மீண்டும் சாட்டையை சுழற்றும் போலீஸ்... வாகன ஓட்டிகள் மீது அதிரடி நடவடிக்கை... என்னனு தெரியுமா?
காவல் துறையினர் மீண்டும் சாட்டையை சுழற்ற தயாராகி வருகின்றனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுப்பதற்காக, கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. எனவே அன்றைய தினத்தில் இருந்து, பஸ், ரயில், விமானம், ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், தனியார் டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களை இயக்குவதற்கு கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.

இதனை மீறி இயக்கப்பட்ட வாகனங்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதன்படி ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக தமிழகத்தில் தற்போது வரை சுமார் 5 லட்சம் வாகனங்களை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல் நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு, ஊரடங்கில் சமீபத்தில் பல்வேறு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கின. குறிப்பாக கடந்த மே 4ம் தேதிக்கு பிறகு, இயல்பு நிலை திரும்பியதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான தளர்வுகள் கொண்டு வரப்பட்டன. இதனால் நீண்ட நாட்களாக வெறிச்சோடி கிடந்த சாலைகள் மீண்டும் பரபரப்பாக மாற தொடங்கின.

பஸ், ரயில், விமானம், ஆட்டோ, டாக்ஸி என பொது போக்குவரத்திற்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டதுடன், பயணங்களுக்கும், தனியார் வாகனங்களை இயக்குவதற்கும் விதிக்கப்பட்டிருந்த கடும் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. ஆனால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

இதனால் தமிழக அரசு ஊரடங்கை மீண்டும் படிப்படியாக கடுமையாக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் தற்போது முழு ஊரடங்கு மீண்டும் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகம் தவிர நாட்டின் மற்ற ஒரு சில மாநிலங்களும் ஊரடங்கை கடுமையாக்க தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக வாகன இயக்கத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த விதிமுறைகளை மீறும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகள் மீண்டும் வேகம் எடுத்துள்ளன. குறிப்பாக உத்தர பிரதேச மாநிலம் கௌதம புத்தா நகர் மாவட்ட காவல் துறையினர் வாகன தணிக்கை மற்றும் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த மாவட்டத்தில்தான் உத்தர பிரதேச மாநிலத்தின் இரண்டு முக்கிய நகரங்களான நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகியவை உள்ளன.

இந்த இரு நகரங்களிலும் நேற்று ஒரே நாளில் (ஜூன் 23), சுமார் 1,600 வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கௌதம புத்தா நகர் போலீசார் தெரிவித்துள்ளனர். கோவிட்-19 வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறியதற்காக, அவர்கள் மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதே காரணத்திற்காக 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. வாகன இயக்கத்திற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட சூழ்நிலையிலும் காவல் துறையினர் இத்தகையை நடவடிக்கையை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் தற்போது 144 தடை உத்தரவு நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அம்மாவட்டத்தின் நகர்ப்புற பகுதிகளில் ஒரு சில இடங்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய சிகப்பு மண்டலத்தில் வருகின்றன. எனவே கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக போலீசார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு:

கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் 2,966 வாகனங்கள் சோதனையிடப்பட்டன. இதில், 1,589 வாகனங்களுக்கு சலான் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்திலும் வரும் நாட்களில் கட்டுப்பாடுகள் தீவிரமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

எனவே நீங்கள் அவசியம் இல்லாமல் வாகனங்களில் பயணம் செய்து கொண்டிருந்தால், அதனை போலீசார் பறிமுதல் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் அவசியம் இல்லாமல் வாகனங்களில் பயணம் செய்வதை தவிர்த்து விடுங்கள். இது கொரோனா தொற்றில் இருந்தும் உங்களை பாதுகாக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








