வலுக்கட்டாயமாக தூக்கி செல்லும் போலீஸ்... இந்த வீடியோவை பார்த்தால் இனி வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டீங்க
வெளியில் வருபவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக தூக்கி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கோவிட்-19 இரண்டாவது அலையில் சிக்கி இந்தியா பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இம்முறை நாடு தழுவிய அளவில் ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை என்றாலும், கோவிட்-19 வைரஸ் பரவலை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் பல்வேறு மாநில அரசுகள் முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதன் மூலம் மக்கள் தேவையில்லாமல் வெளியே வருவது தவிர்க்கப்பட்டு, கோவிட்-19 வைரஸ் பரவல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கு உத்தரவுகளை முழுமையாக நிறைவேற்றுவதற்காக காவல் துறையினர் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர். ஊரடங்கு விதிகளை மீறுபவர்களுக்கு பாடம் புகட்டுவதற்காக சில தனித்துவமான நடவடிக்கைகளையும் காவல் துறையினர் எடுத்து வருகின்றனர்.

இந்த சூழலில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இங்கே கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக அரசு 'ரெட் அலர்ட்' பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அங்கே பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி அத்தியாவசியமான கடைகள் சில மணி நேரங்களுக்கு திறந்திருக்கலாம்.

ஆனால் உரிய காரணம் இல்லாமல் பொதுமக்கள் யாரும் வீடுகளில் இருந்து வெளியே வரக்கூடாது. எனினும் யாராவது தேவையில்லாமல் வெளியே வருகிறார்களா? என்பதை கண்காணிக்கவும், அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் காவல் துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அந்த காவல் துறையினர் தனித்துவமான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதன்படி விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வெளியே வருபவர்களை பிடிப்பதற்காக போலீஸ் படையினர் காத்திருப்பதை இந்த வீடியோவில் காண முடிகிறது. பைக்கில் ஒரு சிலர் வருவதை பார்த்ததும், அவர்களை நோக்கி போலீஸ் படையினர் விரைகின்றனர். இதில், ஒரு பைக் ரைடர் முதல் முறை தப்பித்து விடுகிறார். ஆனால் இரண்டாவது முறை சிக்கி கொள்கிறார்.

அதே நேரத்தில் பைக்கில் வந்து சிக்கிய நபர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தூக்கி செல்கின்றனர். அவர்களுக்கு அருகிலேயே ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருந்தது. பைக் ரைடர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக ஆம்புலன்சுக்கு உள்ளே செல்ல கட்டாயப்படுத்துகின்றனர்.

அதே சமயம் பைக் ரைடர்களோ ஆம்புலன்ஸில் இருந்து தப்பித்து செல்ல எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்கின்றனர். இதில், ஒரு பைக் ரைடர் ஆம்புலன்ஸ் ஜன்னல் வழியாக வெளியே செல்ல முயல்கிறார். ஆனால் அவரால் முடியவில்லை. புதிய விதிமுறைகளின்படி, தேவையில்லாமல் வெளியே வந்து யாராவது சிக்கினால், அவர் தனிமைப்படுத்தப்படுவார்.

அத்துடன் அவர்களின் பரிசோதனை மேற்கொள்ளப்படும். கோவிட்-19 இல்லை என்பது தெரியவந்தால் மட்டுமே அவர்கள் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இந்த வீடியோவில் சிக்கிய நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டார்களா? என்பது தெரியவில்லை. இதற்கு முன்பாக விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதித்ததாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.

ஆனால் அப்போதும் பொதுமக்கள் பலர் விதிமுறைகளை பின்பற்றவில்லை. எனவே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற வித்தியாசமான நடவடிக்கைகளை எடுப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். காவல் துறையினர் இப்படி திடீரென பிடித்து வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸில் ஏற்றுவது பயத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதன் மூலம் நிலைமையின் தீவிரத்தை சம்பந்தப்பட்ட நபர்கள் புரிந்து கொள்வார்கள் எனவும், வீடுகளை விட்டு தேவையில்லாமல் வெளியே வருவது எவ்வளவு அபாயகரமானது? என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகளால் மக்கள் பயப்படுவார்கள்தான்.
ஆனால் கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவி வரும் இந்த இக்கட்டான காலகட்டத்தில், இது காவல் துறையினருக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதை மறுத்து விட முடியாது. எனினும் ஜோத்பூர் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்வின் வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. நியூஸ்18 வைரல்ஸ் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








