இனி இது இல்லாம வண்டிக்கு பெட்ரோல் போட முடியாது... இப்படி ஒரு அதிரடி ரூல்ஸ் வரும்னு எதிர்பாத்திருக்க மாட்டீங்க!
காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக அதிரடியான உத்தரவு ஒன்று விரைவில் அமலுக்கு வரவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்கு தொழிற்சாலைகள் மட்டுமல்லாது பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற வழக்கமான எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களும் மிக முக்கியமான காரணமாக இருக்கின்றன. எனவே வாகனங்களால் காற்று மாசுபடுவதை தடுப்பதற்காக பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

மோட்டார் வாகன சட்டம், 1993, செக்ஸன் 190 (2)-ன்படி முறையான பியூசி சர்டிஃபிகேட் (PUC - Pollution Under Control Certificate) இல்லாத வாகனங்களின் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க முடியும். அல்லது 6 மாதங்கள் வரை சிறை தண்டனையும் விதிக்க முடியும். சில சமயங்களில் இந்த 2 தண்டனைகளும் சேர்த்தே விதிக்கப்படலாம்.

காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்துவதற்காக இதுபோன்ற கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் பல்வேறு வாகனங்களின் உரிமையாளர்களிடம் முறையான பியூசி சர்டிஃபிகேட் இல்லை என்பதுதான் யதார்த்தம். எனினும் போக்குவரத்து துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் பியூசி சர்டிஃபிகேட்களை முறையாக பரிசோதனை செய்வதில்லை.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலைமை இப்படிதான் உள்ளது. ஆனால் தலைநகர் டெல்லியில் நிலைமை முற்றிலும் வேறு விதமாக இருக்கிறது. இந்தியாவிலேயே காற்று மாசுபாடு பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்று என்பதால், டெல்லியில் விதிமுறைகள் மிக தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகின்றன.

குறிப்பாக பியூசி சர்டிஃபிகேட்களை அங்கு அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்கின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கூட அங்கு இதற்கென 500 குழுக்கள் அமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அதிகாரிகள் பெட்ரோல் பங்க்குகளுக்கு வரும் வாகனங்களின் பியூசி சர்டிஃபிகேட்களை பரிசோதனை செய்யும் பணிகளை மேற்கொண்டனர்.

இந்த வரிசையில் தற்போது அதிரடியான நடவடிக்கை ஒன்றை டெல்லி அரசு எடுக்கவுள்ளது. இதன்படி தலைநகர் டெல்லியில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு பியூசி சர்டிஃபிகேட் கட்டாயமாக்கப்படவுள்ளது. வெகு விரைவில் இந்த புதிய உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான பரிந்துரைகள் மற்றும் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கும்படி, வரைவு கொள்கையை டெல்லி அரசு தற்போது வெளியிட்டுள்ளது. காற்றை மாசுபடுத்தும் வாகனங்கள் டெல்லி சாலைகளில் இயங்காமல் இருப்பதை இதன் மூலம் உறுதி செய்ய முடியும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதன் மூலம் மக்கள் சுத்தமான காற்றை சுவாசிப்பதையும் உறுதி செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். மக்களுக்கு சுத்தமான காற்றை உறுதி செய்யும் அரசின் கொள்கையை இது காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''வாகன உரிமையாளர்கள் பெட்ரோல் பங்க்கிற்கு பியூசி சர்டிஃபிகேட்டை கொண்டு வர வேண்டும்.

பியூசி சர்டிஃபிகேட் இல்லாத வாகனங்களின் உரிமையாளர்களுக்கு எரிபொருள் நிரப்ப மாட்டார்கள். வட இந்தியாவில், குறிப்பாக டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே இதுபோன்ற திட்டங்கள் அவசியம். இந்த திட்டத்தின் மூலம் வாகன உரிமையாளர்கள் அனைவரும் பியூசி சர்டிஃபிகேட் வைத்திருப்பது கட்டாயமாகிறது.

ஆனால் இந்த திட்டத்தால் வாகன உரிமையாளர்களும், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களும் தேவையில்லாமல் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதாவது ஒவ்வொரு வாகனமாக பியூசி சர்டிஃபிகேட்டை சோதனை செய்வதற்கு நேரம் தேவைப்படும்.

இது வாகன உரிமையாளர்களுக்கும், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும் நேர விரயத்தையும், தாமதத்தையும் ஏற்படுத்தலாம். இதுபோன்ற பிரச்னைகளை தவிர்ப்பதற்கு ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும்? என்ற சரியான தகவல்கள் வெகு விரைவில் வெளியிடப்படும்'' என்றனர்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








