ஹோட்டலில் பாத்திரம் கழுவும் மாணவனுக்கு ஜனாதிபதி கொடுத்த சர்ப்ரைஸ்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க
உணவகத்தில் பாத்திரம் கழுவி வரும் 9ம் வகுப்பு மாணவனுக்கு, குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், பக்ரீத் பரிசை வழங்கியுள்ளார்.

நம் கனவுகளை அடைய வறுமை மிகப்பெரிய தடைக்கல்லாக இருக்கிறது. மோசமான பொருளாதார சூழல் காரணமாக, கனவுகளை விட்டு கொடுத்தவர்கள் ஏராளம். ஆனால் கனவுகளை எட்டுவதற்காக ஒரு சிலர் வறுமையை எதிர்த்து போராடி கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள்தான் பின்நாட்களில் சாதனையாளர்களாக உருவெடுக்கின்றனர்.

இந்த வகையில் பள்ளி மாணவன் ரியாசும் எதிர்காலத்தில் உலகம் போற்றும் சாதனையாளர்களில் ஒருவராக உருவெடுக்கலாம். பீஹார் மாநிலத்தில் உள்ள மதுபானி மாவட்டத்தை சேர்ந்தவர்தான் இங்கே நாம் பேசி கொண்டிருக்கும் ரியாஸ். ரியாஸின் குடும்பத்தினர் மதுபானியில்தான் வசித்து வருகின்றனர். ஆனால் ரியாஸ் மட்டும் உத்தர பிரதேச மாநிலம் காஸிபாத்தில் உள்ள மஹாராஜ்பூர் பகுதியில் வசிக்கிறார்.

காஸியாபாத்தில் வாடகைக்கு தங்கியிருந்தாலும் ரியாஸ் படித்து கொண்டிருப்பது தலைநகர் டெல்லியில். டெல்லி ஆனந்த் விஹார் பகுதியில் உள்ள சர்வோதயா பால் வித்யாலயா பள்ளியில், ரியாஸ் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது குடும்பம் தற்போது வறுமையில் வாடி வருகிறது. ரியாஸின் தந்தை சமையல்காரராக வேலை செய்து வருகிறார்.

இதில், அவருக்கு சொற்ப வருமானமே கிடைக்கிறது. எனவே காஸியாபாத் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் ரியாஸ் பாத்திரம் கழுவும் வேலை செய்து வருகிறார். வாழ்க்கையை நடத்துவதற்காக இவ்வளவு இளம் வயதிலேயே பள்ளி முடிந்த பின், பகுதி நேரமாக வேலைக்கு சென்று வரும் ரியாசுக்கு பெரிய லட்சியம் ஒன்றும் இருக்கிறது.

உலகத்தரம் வாய்ந்த சைக்கிள் பந்தய வீரராக உருவெடுக்க வேண்டும் என்பதுதான் அந்த லட்சியம். ஆனால் அந்த லட்சியத்தை அடைவதற்கு வறுமை அவருக்கு தடையாக இருந்து வருகிறது. எனினும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் படிப்பு, வேலை ஆகியவற்றுக்கு பின்னர், சைக்கிள் பந்தய வீரராக உருவெடுப்பதற்கு பயிற்சி பெற்று வருகிறார் ரியாஸ்.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் ரியாஸ் பயிற்சி பெற்று வருகிறார். பிரமோத் ஷர்மா என்ற பயிற்சியாளர், அவருக்கு தொழில்முறை பயிற்சியை வழங்கி கொண்டுள்ளார். துரதிருஷ்டம் என்னவென்றால், ரியாஸிடம் சொந்தமாக ஸ்போர்ட்ஸ் சைக்கிள் இல்லை. வேறு யாரிடமாவது இருந்து சைக்கிளை கடன் வாங்கிதான் ரியாஸ் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

எனவே சொந்தமாக ஒரு பந்தய சைக்கிள் இருந்தால் பரவாயில்லையே என ரியாஸ் நினைத்து ஏங்கி வந்தார். அவரது இந்த விருப்பம் பக்ரீத் பண்டிகை சமயத்தில் நிறைவேறியுள்ளது. ரியாஸின் ஆசையை நிறைவேற்றி வைத்திருப்பவர் இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த். ஆம், பந்தய சைக்கிள் ஒன்றை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், ரியாசுக்கு தற்போது பரிசாக வழங்கியுள்ளார்.

உலகத்தரம் வாய்ந்த சைக்கிள் பந்தய வீரராக உருவெடுக்க வேண்டும் என்ற ரியாஸின் லட்சத்தியத்திற்கு உதவும் வகையில் இந்த பரிசை குடியரசு தலைவர் வழங்கியுள்ளார். அத்துடன் சர்வதேச சாம்பியனாக உருவெடுக்க வேண்டும் எனவும் ரியாஸை அவர் வாழ்த்தியுள்ளார். கடின உழைப்பின் மூலம் ரியாஸ், அவருடைய கனவுகளை எட்ட வேண்டும் எனவும் குடியரசு தலைவர் தெரிவித்துள்ளார்.

பக்ரீத் பண்டிகைக்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது நேற்று (ஜூலை 31ம் தேதி) ரியாஸிடம் பந்தய சைக்கிள் ஒப்படைக்கப்பட்டது. ஊடகங்களில் வெளியான செய்திகள் மூலம் ரியாஸ் பற்றியும், அவரது போராட்டம் பற்றியும் அறிந்து கொண்டு, குடியரசு தலைவர் இந்த உதவியை செய்துள்ளார். குடியரசு தலைவரின் இந்த செயல்பாடு நாட்டு மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி மாநில சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியில் ரியாஸ் வெண்கல பதக்கம் வென்றுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ரியாஸின் கனவு நிறைவேற குடியரசு தலைவருடன் இணைந்து நாமும் வாழ்த்துவோம்.


Click it and Unblock the Notifications








