வங்கதேச பயணம்... புதிய ஏர் இந்தியா ஒன் விமானத்தில் கெத்து காட்டிய பிரதமர் மோடி! பிரம்மிக்க வைக்கும் பாதுகாப்பு
ஏர் இந்தியா ஒன் விமானத்தில் பிரதமர் மோடி வங்கதேசம் சென்றுள்ளார். இந்த விமானம் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு இன்று (மார்ச் 26) சென்றடைந்தார். ஊரடங்கிற்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் முதல் சர்வதேச பயணம் இதுவாகும். புதிதாக சேர்க்கப்பட்ட போயிங் 777 (Boeing 777) விவிஐபி விமானத்தில், பிரதமர் நரேந்திர மோடி வங்கதேசம் சென்றுள்ளார்.

போயிங் 777 விமானம் ஏர் இந்தியா ஒன் (Air India One) என அழைகப்படுகிறது. இந்தியாவின் குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரின் பயணங்களுக்கு 747 விமானம்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு பதிலாக போயிங் 777 விமானம் கடந்த ஆண்டுதான் சேர்க்கப்பட்டது.

இது ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் ஆகும். ஆனால் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில், குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் மற்றும் இந்திய பிரதமரின் பயணங்களை இந்திய விமானப்படை கையாளும். இந்த விமானத்தில் பல்வேறு அதிநவீன பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இதில், எல்ஏஐஆர்சிஎம் எனப்படும் (LAIRCM - Large Aircraft Infrared Countermeasures) மற்றும் எஸ்பிஎஸ் எனப்படும் (SPS - Self-Protection Suites) ஆகிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் முக்கியமானவை. இந்த விமானத்தின் இரு பக்கமும் இந்தியாவின் தேசிய சின்னம் இடம்பெற்றுள்ளது. மேலும் 'இந்தியா' மற்றும் 'பாரத்' என ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது.

அத்துடன் விமானத்தின் வால் பகுதியில் இந்தியாவின் மூவர்ண கொடி கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்த விமானத்தை ஏர் இந்தியாவின் பைலட்கள் இயக்க மாட்டார்கள். அதற்கு மாறாக இந்திய விமானப்படையின் பைலட்கள்தான் இயக்குவார்கள். எனினும் ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸஸ் லிமிடெட் (AIESL - Air India Engineering Services Limited) இந்த விமானத்தை பராமரிக்கும்.

இந்த விமானத்தால், எரிபொருள் நிரப்புவதற்கு நிறுத்தாமல், இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே பறக்க முடியும் என கூறப்படுகிறது. இந்த விமானம் ஏர் இந்தியா ஒன் என அழைக்கப்படுவதை போல், அமெரிக்க அதிபரால் பயன்படுத்தப்படும் விமானம் ஏர் ஃபோர்ஸ் ஒன் (Air Force One) என அழைக்கப்படுகிறது.

அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திற்கு இணையான பாதுகாப்பு அம்சங்களை ஏர் இந்தியா ஒன் விமானமும் பெற்றுள்ளது. ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை போலவே, ஏர் இந்தியா ஒன் விமானமும் Self-Protection Suites மற்றும் முக்கியமான கூட்டங்களை நடத்துவதற்கான பிரம்மாண்ட இட வசதியை கொண்டுள்ளது.

இந்தியாவின் குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் உச்சகட்ட பாதுகாப்பின் கீழ் இருக்க கூடிய நாட்டின் மிகவும் முக்கியமான நபர்கள். எனவே அவர்களுடைய பயணங்களுக்கு இத்தகைய உயரிய பாதுகாப்பு அம்சங்களை கொண்ட அதிநவீன விமானங்கள் மிகவும் அவசியமாகின்றன.


Click it and Unblock the Notifications








