வாகன ஓட்டிகளை நிறுத்துவதற்கு லத்தியை சுழற்றினால்... போலீசார் மீது சாட்டையை சுழற்றும் நீதிமன்றம்!
வாகன ஓட்டிகளை லத்தியை சுழற்றி போலீசார் நிறுத்துவது குறித்து முக்கிய அறிவுறுத்தல்களை கேரள உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கிறது . இதுகுறித்த முக்கிய விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் புதிய போக்குவரத்து அபாரத விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனையடுத்து, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரை பிடிப்பதற்கு போலீசார் அதிக தீவிரம் காட்டி வருகின்றனர். எனினும், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரை பிடிப்பதற்காக போலீசார் காட்டும் தீவிரம் காரணமாக பல விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாவிட்டது.

இதனால், வாகன ஓட்டிகள் உயிரிழக்கும் அதிர்ச்சி சம்பவங்களும் நடந்து வருகின்றன. ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை பிடிப்பதற்கு போலீசார் திடீரென குறுக்கே பாய்ந்து தடுப்பதும், லத்தியை சுழற்றி அடிப்பதும் வழக்கமாகிவிட்டது. இதனால், ஏற்படும் உயிர்பலிகள் குறித்த செய்திகள் தொடர்கதையாகி இருக்கின்றன.

இந்த நிலையில், வரும் டிசம்பர் 1 முதல் கேரளாவில் இருசக்கர வாகனத்தை ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்குவதற்கான உத்தரவை கேரள உயர்நீதிமன்றம் பிறப்பித்தது. அப்போது, விதிமீறும் வாகன ஓட்டிகளை நிறுத்துவது குறித்து முக்கிய வழிகாட்டு முறையையும் போலீசாருக்கு கேரள உயர் நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.

அதில், வாகனத் தணிக்கையின்போது போலீசார் சில நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். ஹெல்மெட் இல்லாமல் அல்லது நிற்காமல் செல்லும் வாகன ஓட்டிகளை லத்தியை சுழற்றி அடிக்கக்கூடாது. அதேபோன்று, குறுக்கே பாய்ந்து சென்று தடுப்பது, விரட்டிச் சென்று பிடிப்பது உள்ளிட்டவற்றை போலீசார் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு முறைகளின்படி, பணியில் இருக்கும் அதிகாரி அல்லது இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வாகனத் தணிக்கையின்போது, குறிப்பிட்ட வழிகாட்டு முறைகளின் அடிப்படையிலே சம்பந்தப்பட்ட வாகனத்தை போலீசார் சமிக்ஞை காட்டி நிறுத்த வேண்டும். இதைதவிர்த்து, வாகன ஓட்டிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அபாயகரமான முறைகளை கையாளக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

அதேபோன்று, வாகன ஓட்டிகளுக்கு நன்கு பார்வையில் படும் இடத்தில் வாகனத் தணிக்கைகள் நடத்தப்பட வேண்டும். மறைந்திருந்து பிடிப்பது போன்ற செயல்களில் போலீசார் ஈடுபடக்கூடாது உள்ளிட்டவை குறித்தும் உயர்நீதிமன்றம் எடுத்துரைத்துள்ளது.

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை சிசிடிவி கேமரா, மொபைல்போன் கேமரா, போலீஸ் வாகனத்தில் உள்ள கேமரா மூலமாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கலாம். அதேபோன்று, சிவப்பு விளக்கு அல்லது சமிக்ஞை சாதனங்கள் உதவியுடன் மட்டுமே நிறுத்த வேண்டும் என்றும் போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோரை கண்டறிவதற்கு நவீன தொழில்நுட்ப சாதனங்களை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்று போலீஸ் உயர் அதிகாரிகளையும் கேரள உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications








