குழந்தைகள் அடம்பிடித்தாலும் இதையெல்லாம் செய்யாதீங்க... தேவையில்லாமல் அபராதத்திற்கு உள்ளான வாகன ஓட்டி!!
காரில் பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதியில் குழந்தைகளை அமர வைத்து ஓட்டி சென்றதாக வாகன ஓட்டி ஒருவருக்கு போலீஸார் அதிரடியாக அபராதத்தை விதித்துள்ளனர். தெலுங்கானாவில் நடைபெற்றுள்ள இந்த சம்பவத்தை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சாலை விபத்துகளுக்கு வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்காதது முக்கிய காரணமாக விளங்குகிறது. இதனாலேயே சாலை விதிமுறைகளை மீறுவோரை கண்டறிய போலீஸார் பல்வேறு விதமான மாடர்ன் தொழிற்நுட்பங்களை அவ்வப்போது பயன்பாட்டிற்கு கொண்டுவந்த வண்ணம் உள்ளனர். இதனாலேயே தற்சமயம் சிக்னலுக்கு சிக்னல் சிசிடிவி கேமிராக்கள் உள்ளன.

ஆனால் இதனை காட்டிலும் மிக பெரிய ஆயுதம் நம் எல்லாரிடத்திலும் உள்ளது. அதுதான் மொபைல் போன். பயணத்தின்போது நடக்கும் விதிமீறல்களை காட்சிப்படுத்த மொபைல் எடுக்க முடியாவிடினும் பரவாயில்லை, ஏனெனில் இதற்காகவே வாகனத்தில் பொருத்தி கொள்வதற்கான கேமிராக்கள் தற்சமயம் பல வகைகளில் மார்க்கெட்டில் விற்பனையில் உள்ளன.

இவ்வாறான கேமிராக்கள் மூலமாக பல்வேறு சாலை விதிமீறல்கள் வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளது மட்டுமின்றி, அதில் ஈடுப்பட்டோரும் தண்டிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கார் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவின் வாயிலாக அபராதத்திற்கு உள்ளான வாகன ஓட்டியை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகின்றோம்.

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் ஒன்று பின்பக்க கதவை திறந்தப்படி சென்றுள்ளது. எதற்காக என்று சற்று உற்று பார்க்கும்போதுதான், பின்பக்கத்தில் 3 சிறுவர், சிறுமியர் அமர வைக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. இதனை பின்னால் வந்த வாகன ஓட்டி, தனது காரின் கேமிரா மூலமாக காட்சிப்படுத்தி அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் போலீஸாரின் டுவிட்டர் பக்கங்களை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

இதனை கண்ட ஹைதராபாத்தில் உள்ள சைபராபாத் போக்குவரத்து போலீஸார், வீடியோவின் உண்மை தன்மையை ஆராய்ந்த பின்னர், வாகன பதிவு எண்ணை வைத்து சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிக்கு இ-செல்லானை அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்பான ஹூண்டாய் ஐ10 காரில் முன் & பின் இருக்கை வரிசையில் முழுவதுமாக பயணிகள் அமர்ந்துள்ளதை படங்களில் காண முடிகிறது.

இதனாலேயே அந்த 3 குழந்தைகள் பின்பக்க பூட் பகுதியில் அமர வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் காற்றோட்டமாக இருக்கட்டும் என்பதற்காக பின் கதவை திறந்து வைத்தப்படி டிரைவர் காரை ஓட்டியுள்ளார். இது முற்றிலும் தவறான செயலாகும். அந்த 3 குழந்தைகளின் பெற்றோர்கள் தான் இருக்கைகளில் அமர்ந்துள்ளனர் என எண்ணுகிறோம். இதற்கு எவ்வாறு அவர்கள் அனுமதித்தனர் என்பது தெரியவில்லை.

இந்த சம்பவத்திற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கோபமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர், அபராதம் மட்டும் போதாது, இதில் சம்மந்தப்பட்ட வாகன ஓட்டியின் ஓட்டுனர் உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும் என ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளனர். ஏனெனில் இவ்வாறான பயணம் அந்த குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக மாறலாம்.

அதாவது, ஒரு சடர்ன் பிரேக் போதும், குழந்தைகள் காரில் இருந்து வெளியே தூக்கிவீசப்படலாம். ஆதலால் இந்த சம்பவம் முற்றிலுமாக இந்த காரில் பயணம் செய்தவர்களின் அறியாமையே வெளிக்காட்டுகிறது. குழந்தைகள் ஆசைப்பட்டு இவ்வாறு பயணிக்க வேண்டும் என்றாலும், அதற்கு அனுமதிக்க கூடாது.

இது பயணிகளின் உயிருக்கே ஆபத்தாக முடிவது மட்டுமின்றி, இவ்வாறான அளவுக்கு அதிகமான பயணிகளுடனான பயணங்கள் காரின் செயல்பாட்டையும் பாதிக்கும். அதாவது, தயாரிப்பு நிறுவனம் பரிந்துரைத்த எண்ணிக்கைக்கு மேலாக பயணிகளை ஏற்றி சென்றால், காரின் சஸ்பென்ஷன் மற்றும் என்ஜினுக்கு கூடுதல் சுமை சேர்ப்பதுபோல் ஆகிவிடும். அதாவது, இவை வழக்கத்தை காட்டிலும் அதிகமாக செயல்பட நிர்பந்திக்கப்படும்.

அதிக பயணிகளின் எண்ணிக்கையால், அதிக ஆக்ஸலேரேஷன் கொடுக்க வேண்டும். அதற்கு இணையாக பிரேக்கையும் அழுத்தமாக கொடுக்க வேண்டி இருக்கும். இதன் காரணமாக, இவற்றின் ஆயுட்காலம் விரைவாகவே முடிவுக்கு வரலாம். அதுமட்டுமில்லாமல், இவ்வாறு காரின் சுமக்கும் எடை அதிகரிப்பதால், ஓட்டுனருக்கு ஹேண்ட்லிங் சவுகரியமாக கிடைக்காமலும் போகலாம். இது சில சமயங்களில் விபத்தில் சென்று முடியவும் வாய்ப்புள்ளது.

பின்பக்க பூட் ஸ்பேஸில் பயணிகள் அமர்வதற்கு எந்தவொரு சவுகரிய அம்சமும் கிடையாது. இவ்வளவு ஏன், பயணிகள் பிடித்து கொள்வதற்கு ஏதுவாக எந்தவொரு வசதியும் இல்லை. ஏனெனில் இந்த பகுதியினை பொருட்களை வைப்பதற்காகவே கார் தயாரிப்பு நிறுவனங்கள் வடிவமைக்கின்றன. ஆதலால், பூட் ஸ்பேஸ் பகுதியானது பொருட்களை வைத்து செல்வதற்கே அன்றி, பயணிகள் அமர்ந்து செல்வதற்கு அல்ல.


Click it and Unblock the Notifications








