கோடி ரூபாய் மதிப்பிலான கார்... சில வினாடிகளில் சுக்கு நூறானது!! எல்லாத்துக்கும் காரணம் எது தெரியுமா?
நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் சென்றுக் கொண்டிருந்த விலையுயர்ந்த போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் ஒன்று மாடு மீதி மோதியதில் பெரும் விபத்திற்கு உள்ளாகி உள்ளது. சென்னைக்கு அருகே அரங்கேறியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவையும், இந்த விபத்தில் உருக்குலைந்து போன போர்ஷே காரை பற்றியும் இனி பார்க்கலாம்.
இந்தியாவில் நகரங்கள் ஒவ்வொன்றும் மெட்ரோ நகரங்களாக மேம்பட்டு வரும் நிலையில், அதற்கேற்ப நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அதிகப்பட்சமாக மணிக்கு 120கிமீ வேகத்தில் டிரைவ் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், நம் இந்திய விரைவுச்சாலைகளில் பயணம் செய்வது இப்போதும் கூட பாதுகாப்பற்றதாக உள்ளதை கூறியே ஆக வேண்டும்.

மனம் ஏற்க மறுத்தாலும், இதுதான் உண்மை. இதற்கு ஓர் சரியான உதாரணமாக ஓர் நிகழ்வு நம் தமிழ்நாட்டில் ஒரு போர்ஷே கார் ஓட்டிக்கு நடந்துள்ளது. மகாபலிபுரத்திற்கு அருகே சென்னை ஈசிஆர் சாலையில் அரங்கேறியுள்ள இந்த விபத்து குறித்து இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ள வீடியோவை கீழே செய்தியின் இறுதியில் காணலாம்.
சென்னை ஈசிஆர் சாலைகள் பொதுவாகவே, போர்ஷே போன்ற உயர்தரத்திலான ஸ்போர்ட்ஸ் கார்களை ஓட்டுவதற்கு ஏற்ற சாலைகள் ஆகும். அந்த அளவிற்கு சாலைகள் மிகவும் நேர்த்தியாக, அதிகமாக வளைவுகள் இன்றி ஒரே நேர்கோடாக வடிவமைக்கப்பட்டு இருக்கும். அத்துடன், சாலைகள் மிகவும் சுத்தமாக இருக்கும் என்பதை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பயணித்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இதையெல்லாம் நம்பி தான், போர்ஷே 911 கார் ஓட்டுனர் வேகமாக பயணத்தை ரசித்தப்படி சென்றுள்ளார். ஆனால், அத்தகைய சென்னை ஈசிஆர் சாலையிலும், மாடு ஒன்று குறுக்கே வந்துள்ளது. இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவின்படி பார்க்கும்போது, சாலையில் இயங்கிக் கொண்டிருந்த போர்ஷே 911 காரின் முன் திடீரென மாடு ஒன்று வந்து நின்றுள்ளது.
வேகமாக சென்றுக் கொண்டிருக்கும் போது சாலையின் குறுக்கே மாட்டை கண்டால் எந்தவொரு வாகன ஓட்டிக்கு தான் பயம் ஏற்படாமல் இருக்கும். அதுவும் இந்த சம்பவத்தில் நாம் பார்ப்பது விலையுயர்ந்த போர்ஷே காரை. மாடு மீது மோதும் அந்த ஒரு வினாடியில், உயிருக்கு என்ன ஆக போகுதோ என்பது ஒரு விதமான பயத்தை உருவாக்க, மறுப்புறம் இவ்வளவு விலையுயர்ந்த காரின் கதி என்ன ஆக போகிறதோ என பல விதமான பயம் கார் ஓட்டுனருக்கு ஏற்பட்டு இருக்கும்.

மாடு மீது மோதியதில் கார் சுமார் 500 மீட்டர்கள் தொலைவிற்கு தடம்புரண்டு ஓடியுள்ளது. அப்படியென்றால், காரை எந்த அளவிற்கு வேகமாக ஓட்டியுள்ளனர் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். விபத்தில், காரின் முன் பம்பரும், வலது பக்க முன் சக்கரமும் தனியாக கழன்று விழுந்துள்ளன. அத்துடன், முன்பக்க ஹெட்லேம்ப்களில் ஒன்று உடைந்து நொறுங்கியுள்ளது. காரின் சைடு பேனல்கள் மற்றும் கதவும் பலமாக சேதமடைந்துள்ளன.
காருக்கு உள்ளே ஏர்பேக்குகள் வெளியே வந்துள்ளதை பார்க்க முடிகிறது. இதுவே காருக்குள் இருந்த பயணிகளை காப்பாற்றி உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த விபத்துக்கு காரணமாக அமைந்த மாடு உயிரிழந்து விட்டது. இவ்வாறான விபத்துக்கு பிறகு சாதாரண கார் ஒன்றை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவருவதே அதிக செலவை உண்டாக்கக்கூடியது எனும்போது, போர்ஷே 911 போன்ற விலையுயர்ந்த கார் ஒன்று 500 மீட்டர்கள் தொலைவிற்கு தடம்புரண்டு விபத்துக்கு உள்ளாகி உள்ளது என்றால், எவ்வளவு செலவாகும் என்பதை யோசித்து பாருங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விபத்துக்கு மாடு மற்றும் அதனை வளர்க்கும் உரிமையாளர் தான் காரணம். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், கார் ஓட்டுனரும் சற்று முன்கூட்டியே மாட்டை கண்டு, அதற்கேற்ப செயல்பட்டு இருந்தால் இவ்வளவு பெரிய விபத்தும் நடந்திருக்காது, மாடும் உயிரிழந்து இருக்காது. சாலை காலியாக இருப்பினும், ஓட்டுனரின் கவனம் முழுவதும் சாலை மீது இருக்க வேண்டியது அவசியம்.


Click it and Unblock the Notifications









