால் காரில் இருந்தவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

கொரோனா வைரஸ் மற்ற அனைத்து நாடுகளை போல இந்தியாவிலும் மிக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸினால் பொருளாதாரம் மிகவும் சரிவடைந்துள்ள நிலையில் ஆட்டோமொபைல் துறையும் இதுவரை காண அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

எந்த அளவிற்கு என்றால், கடந்த ஏப்ரல் மாதத்தில் டீலர் ஷோரூம்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் மாருதி சுசுகி உள்பட அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பூஜ்ஜிய விற்பனை எண்ணிக்கையை தான் சந்தையில் பதிவு செய்துள்ளன.

மேலும் வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 3ஆம் தேதி முடியவிருந்த ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் திருமணத்திற்காக மண்டபத்திற்கு சென்று கொண்டிருந்த மாப்பிள்ளையின் கார் தீடிரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

டெல்லியின் தெற்கு சரிதா விஹார் பகுதியில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவத்தில் இருந்த மாப்பிள்ளையின் பெயர் பூபேந்தர் ஆகும். தனது நண்பருடன் ஹூண்டாய் ஐ20 மாடலில் ஊரடங்கினால் காலியாக இருந்த சாலையில் சென்று கொண்டிருந்த இவரை வழியில் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போலீஸார் சோதனை காரணமாக நிறுத்தியுள்ளனர்.

அப்போது தான் அங்கிருந்த போலீஸார் ஒருவர் காரில் சில தீப்பொறிகள் ஏற்படுவதை கண்டறிந்தார். உடனே அவர் மாப்பிள்ளை பூபேந்தரையும், அவருடன் இருந்தவரையும் எச்சரித்து காரில் இருந்து வெளியேற்றியுள்ளார். அவர்கள் வெளியே வந்த சில நிமிடங்களில் கார் கொளுந்துவிட்டு எரிந்துள்ளது.

அந்த சமயத்தில் அந்த சாலையில் வேறெந்த வாகனமும் செல்லாததால் பெரிய அசாம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. அதேபோல் ஊரடங்கினால் தான் போலீஸார் பூபேந்தரின் காரை நிறுத்தியுள்ளனர், தீப்பொறி வருவதை கண்டறிந்துள்ளனர். இதுவே ஊரடங்கு இல்லை என்றால் கார் இயக்கத்தில் இருந்தபோதே கொளுந்துவிட்டு எரிந்திருக்கக்கூடும்.

கார் சிறிது எரிய துவங்கியபோதே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுவிட்டது. பின்னர் கல்யாண மாப்பிள்ளையையும், அவரது நண்பரையும் போலீஸார் தங்களது வாகனத்தில் ஏற்றி திருமணம் நடைபெறும் இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். கார் தீப்பிடித்ததற்கான காரணம் சரியாக தெரியவில்லை.

ஊரடங்கினால் வாகன பழுது பார்க்கும் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் முக்கியமான பணிக்காக வீட்டை விட்டு செல்வோர் தங்களது கார்களின் நிலையை புறப்படும் முன்னரே சரிப்பார்பதே இதற்கு ஒரே தீர்வு. இல்லையேல் மிக பெரிய அளவிலான பிரச்சனைகளில் சிக்கி கொள்ள நேரிடும்.


Click it and Unblock the Notifications








