விபத்துகளை குறைக்க கம்மி பட்ஜெட்டில் போலீசார் போட்டுள்ள பிளான்!! நம்ம ஊர் ஆளுங்க கிட்ட வொர்க்-அவுட் ஆகுமா?
சட்டம், ஒழுங்கை பாதுகாப்பது போலீஸாருக்கு எந்த அளவிற்கு தலைவலியாக உள்ளதோ அதே அளவிற்கு போக்குவரத்து விதிமீறல்களை தடுப்பதும் பெரிய வேலையாக உள்ளது. ஏனெனில், 140 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் இந்தியா போன்ற மிக பெரிய நாட்டில் சாலையில் ஒவ்வொரு வாகனங்களையும் தொடர்ந்து கண்காணிப்பது என்பது சவாலான காரியம் ஆகும். இதனை அடுத்தே, வெளிநாடுகளில் போலீசார் பின்பற்றும் ஒரு யுக்தியை இந்தியாவில் ஒரு மாநில போலீசார் பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். யார் அந்த இந்திய மாநில போலீசார் என்பதையும், அப்படி என்ன மாதிரியான யுக்தியை கையாள துவங்கியுள்ளனர் என்பதையும் இனி தொடர்ந்து பார்க்கலாம்.
அதிவேக பயணம் எப்போதுமே ஆபத்தானது என்பதை நமது செய்தித்தளத்தில் தொடர்ந்து கூறிக்கொண்டு வருகிறோம். இருப்பினும் அதிவேக பயணங்களை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையில் பெரியதாக மாற்றமில்லை. அதிவேக பயணம் மட்டுமின்றி, மது போதையில் வாகனம் ஓட்டுவது, டிராஃபிக் சிக்னல்களை பின்பற்றாதது போன்ற செயல்களும் சாலை விபத்துகளுக்கு காரணமாக உள்ளன.

இத்தகைய செயல்களை தடுப்பதற்காக சாலையெங்கிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இருப்பினும், ஒரு சிலர் எந்தவொரு உறுத்தலுமின்றி அபராதத்தை செலுத்திவிட்டு மீண்டும், மீண்டும் இவ்வாறான செயல்களை தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, விபத்து நடந்து முடிந்த பிறகு அபராதம் விதிப்பதில் எந்த பயனும் இல்லை. அது நடப்பதற்கு முன்னரே தடுப்பதுதான் புத்திச்சாலித்தனம் ஆகும்.
ஆதலால், கண்காணிப்பு கேமராக்கள் ஒருபக்கம் இருந்தாலும், முன்பை போல போலீசாரும் சாலைகளுக்கு வந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுப்பட வேண்டியதாகிறது. ஆனால், எல்லா சாலைகளுக்கும் போலீசாரால் செல்ல முடியாது என்பதால் கர்நாடக மாநில போலீசார் சில குறிப்பிட்ட சாலைகளில் போலீஸ் டம்மிகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதன்படி, கர்நாடகாவின் சில முக்கிய சாலைகளில் அட்டையால் உருவாக்கப்பட்ட போலீஸ் மற்றும் போலீஸ் ரோந்து வாகன டம்மிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை அருகே வந்து பார்த்தால் மட்டுமே டம்மி என்பதை அறிய முடியும். ஆகையால், தூரத்தில் இருந்து பார்க்கும் வாகன ஓட்டிகளுக்கு, காருடன் போலீசார் நின்றிருப்பது போன்றே தெரியும். இது சாலை விதிமீறல்களை தடுக்கும் என்பதால் இந்த நடவடிக்கையில் கர்நாடக போலீசார் இறங்கியுள்ளனர். இதே யுக்தியை ஜப்பான் உள்ளிட்ட வெளிநாட்டு போலீசாரும் பல வருடங்களாக பின்பற்றி வருகின்றனர்.
கர்நாடக சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த போலீஸ் டம்மிகள் குறித்த வீடியோ சுதாகர் என்பவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சில வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய இந்த வீடியோவில், போலீஸ் டம்மி மற்றும் அருகே டொயோட்டா இன்னோவா கார் டம்மி இருப்பதை காணலாம். ஆனால், உண்மையான இன்னோவா காரை காட்டிலும் இந்த இன்னோவா கார் டம்மி அளவில் சிறியதாக உள்ளது.

இவை டம்மிகள் என்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிய கூடாது என்பதற்காக காரின் சைரன் விளக்குகள் ஒளிரும் வகையில் வழங்கப்பட்டு இருப்பதையும் காணலாம். அதாவது, இந்த கார் டம்மிக்கு உண்மையான சைரன் விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோ கர்நாடகாவின் ஒரு நெடுஞ்சாலையில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இவ்வாறான டம்மிகளை பெங்களூர் நகரத்திலும் முக்கிய சாலைகளில் பார்க்க முடிகிறது.
சென்னை போக்குவரத்து போலீசார் போல் இல்லாமல், பெங்களூர் டிராஃபிக் போலீசார் பணியின்போது வித்தியாசமான தொப்பியை அணிக்கின்றனர். அந்த தொப்பியை இந்த போலீஸ் டம்மிகளிலும் பார்க்க முடிகிறது. பெங்களூரில் இன்னும் சில போலீஸ் டம்மிகள் சன்கிளாஸஸ் மற்றும் முக கவசங்களை அணிந்திருப்பதையும் பார்க்க முடியும். இந்த அலங்கரிப்புகள் யாவும் ஒன்றே ஒன்றுக்கு தான், போக்குவரத்து விதிமீறல்களை தடுப்பதாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இவ்வாறான போலீஸ் டம்மிகள் பல நாடுகளில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளவை ஆகும். இந்த யுக்தி ஒரு சில நாடுகளில் தோல்வியடைந்துள்ளது. ஏனெனில், தினந்தோறும் ஒரு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் இது டம்மி என்பதை எளிதாக கண்டுப்பிடித்து விடுகின்றனர். கர்நாடகாவில் இந்த யுக்தி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









