குஜராத்தில் ஒவ்வொரு வீட்டிலும் 2க்கும் மேற்பட்ட வண்டிகள்... இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?
குஜராத் மாநிலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக 2க்கும் மேற்பட்ட வாகனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

குஜராத் மாநிலத்தில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குஜராத் மாநிலத்தில் சராசரியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரண்டிற்கும் மேற்பட்ட வாகனங்கள் இருப்பதுதான் இதற்கு காரணம். தெளிவாக சொல்வதென்றால், குஜராத் மாநிலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக 2.25 வாகனங்கள் இருக்கின்றன.

இது இந்தியாவிலேயே மூன்றாவது அதிகபட்சமாகும். அப்படி என்றால் முதல் இரண்டு இடங்களில் உள்ள மாநிலங்கள் எவை? என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது கோவா. அங்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4.41 வாகனங்கள் இருக்கின்றன. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது டெல்லி.

அங்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3.62 வாகனங்கள் உள்ளன. ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையின் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், குஜராத் மாநிலத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 2.75 கோடி ஆகும். இது கடந்த மார்ச் 31ம் தேதி அடிப்படையிலான தரவு என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் மாநிலத்தில் வாகன எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதற்கு, நகர பகுதிகளில் பொது போக்குவரத்து போதிய அளவில் இல்லாததுதான் காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக பொது போக்குவரத்தை சார்ந்து இருக்காமல், தங்களுக்கு என சொந்தமாக வாகனத்தை வாங்க வேண்டிய தேவை மக்களுக்கு ஏற்படுகிறது என்பது அவர்களின் கருத்து.

அதே சமயம் வாகன எண்ணிக்கை தொடர்பாக மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களும் தெரியவந்துள்ளன. இதன்படி குஜராத்தில் ஒவ்வொரு 1,000 பேருக்கும் தோராயமாக 436 வாகனங்கள் இருக்கின்றன. அதே நேரத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், குஜராத் மாநிலம் இந்தியாவில் நான்காவது இடத்தில் இருக்கிறது.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது மஹாராஷ்டிரா. அங்கு பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 3.95 கோடி ஆகும். இரண்டாவது இடத்தில் இருப்பது உத்தர பிரதேசம். அங்கு 3.83 கோடி வாகனங்கள் இருக்கின்றன. மூன்றாவது இடத்தில் தமிழ் நாடு உள்ளது. தமிழ் நாட்டில் உள்ள பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 3.36 கோடி ஆகும்.

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களில் சுமார் 49 சதவீத வாகனங்கள் மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், தமிழ் நாடு, குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருக்கின்றன. அதாவது இந்தியாவில் உள்ள மொத்த வாகனங்களில், கிட்டத்தட்ட பாதி வாகனங்களில் மேற்கண்ட 5 மாநிலங்களில் உள்ளன.

குஜராத் மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் வழக்கம் மிகவும் அதிகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற மாநிலங்களிலும் கூட பள்ளி, கல்லூரி மாணவர்கள் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர் என்பதை மறுக்க முடியாது. ஆனால் குஜராத் மாநிலத்தில் இந்த 'டிரெண்ட்' மிகவும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது, போக்குவரத்து நெரிசல் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. பொதுமக்கள் தங்களுடைய சொந்த வாகனங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக பேருந்து, ரயில் மற்றும் மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்து முறைகளை பயன்படுத்தினால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை குறைக்க முடியும்.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் அச்சம் இருப்பதால் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதற்கு பெரும்பாலானோர் தயங்குகின்றனர். பொது போக்குவரத்தில் பலருடன் சேர்ந்து பயணம் செய்ய வேண்டும். இதனால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், பொது போக்குவரத்திற்கு பதிலாக சொந்த வாகனங்களையே பொதுமக்கள் பெரிதும் நம்புகின்றனர்.

இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதற்கு இதுவும் தற்போது முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. பொது போக்குவரத்தில் கொரோனா வைரஸ் அச்சம், அரசு அவ்வப்போது பொது போக்குவரத்தை முழுமையாக தடை செய்து விடுவது அல்லது நேர கட்டுப்பாடுகளை விதிப்பது போன்ற காரணங்களாலும் பலர் சொந்தமாக வாகனங்களை வாங்கி வருகின்றனர்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications