அடக்கொடுமையே... பெட்ரோல் பங்க்குகளுக்கு போலீசார் அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா கடுப்பாயிருவீங்க
பெட்ரோல் பங்க்குகளுக்கு போலீசார் அதிரடி உத்தரவு ஒன்றை தற்போது பிறப்பித்துள்ளனர்.

இந்தியாவில் வாகனங்களில் பயணிக்கும்போது, பாட்டிலில் பெட்ரோலை எடுத்து செல்லும் பழக்கம் பலரிடம் உள்ளது. நடு வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து போய் வாகனம் எதிர்பாராத விதமாக நின்று விட்டால், பாட்டிலில் உள்ள பெட்ரோல் மூலம் பங்க் வரை பயணிப்பதை அவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் பலரிடம் இந்த பழக்கம் உள்ளது.

ஆனால் அதற்கு தற்போது போலீசார் ஆப்பு வைத்துள்ளனர். ஆம், பாட்டில்களில் பெட்ரோல் விற்பனை செய்ய போலீசார் தடை விதித்துள்ளனர். லூஸில் பெட்ரோல் விற்பனை செய்யும் பங்க் நிர்வாகங்களுக்கு போலீசார் கடும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர். மஹாராஷ்டிர மாநிலம் நாசிக் போலீசார்தான் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசலை முறைகேடாக லூஸில் விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ளது தொடர்பாக, பெட்ரோல் பங்க் டீலர்கள் உடனான கூட்டத்தை கடந்த செவ்வாய்கிழமையன்று (பிப்ரவரி 25) நாசிக் ரூரல் போலீசார் நடத்தினர். இதில், நாசிக் ரூரல் மாவட்டத்தை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க் டீலர்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன் காவல் துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். அப்போது பாட்டிலில் பெட்ரோல் அல்லது டீசலை விற்பனை செய்யக்கூடாது என பெட்ரோல் பங்க் டீலர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர். இந்த உத்தரவை மீறி பாட்டில்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க் டீலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

நாசிக் ரூரல் மாவட்டத்தில் 350க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க்குகள் இயங்கி வருகின்றன. இங்கு பாட்டிலில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. எனினும் பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகளில் இந்த விதிமுறையை மீறி, பாட்டில்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''பெட்ரோல், டீசல் ஆகியவை எளிதில் தீப்பற்றக்கூடிய எரிபொருட்களாக உள்ளன. எனவே பாட்டில்களில் அவற்றை கையாள்வதில் பல்வேறு அபாயங்கள் இருக்கின்றன. எனவேதான் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் பெட்ரோல் பங்க்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.

இந்த விதிமுறையை நாசிக் போலீசார் தற்போது மிக கடுமையாக அமல்படுத்துவதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் லாசல்கோன் நகரில், சமீபத்தில் பெண் ஒருவர் எதிர்பாராதவிதமாக உடலில் தீப்பற்றி உயிரிழந்தார். இந்த துரதிருஷ்டவசமான சம்பவத்திற்கு பாட்டில் பெட்ரோல்தான் காரணமாக கூறப்படுகிறது.

அந்த பெண் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு கள்ளக்காதலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது அவர் கையில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் ஒன்றை வைத்திருந்தார். அந்த பெட்ரோலை தன் உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தீப்பிடித்ததில், அவர் உயிரிழந்தார்.

இதனால்தான் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்வதற்கு எதிராக காவல் துறை கடுமை காட்ட தொடங்கியுள்ளது. ஆனால் காவல் துறையின் இந்த அதிரடியால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வாகனம் எரிபொருள் தீர்ந்து நின்று விட்டால், வண்டியை அங்கேயே விட்டு விட்டு பங்க்கிற்கு சென்று பாட்டிலில் பலர் பெட்ரோல் வாங்கி வரும் பழக்கத்தையும் வைத்துள்ளனர்.

ஆனால் இனிமேல் பாட்டில்களில் பெட்ரோல் விற்பனை செய்யப்படாது என்பதால், அவர்கள் இனி பங்க் வரை வாகனத்தை தள்ளி கொண்டுதான் சென்றாக வேண்டும். இதன் காரணமாக பெண்கள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை குறித்த உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக தெரியப்படுத்துங்கள்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








