அதிர வைக்கும் சம்பவம்... காரை பிடித்து வைத்து கொண்டு 10 லட்சம் கட்ட சொல்லும் போலீஸ்... ஏன் தெரியுமா?
10 லட்ச ரூபாய் கட்டினால்தான் கார் விடுவிக்கப்படும் என போலீசார் கூறியுள்ளதால், உரிமையாளர் ஒருவர் அதிர்ந்து போயுள்ளார்.

இந்தியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை, தொடர்ச்சியாக வெளி வந்த வண்ணம் இருந்த ஒரு சில செய்திகள் வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தின. போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்காக வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விதித்த மிக கடுமையான அபராதம் தொடர்பான செய்திகள்தான் அவை. மத்திய அரசால் அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டமே இதற்கு காரணம்.

இந்தியாவில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்தது. இதில், அனைத்து வகையான போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கும் அபராதங்கள் மிகவும் கடுமையாக உயர்த்தப்பட்டிருந்தன.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியபோதும், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் போலீசார் தங்கள் பணியை செவ்வனே செய்தனர். போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் அனைவரையும் பிடித்து பிடித்து போலீசார் அபராதம் விதித்தனர். சில இடங்களில் வாகனத்தின் மதிப்பை விட அதிக அபராத தொகை விதிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தாலும், உண்மையில் இந்த முடிவு பலன் அளித்துள்ளது என்றே சொல்ல வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த பின் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அபராத தொகைகள் ஏற்படுத்தியுள்ள பயம் காரணமாக வாகன ஓட்டிகள் தற்போது போக்குவரத்து விதிகளை ஓரளவிற்கு பின்பற்ற தொடங்கியுள்ளனர். எனவே வாகன ஓட்டிகளுக்கு ஒரு லட்சம் அபராதம், இரண்டு லட்சம் அபராதம் என்பது போன்ற செய்திகள் சமீப காலமாக வெளியாகாமல் இருந்தன. இந்த சூழலில் குஜராத் மாநிலத்தில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போர்ஷே 911 (Porsche 911) ஸ்போர்ட்ஸ் கார் உரிமையாளர் ஒருவருக்கு, 9.80 லட்ச ரூபாய் அபராதத்தை விதித்து, குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் அதிரடி காட்டியுள்ளனர். சரியான ஆவணங்கள் மற்றும் சட்டத்திற்கு உட்பட்ட நம்பர் பிளேட் இல்லாதது உள்ளிட்ட காரணங்களுக்காகவே இவ்வளவு பெரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை போக்குவரத்து போலீசார் நேற்று (நவம்பர் 29) தெரிவித்தனர். மேலும் அவர்களை காரையும் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். 'கார் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதுடன் 9.80 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது' என அகமதாபாத் போலீசார் நேற்று ட்வீட் செய்துள்ளனர். இது சில்வர் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட போர்ஷே 911 கார் ஆகும்.

நம்பர் பிளேட் இல்லாமல் வந்ததன் காரணமாக, கடந்த புதன் கிழமையன்று போக்குவரத்து போலீசார் அந்த காரை நிறுத்தி விசாரித்துள்ளனர். இதன்பின்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சரியான ஆவணங்கள் இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது. போலீஸ் துணை கமிஷனர் தேஜஸ் பட்டேல் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ''விசாரணை நடத்தியபோது, வாகனத்தின் சரியான ஆவணங்களை சமர்ப்பிக்க டிரைவர் தவறி விட்டார். எனவே நாங்கள் காரை பறிமுதல் செய்து, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ஆர்டிஓ மெமோ வழங்கியுள்ளோம். அதாவது அவர் காரை திரும்ப பெற வேண்டுமென்றால், ஆர்டிஓ அலுவலகத்தில் அபராதத்தை செலுத்தி விட்டு, ரசீதுடன் எங்களிடம் வர வேண்டும்'' என்றார்.

போக்குவரத்து போலீசாரால் அபராதம் வசூலிக்கப்படாது என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ''இந்த கார் மீது நிலுவையில் உள்ள அனைத்து வரிகள், அபராதங்கள் ஆகியவற்றை கணக்கிட்டு போக்குவரத்து துறை அதிகாரிகள் 9.80 லட்ச ரூபாயை அபராதமாக விதித்துள்ளனர்.

இந்த காரின் உரிமையாளர் அபராத தொகையை செலுத்தி விட்டு, அதற்கான ரசீதை காட்டினால் மட்டுமே நாங்கள் காரை விடுவிப்போம்'' என்றார். அபராதம் விதிக்கப்பட்டுள்ள போர்ஷே 911 காரின் விலை சுமார் இரண்டு கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








