சென்னையில் போக்குவரத்து காவலர்கள் அத்துமீறலா... காவல்துறையினர் விளக்கம்!
வாகன ஓட்டிகளிடம் விதிமுறைகளே தெரியாமல் காவல்துறையினர் அடாவடி செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
விளக்கம்: இந்த செய்தியில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் குறித்து காவல்துறையிடம் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் குறித்த வீடியோ கடந்த ஆண்டு சாலை பாதுகாப்பு வாரத்தின்போது எடுக்கப்பட்டது என்றும், வாகனத் தணிக்கையின்போது தாறுமாறாக ஓட்டி வந்த பைக் ஓட்டிகளை நிறுத்தி தணிக்கை செய்ததாகவும் காவல்துறை தரப்பில் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்திடம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சாலை விதிகளை பேணிப் பாதுகாப்பதே போக்குவரத்து காவலர்களின் தலையாய கடமையாகும். ஆனால் காவல்துறையில் அடிப்படை விதிகளே தெரியாமல் இருக்கும் சில காவலர்களால் வாகன ஓட்டிகளுக்கு பல இன்னல்களும், இடையூறுகளும் ஏற்பட்டு வருவது கவலையளிப்பதாகவே உள்ளது.

சென்னையில் நடந்துள்ள ஒரு சம்பவத்தில் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து காவலர்கள் நடந்து கொள்ளும் விதம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளதோடு, அவர்கள் மீதான நம்பகத்தன்மையை குறைப்பதாகவும், வாகன ஓட்டிகளுக்கு காவலர்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களை வெளிச்சத்திற்கும் கொண்டுவந்துள்ளது.

பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் தங்களது இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் கூட்டாக அல்லது குழுவாக சேர்ந்து கிழக்குச் கடற்கரை சாலைகளில் பயணம் மேற்கொள்வதை பைக் மற்றும் கார் ரைடர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். சிலர் புதுச்சேரி வரையிலும், அல்லது மகாபலிபுரம் வரையிலும் கூட பயணிக்கின்றனர்.

இதைப்போன்ற சமயங்களில் கார்களில் செல்வோரை விட பைக் ரைடர்கள் தான் காவல்துறையினர் மூலம் அதிகப்படியான இடைஞ்சல்களை அனுபவிக்கின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கவாஸாகி நிஞ்சா300, கேடிஎம் ட்யூக் மற்றும் ஆர்சி 390 பைக்குகளில் விதிகளை சரியாக பின்பற்றி பயணித்த ரைடர்கள் குழுவினரிடம் போக்குவரத்து காவல்துறையினர் அடாவடியாக நடந்துள்ளனர்.

ஜாக்கெட்டுகள், கையுறை, ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் விதிகளையும் பின்பற்றியே இவர்கள் பைக் ஓட்டிச் சென்றுள்ளனர். அப்போது இடையில் ஒரு சிக்னலில் இவர்கள் நின்றனர்.

சிக்னலில் பச்சை காட்டிய பின்னர் பைக்குகளை ஸ்டார்ட் செய்து சாதாரண வேகத்தில் சென்ற இவர்களை, அந்த சிக்னலில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் நின்ற 6க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பைக்குகளை நிறுத்தியதோடு அவர்களின் பைக் சாவியை எடுத்துள்ளனர். இதுகுறித்து ஒரு ரைடர் காவலர்களிடம் "நீங்கள் எங்களை நிறுத்த சொல்லலாம், ஆனால் சாவியை எடுக்க உரிமை இல்லையே" என கேட்டுள்ளார். ஆனால், "வாங்க பேசலாம்" என்றவாறே அலட்சியமாக சாவியை எடுத்துச்சென்றுள்ளார் ஒரு காவலர்.

இத்தனைக்கும், இவர்கள் பைக்குகளில் மிகச் சாதாரணமாக, 50 கிமீ வேகத்திற்கும் குறைவான வேகத்தில் தான் சென்றுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக ரைடர் ஒருவர் தனது கேமரா மூலம் ஏற்கெனவே பயண காட்சிகளை பதிவு செய்து வந்ததனால் போக்குவரத்து காவலர்களின் அடாவடி செயல் அதில் பதிவாகியுள்ளது.

தாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதன் காரணம் குறித்து ரைடர்கள் கேட்டபோது "நீங்கள் சிக்னலை மதிக்காமல் அதிக வேகத்தில் சிக்னல் ஜம்ப் செய்து வந்துவிட்டீர்கள் என்று இன்ஸ்பெக்டர் ஒருவர் பதில் கூறுகிறார்.

அப்போது இந்த காட்சிகளை பதிவு செய்துகொண்டிருந்த ரைடர் ஒருவர் நாங்கள் சிக்னலில் சரியாக தான் நிறுத்தியிருந்தோம், பச்சை விளக்கு எரிந்தபோது தான் பைக்குகளை கிளப்பினோம் என்றுள்ளார். அதற்கு எங்களிடம் வீடியோ ஆதாரம் இருக்கிறது என்றுள்ளார்.

ஜாக்கெட், கையுறை அணிந்து யார் சென்றாலும் தடுப்பதே போக்குவரத்து காவலர்களின் குறிக்கோளாக உள்ளது. உண்மையில் இவர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளதாக அவர்களாகவே தீர்மானித்துக்கொண்டுள்ளனர்.

பின்னர் அதே இன்ஸ்பெக்டர் மீண்டும் எதற்காக பகலில் லைட்டுகளை எரியவிட்டு செல்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்.

அரசாங்கமே ஏப்ரல்1 ஆம் தேதி முதல் எப்போதும் எரியும் வகையிலான ஆட்டோமேடிக் ஹெட்லைட் பொருத்தப்படுவதை கட்டாயமாக்கியுள்ள நிலையில், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு அந்த விதிமுறை தெரியாமல் இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.

வீடியோ ஆதாரம் இருந்தும் கூட இந்த அப்பாவி ரைடர்கள் குழுவினர் ஒரு மணி நேரம் அங்கு காக்க வைக்கப்பட்டுள்ளனர்.

ரேஸில் ஈடுபடுவோரை விட்டுவிட்டு பைக்குகள் மேல் காதல் கொண்டு உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன், சாலை விதிகளை பின்பற்றும் அப்பாவிகளிடம் காவல்துறையினர் அடாவடியாக செயல்படுவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர், காரில் சென்றுகொண்டிருந்த போது ஹெல்மெட் அணியாமல் சென்ற தனது ரசிகர்களிடம், சாலை விதிகள் குறித்து விளக்கிய சம்பவம் நடந்தது.

அவர் இப்படியிருக்க, சாலை விதிகளை பின்பற்றி ஒழுக்கத்தை பேணவேண்டிய காவலர்களே அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு, வாகன ஓட்டிகளை துன்புறுத்துவது கண்டிக்கத்தக்கதாக உள்ளது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








