பிட்காயின் ஒருவரது வாழ்க்கையை இப்படி எல்லாம் கூடவா மாற்றும்! வெளிநாட்டில் இந்தியரின் காருக்கு நேர்ந்த கதி
இந்தியாவை சேர்ந்தவர்கள் பலர் வெளிநாடுகளில் வெகு விமர்சையான லக்சரி வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அத்தகையவர்களுள் ஒருவர் தான், பிரியேஷ் பட்டேல் (Priyesh Patel). போர்ச்சுகல் (Portugal) நாட்டில் குடும்பத்துடன் வாழ்ந்துவரும் பிரியேஷ் பட்டேல் தனது போர்ஷே (Porsche) கார் மூலமாக இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளார். ஏனெனில், தனது விலையுயர்ந்த போர்ஷே காரில் வேண்டுமென்றே சிறுவர், சிறுமியரை பென்சில் & பேனாக்களால் கிறுக்க வைத்து, அதனை ஸ்டைலாக மாற்றிக் கொண்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
சொந்த வீடாக இருந்தாலும், வீட்டின் சுவரில் குழந்தைகள் கிறுக்கினாலே பெற்றோருக்கு கண்களில் இருந்து இரத்தம் வடியும். ஏனெனில், அதனை சரிச் செய்ய மீண்டும் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க செலவு செய்ய வேண்டுமே என நினைப்பர். அப்படியிருக்க, பிரியேஷ் பட்டேல் தனது போர்ஷே காரையே கிறுக்குவதற்காக குழந்தைகளிடம் வழங்கியுள்ளார்.

இந்தியாவில் வளர்ந்தவராக இருந்தாலும், பிரியேஷ் பட்டேல் பிறந்தது ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஆகும். இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிட்காயின் (Bitcoin) மூலமாக இளம் வயதிலேயே கோடீஸ்வரர் ஆகியவர், மொத்தமாக ஐரோப்பிய நாடான போர்ச்சுகலுக்கு குடிபெயர்ந்துவிட்டார். ஏனெனில், போர்ச்சுகலில் பிட்காயினுக்கு தடை இல்லை.
இதன் மூலமாக மிகவும் லக்சரியான வாழ்க்கையை பிரியேஷ் பட்டேல் வாழ்ந்து வருகிறார். எந்த அளவிற்கு லக்சரியான வாழ்க்கை என்றால், இவருக்கு சொந்தமாக ஒரு பங்களா வீடு மடேயிரா என்கிற போர்ச்சுகலுக்கு சொந்தமான தீவில் உள்ளது. போர்ச்சுகலுக்கு சொந்தமான தீவு என சொன்னாலும், இது போர்ச்சுக்கலில் இருந்து வெகு தொலைவில் ஆப்பிரிக்க கண்டத்திற்கு அருகே அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது.

மடேயிரா தீவில் உள்ள பிரியேஷ் பட்டேலின் பங்களாவை வீடியோ எடுப்பதற்காக ஒரு யூடியூப் கும்பல் சமீபத்தில் சென்றுள்ளது. அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரியேஷ் பட்டேலின் போர்ஷே காரும், அதில் தீட்டப்பட்டு இருந்த ஓவியங்களும் யூடியூப் சேனலை சேர்ந்த குழுவை ஈர்த்துள்ளது. உடனே காரில் இருந்த கிறுக்கல்கள் குறித்து பிரியேஷ் பட்டேலிடம் கேட்டனர்.
தனது விலையுயர்ந்த போர்ஷே காரை மக்களிடம் இருந்து நன்கொடை ஈட்டுவதற்காக இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார். அதாவது, காரை சேதப்படுத்தாமல், அழியாத மார்க்கர் பேனாவால் எப்படி வேண்டுமாயின் கிறுக்கிவிட்டு தங்களால் முடிந்த நன்கொடையை வழங்குங்கள் என மக்களிடம் பிரியேஷ் பட்டேல் கேட்டுக்கொண்டார். அதன்படி, நன்கொடை செலுத்த முன்வந்தவர்கள் தங்களது குழந்தைகளின் கையில் மார்க்கர் பேனாவை கொடுத்து கிறுக்க வைத்துள்ளனர்.

இதன்மூலம் நன்கொடையாக கிடைத்த 7,000 யூரோக்கள் (இந்திய ரூபாயில் ரூ.6 லட்சத்து 36 ஆயிரம்)-ஐ மடேயிரா தீவில் வசிக்கும் குழந்தைகளின் நலத்திட்ட உதவிகளுக்காக பயன்படுத்தி உள்ளார். பிரியேஷ் பட்டேலிடம் இருப்பது பச்சை நிறத்திலான போர்ஷே கேமேன் கார் ஆகும். இந்தியாவில் தற்சமயம் இந்த போர்ஷே காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.37 கோடியாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வளவு விலை கொடுத்து போர்ஷே காரை வாங்க முடிந்தவரால் ரூ.6.36 லட்சம் பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லையா என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். இந்த நல்ல விஷயத்தில் மற்றவர்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என பிரியேஷ் பட்டேல் நினைத்திருக்கலாம். அதற்காக தனது விலையுயர்ந்த போர்ஷே காரையே பணயம் வைத்திருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications









