கூச்சமே இல்லாமல் காசு பிடுங்கிய தமிழக போலீஸ்காரர்... ரகசியமாக வீடியோ எடுத்து சிக்க வைத்த இளைஞர்கள்
அனைத்து ஆவணங்களையும் சரியாக வைத்திருந்த இளைஞர்களிடம் தமிழக போலீஸ்காரர் ஒருவர் கூச்சமே இல்லாமல் பணத்தை பறிக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் வாகன ஓட்டிகளிடம் இருந்து போலீசார் லஞ்சம் வாங்குவது என்பது சர்வ சாதாரணமாக நடந்து கொண்டுள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு முறையாக அபராதம் விதிப்பதற்கு பதில், அவர்களிடம் இருந்து போலீசார் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக பெற்று கொள்கின்றனர்.

ஆனால் உங்களிடம் வாகனத்தின் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறது. போக்குவரத்து விதிகள் அனைத்தையும் நீங்கள் முறையாக பின்பற்றியுள்ளீர்கள். அப்படி இருந்தும் கூட போலீசார் உங்களிடம் லஞ்சம் கேட்டால் என்ன செய்வீர்கள்? கோவம் வரத்தானே செய்யும். அப்படி ஒரு நிகழ்வு தற்போது நடைபெற்றுள்ளது.

அதுவும் நமது தமிழ்நாட்டில். தற்போது மோட்டார்சைக்கிள்களில் ஒரு குழுவாக ''லாங் டிரிப்'' அடித்து விட்டு வரும் வழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அவ்வாறு பயணம் செய்யும் இளைஞர்கள் மோட்டார்சைக்கிளின் ஆவணங்கள் அனைத்தையும் பெரும்பாலும் சரியாக வைத்து கொள்கின்றனர். அத்துடன் போக்குவரத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றுகின்றனர்.

இருந்தபோதும் கூட சில சமயங்களில் போலீசாரிடம் சிக்கி கொண்டு பணத்தை இழந்து விடுகின்றனர். தமிழகத்தில் தற்போது அரங்கேறியிருக்கும் சம்பவம் இதற்கு ஒரு உதாரணம். இளைஞர்கள் சிலர் ஒரு குழுவாக சமீபத்தில் தமிழகத்திற்கு மோட்டார்சைக்கிள்களில் வந்திருந்தனர். அனேகமாக அவர்கள் கேரளாவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிகிறது.

வழியில் போலீஸ்காரர் ஒருவர் அவர்களை நிறுத்தினார். பின்னர் அவர்களின் ஆவணங்களை எல்லாம் அவர் சோதனையிட்டார். பேப்பர்களை எல்லாம் காட்டிய பின், அந்த போலீஸ்காரருக்கு நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட அவர்கள் தயாரானார்கள். ஆனால் அந்த போலீஸ்காரரோ அவர்களை அங்கிருந்து செல்ல அனுமதிக்கவில்லை.

உங்கள் அனைவரிடமும் ஹெல்மெட் இருக்கிறதா? என அவர் கேட்டார். இதற்கு எங்களிடம் எல்லாம் சரியாக இருக்கிறது என அந்த இளைஞர்கள் பதில் அளித்தனர். அவர்களிடம் எல்லாமே சரியாகதான் என்பதை தெரிந்து கொண்ட பிறகு, எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? என அந்த போலீஸ்காரர் எண்ணினார். அந்த குழுவில் மொத்தம் 5 பேர் இருந்தனர்.

பின்னர் 100 ரூபாய் தரும்படி அந்த போலீஸ்காரர் கேட்டார். கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல், அவர் பணம் கேட்டதால் இளைஞர்கள் அதிர்ச்சியடைந்தனர். இருந்தபோதும் எதற்கு பணம் தர வேண்டும்? என அந்த போலீஸ்காரரிடம் அவர்கள் சிறிது நேரம் பேசி பார்த்தனர். ஆனால் எதுவும் வேலைக்கு ஆகவில்லை.

பணம் வாங்கியே தீருவது என்பதில் அந்த போலீஸ்காரர் குறியாக இருந்தார். எனவே 100 ரூபாயை கொடுத்து விட்டு அங்கிருந்து செல்ல இளைஞர்கள் முடிவு செய்தனர். ஆனால் அங்கு நடந்த சம்பவங்கள் அனைத்தும் ஹெல்மெட்டுடன் இணைக்கப்பட்ட கேமராவில் பதிவாகி கொண்டே இருந்தது. கேமரா ரெக்கார்ட் செய்து கொண்டிருக்கிறது என்பது அந்த போலீஸ்காரருக்கு தெரியவில்லை.

தற்போது பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதனை நீங்கள் கீழே காணலாம்.
ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தும், போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றியிருந்தும் 100 ரூபாயை இந்த இளைஞர்கள் லஞ்சமாக கொடுத்துள்ளனர். இதேபோல்தான் பல்வேறு இடங்களிலும் போலீஸ்காரர்கள் வழிப்பறி கொள்ளையர்களாக மாறி வருகின்றனர். இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








