ட்ரம்ப்பை வரவேற்பதற்காக பிரதமர் மோடி வந்த கருப்பு கார்... எல்லாருக்குமே அந்த சந்தேகம் இருக்கு...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை வரவேற்பதற்காக, இந்திய பிரதமர் மோடி வந்த கருப்பு கார் கவனம் பெற்றுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று (பிப்ரவரி 24) இந்தியா வந்தார். இன்றும், நாளையும் இந்தியாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் டொனால்டு ட்ரம்ப் கலந்து கொள்ள உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் வருகை, இந்தியாவில் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அவர் இன்று காலை, குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்டு ட்ரம்ப்பை வரவேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி நேரடியாக அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை அவர் கட்டித்தழுவி வரவேற்றார்.

ட்ரம்ப்பை வரவேற்பதற்காக, ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி (Range Rover SUV) காரில், மோடி கெத்தாக வந்தார். இது கருப்பு நிற கார் ஆகும். அதே சமயம் இது கவச கார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த எஸ்யூவி ரக காரை, பிரதமர் மோடி பயன்படுத்துவது இது முதல் முறை கிடையாது. கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி ரேஞ்ச் ரோவர் காரில் வந்தார்.

அப்போதுதான் முதல் முறையாக அவரை அந்த காருடன் நம்மால் பார்க்க முடிந்தது. ஆனால் சமீப காலமாக இந்த காருடன் பிரதமர் மோடியை அடிக்கடி பார்க்க முடிகிறது. கருப்பு நிற ரேஞ்ச் ரோவர் காரில், பிரதமர் மோடி வருவது இன்றைய நாட்களில், வாடிக்கையான ஒரு நிகழ்வாகி விட்டது. பிரதமர் மோடி இதற்கு முன்பாக பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் (BMW 7-series) காரை பயன்படுத்தி வந்தார்.

அதுதான் அவரது அலுவல் காராகவும் இருந்து வந்தது. இதுவும் கூட கவச கார்தான். உச்ச கட்ட பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரில்தான், பிரதமர் மோடி வலம் வந்து கொண்டிருந்தார். பிரதமரின் வாகனம் என்பதால், பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரில் ஏராளமான மாடிபிகேஷன்களும் செய்யப்பட்டிருந்தன.

ஆனால் சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடி, பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரை பயன்படுத்துவதில்லை. அவர் அந்த காருக்கு மாற்றாகதான், தற்போது ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி காரை பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. ஆனால் திடீரென அவர் காரை மாற்றியது ஏன்? என்பதற்கு தற்போதைய நிலையில் தெளிவான விடை எதுவும் கிடைக்கவில்லை.

எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காகதான் அவர் காரை மாற்றியிருக்கலாம் என கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி வந்தது, 2010 ரேஞ்ச் ரோவர் எச்எஸ்இ (2010 Range Rover HSE) கார் ஆகும். இதில், 5.0 லிட்டர், வி8 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது லக்ஸரி எஸ்யூவி ரக கார் ஆகும். அத்துடன் இந்த காரில் பாதுகாப்பு வசதிகளுக்கும் பஞ்சமில்லை.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை வரவேற்பதற்காக, அகமதாபாத் விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்த கார் கவனம் ஈர்த்துள்ளதால், கார் ஆர்வலர்கள் பலர், அந்த கார் பற்றிய பல்வேறு விஷயங்களை தேடி தெரிந்து கொண்டு வருகின்றனர். பிரதமர் போன்ற முக்கியமான நபர்களுக்கு இதுபோன்ற கார்கள் அவசியமான ஒன்று.

ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) நிறுவனத்தால் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இங்கே ஒரு விஷயத்தை கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். மிகவும் புகழ்பெற்ற ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தை, இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம்தான் நிர்வகித்து வருகிறது. இது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம்.

சரி, இந்த காரின் மதிப்பு எவ்வளவு? என்ற சந்தேகம் தற்போது அனைவருக்கும் எழலாம். ஆனால் இந்த காரின் மதிப்பை சரியாக கூற முடியாத சூழல் இருக்கிறது. பிரதமரின் பாதுகாப்பிற்காக, இந்த காரில் ஏராளமான மாடிபிகேஷன்கள் செய்யப்பட்டிருக்கலாம். எனவே இந்த காரின் மதிப்பு எவ்வளவு? என்பது உறுதியாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications








