எவ்வளவு உயரத்துக்கு போனாலும் அம்மாவை பெருமைப்படுத்திய பிரபலம்! கார் டிசைனராக மனதில் நிறைஞ்சிட்டாரு!!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-இல் கார் வடிவமைப்பாளராக ஜொலித்துக் கொண்டிருந்தவர் பிரதாப் போஸ் (Pratap Bose). கார்கள் விற்பனையில் டாடா நிறுவனம் சமீப ஆண்டுகளில் அடைந்திருக்கும் உயரத்திற்கு பிரதாப் போஸ் முக்கிய காரணமானவர்களுள் ஒருவர். மார்க்கெட்டில் பிரபலமான டாடா நெக்ஸான், டாடா டியாகோ போன்ற கார்கள் எல்லாம் இவர் வடிவமைத்ததுதான். ஆனால், வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்திற்கு போகும் நோக்கத்தில் டாடா மோட்டார்ஸில் இருந்து மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்திற்கு வாகனங்கள் டிசைன் பிரிவின் தலைமை அதிகாரியாக மாறினார்.
பிரதாப் போஸின் கை வண்ணத்தில் உருவாகி சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புத்தம் புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் இந்திய மக்களை வெகுவாக கவர்ந்திருப்பதுடன், விற்பனையிலும் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கார் டிசைனர் பிரதாப் போஸ் அவரது அம்மாவின் 75வது பிறந்தநாளுக்காக பிராண்ட்-நியூ மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரை வாங்கியுள்ளார்.

பெற்றெடுத்த தாய்க்கு பிறந்தநாள் பரிசாக பிரதாப் போஸ் வாங்கி கொடுத்திருப்பது அவரது லேட்டஸ்ட் டிசைனான மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் ஆகும். மஹிந்திரா ஷோரூம் ஒன்றிற்கு பிரதாப் அவரது அம்மாவை அழைத்து சென்று எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரை டெலிவிரி எடுக்கும் காட்சிகளை வீடியோவாக காட்சிப்படுத்தி மஹிந்திரா நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது.
"நோட்டு, புத்தகங்களில் கார்களை வரைந்ததில் இருந்து எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரை வடிவமைத்தது வரையில்" என இந்த யூடியூப் பதிவில் பிரதாப் போஸை மஹிந்திரா புகழ்ந்து தள்ளியுள்ளது. இன்னும் சொல்லப்போனால், இந்த கார் டெலிவிரியை மஹிந்திரா நிறுவனம் ஓர் சிறிய நிகழ்ச்சி போல் கொண்டாடியுள்ளது. இதற்காக, பிரதாப் போஸின் தாயாரிடம் டெலிவிரி செய்யப்பட உள்ள எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

காரை டெலிவிரி எடுத்த பின் பிரதாப் போஸை பற்றி பேசிய அவர் அம்மா, பிரதாப் போஸுக்கு குழந்தை பருவத்தில் இருந்து நன்கு பெரிய விரல்கள் மற்றும் உள்ளங்கை உள்ளதாக கூறினார். இதனால், பிரதாப் போஸ் பெரிய வடிவமைப்பாளராக வருவார் என அவர் குழந்தையாக இருக்கும்போதே அவரது தந்தை கணித்ததாகவும் பிரதாப்பின் தாயார் தெரிவித்துள்ளார்.
பிரதாப் போஸ் அவரது அம்மாவுக்கு வாங்கிக் கொடுத்துள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், 4 மீட்டர் நீளத்தில் இந்தியாவில் ஒரு தரமான எஸ்யூவி காரை மக்கள் போட்டி போட்டு வாங்க வேண்டும் என மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி300 அறிமுகம் செய்தது. ஆனால், மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் போன்ற மற்ற பிராண்ட்கள் அளவிற்கு இந்த மஹிந்திரா கார் விற்பனையாகியதா என்றால், இல்லை என்பதுதான் பதில்.

ஆரம்பத்தில் சில மாதங்களுக்கு கணிசமான வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். ஆனால், அதன்பின் கஸ்டமர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இந்த நிலையில்தான் பிரதாப் போஸ் மஹிந்திரா நிறுவனத்திற்குள் நுழைந்தார். விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ என்கிற பெயரில் அறிமுகம் செய்தார். மஹிந்திராவும் அந்த சமயத்தில், எக்ஸ்யூவி300 காரை மேம்படுத்தும் திட்டத்தில்தான் இருந்தது.
மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் மொத்தம் 3 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் டைரக்ட் இன்ஜெக்ஷன் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என்பன அவை ஆகும். விற்பனையில் டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா போன்ற கார்களுக்கு போட்டியாக விளங்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.7.49 லட்சத்தில் இருந்து ரூ.15.49 லட்சம் வரையில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிரதாப் போஸ் வடிவமைத்த கார் என்பதினாலேயே புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் கொஞ்சம் ஸ்பெஷலானதாக பார்க்கப்படுவது உண்மைதான். இருப்பினும், இன்னும் சில மாதங்கள் கழித்த பின்பே இந்த கார் மக்கள் மத்தியில் தொடர்ந்து ஜொலிக்குமா என்பது தெரியவரும். இருப்பினும், மகன் வடிவமைத்த காரை அம்மா பயன்படுத்த போகிறார் என்பது எவ்வளவு பெரிய விஷயம். இந்த வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும்...


Click it and Unblock the Notifications









