குழந்தையின் வீட்டிற்கு ராஜ மரியாதையுடன் வந்த போலீஸ் வாகனங்கள்... காரணம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க
குழந்தையின் வீட்டிற்கு, போலீஸ் வாகனங்கள் கம்பீரமாக அணிவகுத்து வந்த பிரம்மிப்பான வீடியோ இன்டர்நெட்டை கலக்கி வருகிறது.

சீனாவில் இருந்து பரவ தொடங்கியதாக கூறப்படும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது உலகையே ஆட்டி படைத்து வருகிறது. கோவிட்-19 வைரஸின் கோரப்பிடியில் இருந்து இந்தியாவும் தப்பவில்லை. எனவே கோவிட்-19 வைரஸை கட்டுப்படுத்துவதற்காக, இந்தியாவில் ஊரடங்கு தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு கொண்டே வருகிறது.

இந்தியாவில் முதலில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இது பின்னர் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் கோவிட்-19 கட்டுக்குள் வராததால், வரும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் பிறந்த நாள் கொண்டாட்டங்களும் தவிர்க்கப்படுகின்றன. பிறந்த நாட்கள் எப்போதுமே ஸ்பெஷலானது. அதுவும் குழந்தைகளின் முதல் பிறந்த நாள் என்றால், அதை கொண்டாடுவதற்காக பெற்றோர்கள் மெனக்கெடுவார்கள்.

எனினும் ஊரடங்கு காரணமாக அவை எதுவும் தற்போது நடைபெறுவதில்லை. இப்படிப்பட்ட சூழலில், உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் குழந்தையின் முதல் பிறந்த நாளையொட்டி காவல் துறை சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. ஊரடங்கிற்கு மத்தியில் அந்த குழந்தையின் முதல் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு, உத்தர பிரதேச காவல் துறை கான்வாயை அனுப்பி வைத்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் மதுரா நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெண் குழந்தையின் முதல் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக, போலீஸ் வாகனங்கள் அணிவகுத்து வரும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில், உத்தர பிரதேச போலீசாரின் அலுவல் வாகனங்களை நம்மால் பார்க்க முடிகிறது.

இந்த கான்வாயை இரண்டு பஜாஜ் பல்சர் மோட்டார்சைக்கிள்கள் முன்னின்று அழைத்து வருகின்றன. அதை தொடர்ந்து மூன்று டொயோட்டா இன்னோவா எம்பிவி கார்கள் வருவதை பார்க்க முடிகிறது. கடைசியில் மேலும் இரண்டு பஜாஜ் பல்சர் பைக்குகள் வருகின்றன. வீடியோவில் நாம் பார்க்கும் அனைத்து வாகனங்களும், வெவ்வேறு வண்ண பலூன்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அந்த வாகனங்கள் சைரனை ஒலிக்க விட்டு கொண்டு கம்பீரமாக அந்த குழந்தையின் வீட்டிற்கு வருகின்றன. அதன் பின்னர் முக கவசம் மற்றும் க்ளவுஸ் அணிந்த போலீசார், அந்த குழந்தைக்காக கேக் பரிசளித்துள்ளனர். அந்த குழந்தையின் பெற்றோர் வெளியே வந்து, அதனை பெற்று கொண்டனர். அந்த குழந்தைக்காக பிறந்த நாள் வாழ்த்து பாடலையும் பாடி போலீசார் அசத்தியுள்ளனர்.

உத்தர பிரதேச போலீசாரின் இந்த செயல்பாடு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. ஏற்கனவே கூறியதை போல், ஊரடங்கு காரணமாக திருமணம் உள்ளிட்ட நல்ல காரியங்கள் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பிறந்த நாளை ஒத்தி வைக்க முடியாது. எனவேதான் இந்த குழந்தையின் பிறந்த நாளை காவல் துறையினர் வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோவை கீழே காணலாம்.
பொதுவாக முக்கிய பொறுப்புகளை வகிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் விவிஐபிக்கள் ஆகியோர் வரும் கான்வாய்களை பார்க்கவே பிரம்மிப்பாக இருக்கும். சைரனை ஒலித்து கொண்டு, பல்வேறு வாகனங்கள் கம்பீரமாக அணிவகுத்து வருவதை பார்த்தால், யாருக்குதான் பிரம்மிப்பு ஏற்படாது. அப்படியான ஒரு பிரம்மிப்பை, இந்த வீடியோவும் ஏற்படுத்துவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இந்தியாவில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே நாடு முழுக்க வரும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் சில தளர்வுகள் தற்போது கொடுக்கப்பட்டுள்ளன. இதன்படி நிபந்தனைகளுடன் ஒரு சில தொழில்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் வழங்கப்பட்டாலும், நீங்கள் கூடுமான வரை வீட்டிற்கு உள்ளே இருப்பதுதான் நல்லது. நாம் நம்மை நாமே தனிமைப்படுத்தி கொள்வதுதான், கோவிட்-19 வைரஸிடம் இருந்து தற்காத்து கொள்ள தற்போதைக்கு இருக்கும் ஒரே வழி. எனவே ஊரடங்கில் தளர்வு இருப்பதால், தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்ற வேண்டாம்.

கடந்த காலங்களில் தேவை இல்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றியவர்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கைகளை எடுத்தனர். வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதம் வசூல் செய்வது, வாகனங்களை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளை காவல் துறையினர் எடுத்ததை பார்க்க முடிந்தது. அதேபோன்ற நடவடிக்கைகள் இனியும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








