சில புதிய விதிகள் அறிமுகம்.. இந்த தவறுகளை செய்பவர்களின் லைசென்ஸை பறிமுதல் செய்ய அதிரடி உத்தரவு..
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை தண்டிப்பதற்காக, இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுடன் தற்போது புதிதாக மேலும் சில விதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை தண்டிப்பதற்காக, இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுடன் தற்போது புதிதாக மேலும் சில விதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த விதிகளை மீறினால், உங்கள் டிரைவிங் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்பட்டு விடும். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாவிட்டால்..
அவசரமாக சென்று கொண்டிருக்கும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடுவது ஒரு மனிதாபிமான செயலாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட மனிதாபிமான செயலை செய்யாதவர்கள் இனி கடும் பின் விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும்.

தற்போது வரும் பல புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களின் முன் பகுதியில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்னே சென்று கொண்டிருக்கும் வாகனங்களின் செயல்பாட்டை அந்த கேமரா எந்நேரமும் ரெக்கார்டு செய்து கொண்டே இருக்கும்.

அப்படி முன்னே சென்று கொண்டிருக்கும் கார், டூவீலர் போன்ற வாகனங்கள், ஆம்புலன்ஸிற்கு வழிவிடாமல், சாலையை பிளாக் செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு போலீசார் அபராதம் விதிப்பதுடன், டிரைவிங் லைசென்ஸையும் பறிமுதல் செய்து விடுவார்கள்.

அதிக சப்தத்தில் பாடல் ஒலித்தால்..
உங்கள் காரில் அதிக சப்தத்துடன் பாடல் கேட்பது சட்ட விரோதமானது. இந்த தவறை நீங்கள் செய்தால், போலீசாரால் அபராதம் விதிக்க முடியும். ஆனால் எவ்வளவு சப்தத்தில் பாடல் கேட்கலாம் என்ற அளவுகோலை நமது சட்டம் வரையறை செய்யவில்லை என்பது துரதிருஷ்டவசமானது.

ஆனால் அதிக சப்தத்தில் பாடல் ஒலிக்கிறது என போலீசார் நினைத்தால், சுயமாக முடிவெடுத்து ரூ.100 அபராதம் விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது. ஒருவேளை இதர வாகன ஓட்டிகளுக்கு இந்த சப்தம் தொல்லை தருகிறது என போலீசார் நினைத்தால், அபராத தொகை அதிகரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

அவ்வளவு ஏன்? உங்கள் டிரைவிங் லைசென்ஸை பறிமுதல் செய்துவிடும் அபாயமும் உள்ளது. எனவே மிதமான சப்தத்தில் இதமான பாடல்களை கேட்டு கொண்டு பயணிப்பதே நல்லது. அத்துடன் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்துபவர்களின் டிரைவிங் லைசென்சும் பறிமுதல் செய்யப்படலாம்.

செல்போன் பயன்படுத்தினால்..
டிரைவிங் செய்து கொண்டிருக்கையில், செல்போன் பயன்படுத்துவது சட்ட விரோதமானதாக கருதப்படுகிறது. எனவே நீங்கள் டிரைவிங் செய்து கொண்டிருக்கையில், செல்போன் பயன்படுத்துவதை போலீசார் பார்த்தால், அவர்களால் உங்களுக்கு அபராதம் விதிக்க முடியும்.

இந்த குற்றத்திற்காக டிரைவிங் லைசென்ஸை பறிமுதல் செய்யப்பட்டு விடும் அபாயமும் உள்ளது. ஆனால் நேவிகேஷன் பார்ப்பதற்காக மட்டும் செல்போனை பயன்படுத்தி கொள்ளலாம் என விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் நிறைந்த பகுதிகளில் கவனம்
ஒரு சில பகுதிகளில், குறிப்பிட்ட வேகத்தில் மட்டும்தான் செல்ல வேண்டும் என்ற வரையறைகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. ஸ்பீட் லிமிட் தொடர்பான பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும். இதை பின்பற்றுவது மிக மிக அவசியம்.

குறிப்பாக பள்ளிகள் நிறைந்த பகுதிகளில் பயணிக்கையில், ஸ்பீட் லிமிட்டை கடைபிடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒருவேளை பள்ளிகள் நிறைந்த பகுதிகளில், ஸ்பீட் லிமிட் பலகைகையை உங்களால் காண முடியாவிட்டால், மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தை தாண்டாதீர்கள்.

ஏனெனில் பள்ளிகள் நிறைந்த பகுதிகள் மற்றும் கட்டுமான பணி நடைபெறும் இடங்களில் ஸ்பிட் லிமிட்டை கடைபிடிக்காதவர்களின் டிரைவிங் லைசென்ஸை பறிமுதல் செய்யும் அதிகாரம் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ப்ளூடூத் மூலமாக போன் பேசினால்..
ப்ளூடூத் பயன்படுத்தி போன் பேசுவது இன்னமும் சட்டவிரோதமானதாகவே பார்க்கப்படுகிறது. ப்ளூடூத் மூலமாக நீங்கள் போன் பேசி கொண்டிருக்கையில், உங்களை போலீசார் பிடித்தால், லைசென்ஸ் பறிமுதல் செய்யப்பட்டு விடும்.

ஜீப்ரா க்ராஸிங்குகளில் கவனம்..
இன்னமும் கூட பல லட்சக்கணக்கான மக்களிடம் எந்தவித வாகனமும் இல்லை. அவர்கள் நடை பயணமாகவே பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். அப்படிப்பட்ட பாதசாரிகள் சாலையை கடக்க உதவும் வகையில், ஜீப்ரா க்ராஸிங் சாலைகளில் மார்க் செய்யப்பட்டிருக்கும்.

எனவே ஜீப்ரா க்ராஸிங்கிற்கு முன்னதாகவே உங்கள் வாகனத்தை நிறுத்திவிடுங்கள். பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு இடையூறு செய்யும் விதமாக ஜீப்ரா க்ராஸிங்கை கடந்து வாகனத்தை நிறுத்தினால், போலீசார் உங்களுக்கு அபராதம் விதிப்பார்கள்.

அத்துடன் இந்த குற்றத்தை செய்பவர்களின் டிரைவிங் லைசென்ஸை, அடுத்த சில மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து விடும் அதிகாரமும் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே ஜீப்ரா க்ராஸிங்குகளில் கவனமான இருப்பது நல்லது.

நடைபாதைகளில் டூவீலரை ஓட்டினால்..
சாலைகளை ஒட்டி, பாதசாரிகள் நடந்து செல்வதற்கு என தனியாக நடைபாதைகள் வழங்கப்பட்டிருக்கும். இது சிறிய அளவில் மட்டுமே இருக்கும் என்பதால், பெரும்பாலும் காரில் பயணிப்பவர்கள் செல்ல மாட்டார்கள்.

ஆனால் சில சமயங்களில் நீண்ட நேரம் சிகப்பு விளக்கு எரிகிறது அல்லது போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது என்றால், இரு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பயன்படுத்தும் நடைபாதையிலேயே தங்கள் வாகனத்தை ஓட்டி செல்கின்றனர்.

அத்தகைய நடைபாதைகள் பாதசாரிகளுக்காகதான் வழங்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அல்ல. இந்த குற்றத்தை செய்பவர்களின் டிரைவிங் லைசென்ஸை பறிமுதல் செய்ய போலீசாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ரேஸிங்கில் ஈடுபட்டால்..
ரேஸ் டிராக் மற்றும் ப்ரைவேட் ரோடுகளில் மட்டுமே ரேஸிங்கில் ஈடுபட வேண்டும். ஆனால் பொது மக்கள் பயன்படுத்தும் பப்ளிக் ரோட்டில், நீங்கள் ரேஸில் ஈடுபடுபவராக இருந்தால், உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே உங்களது ரேஸிங் ஆசைகளை ரேஸ் டிராக்குகளில் நிறைவேற்றி கொள்ளுங்கள். பப்ளிக் ரோட்டில் நீங்கள் ரேஸிங்கில் ஈடுபடுவதை போலீசார் கண்டறிந்தால், உங்கள் டிரைவிங் லைசென்ஸை பரிதாபமாக இழக்க வேண்டியது வரும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








