கொங்கு தான் கெத்து! தமிழகத்திலேயே அதிகம் ரயில்களை பயன்படுத்துவது இவங்க தான்! மத்தவங்க எல்லாம் எவ்வளவு?
தமிழகத்தில் எந்த ரயிலில் அதிகமான மக்கள் பயணிக்கிறார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தென்னக ரயில்வே இதற்கான பதிலை அளித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழக மக்கள் அதிக அளவில் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களில் ரயில்வே ஸ்டேஷனுக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தினந்தோறும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நீண்ட தூர பயணத்திற்கு பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இது தான் மக்களுக்கு வசதியாக இருக்கிறது.

மக்கள் ரயில் பயணத்தை விரும்புவதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளது. ஒன்று பஸ்களை விட ரயில்களில் டிக்கெட் விலை குறைவு, அதேநேரம் பஸ்களை விட ரயில்களில் அதிகமான வசதிகள் இருக்கிறது. ஒருவர் ரயிலில் பயணிக்கும் போது பெர்த்தில் படுத்துக் கொண்டே கூட பயணிக்க முடியும். ரயில்களில் டாய்லெட் வசதிகளும் உள்ளது,பஸ்களில் இது கிடையாது.
இந்நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த தீபக் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேக்கு சில கேள்விகளை எழுப்பியிருந்தார் அந்த கேள்விக்கு தெற்கு ரயில்வே விரிவான பதிலை அளித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இயங்கும் ரயில்களில் அதிகமான பயணிகள் பயணிக்கும் ரயில்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த தகவலில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வரை ரயில்களில் எத்தனை பயணிகள் பயணித்து உள்ளார்கள் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் தமிழகத்திலேயே அதிகமாக சென்னையில் இருந்து கோவை வரை இயங்கும் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் தான் மொத்தம் 7,44,302 பயணிகள் பயணித்துள்ளனர்.
இந்த ரயில் சென்னையிலிருந்து காலை 6:10 மணிக்கு கிளம்பி அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு வழியாக மதியம் 2 மணிக்கு கோவையை சென்றடைகிறது. இந்த ரயிலை தான் தமிழகத்திலேயே அதிகமான மக்கள் பயன்படுத்தியுள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் இருப்பது வைகை எக்ஸ்பிரஸ் ரயில்.
| ரயில் பெயர் | பயணிகள் | |
| 1 | கோவை எக்ஸ்பிரஸ் | 7,44,302 |
| 2 | வைகை எக்ஸ்பிரஸ் | 6,98,342 |
| 3 | கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் | 6,39,995 |
| 4 | பல்லவன் சூப்பர் ஃபாஸ்ட் | 6,32,965 |
| 5 | பொதிகை சூப்பர் ஃபாஸ்ட் | 5,30,933 |
| 6 | சோழன் எக்ஸ்பிரஸ் | 5,15,224 |
| 7 | நெல்லை சூப்பர் ஃபாஸ்ட் | 5,07,502 |
சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் இந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 6,98,342 பேர் பயணம் செய்துள்ளனர். சென்னையில் இருந்து மதியம் 1:50 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் விழுப்புரம், திருச்சி வழியாக இரவு 9:15 மணிக்கு மதுரைக்கு சென்றடையும்.
அடுத்த இடத்தில் இருப்பது கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சென்னையில் மதியம் 2:30 மணிக்கு கிளம்பி சேலம், ஈரோடு வழியாக இரவு 10:15 மணிக்கு கோவையை சென்றடையும். இந்த ரயிலில் மொத்தம் 6,39,995 பேர் பயணித்துள்ளனர். இந்த ரயில் தான் தமிழகத்திலேயே அதிகமான நபர்கள் பயணிக்கும் மூன்றாவது ரயிலாகும்.
நான்காவது இடத்தில் பல்லவன் சூப்பர் ஃபாஸ்ட் ரயில் இருக்கிறது. சென்னை எழும்பூரிலிருந்து மாலை 3:45 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் இரவு 11 மணிக்கு காரைக்குடியை சென்றடைகிறது. இந்த ரயில் மொத்தம் 6, 32,965 பயணிகள் பயணித்துள்ளனர். 6 லட்சத்திற்கும் அதிகமாக பயணிகள் பயணித்த ரயில்கள் இந்த நான்கு ரயில்கள் தான்.
ஐந்தாவது இடத்தில் பொதிகை சூப்பர் ஃபாஸ்ட் ரயில் இருக்கிறது. இந்த ரயிலில் மொத்தம் 5,30,933 பயணிகள் பயணித்துள்ளனர். அடுத்ததாக சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் இருக்கிறது இதில் 5,15,224 பயணிகள் பயணித்துள்ளனர். இறுதியாக நெல்லை சூப்பர் ஃபாஸ்ட் ரயில் இருக்கிறது இதில் 5,07,502 பயணிகள் பயணித்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழகத்தில் ரயில்களை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. இதனால் தமிழகத்திற்கு இன்னும் போதுமான ரயில்களை மத்திய ரயில்வே அமைச்சகம் ஒதுக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களையும் மேம்படுத்தி பயணிகளுக்கு போதுமான வசதியை செய்து தர வேண்டும். இது நடந்தால் மேலும் தமிழகத்திலிருந்து ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications








