மஹிந்திராவின் தீவிர ரசிகர்... கம்பீரமான தார் எஸ்யூவியை டெலிவரி எடுத்த உதய்பூர் இளவரசர்...
மஹிந்திரா தார் எஸ்யூவியை, உதய்பூர் இளவரசர் தற்போது டெலிவரி எடுத்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உதய்பூரின் இளவரசரும், தீவிர ஜீப் ரசிகருமான லக்ஸ்யராஜ் சிங் மேவார், புத்தம் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை தற்போது டெலிவரி எடுத்துள்ளார். அவரிடம் முந்தைய தலைமுறை தார் எஸ்யூவியும் இருக்கிறது. இதுதவிர 700 யூனிட்கள் என்ற அளவில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட தார் லிமிடெட் எடிசனையும் அவர் கடந்த ஆண்டு டெலிவரி எடுத்தார்.

இதன் மூலம் அவர் தீவிரமான தார் ரசிகர் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. தார் ரசிகர் என்பதை விட மஹிந்திரா நிறுவனத்தின் தீவிர ரசிகர் என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் அவரிடம் இன்னும் ஒரு சில மஹிந்திரா தயாரிப்புகள் இருக்கின்றன. இதில், மற்றொரு தார் எஸ்யூவியும், அல்டுராஸ் ஜி4 லக்ஸரி எஸ்யூவியும் முக்கியமானவை.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இதில், தார் எஸ்யூவியை கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பும், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 லக்ஸரி எஸ்யூவி காரை சமீபத்திலும் அவர் சொந்தமாக்கினார். புத்தம் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை அவர் சமீபத்தில் ஓட்டிய செய்திகளும் ஆட்டோமொபைல் இணையதளங்களை அலங்கரித்தன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மஹிந்திரா நிறுவனம் தார் ஆஃப் ரோடு எஸ்யூவியை தற்போது புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தி, விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. கடந்த அக்டோபர் 2ம் தேதிதான் புதிய தலைமுறை தார் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பழைய தலைமுறை மாடலுடன் ஒப்பிடுகையில், புதிய தலைமுறை தார் எஸ்யூவி பல்வேறு வகைகளில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

எனவே வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது புதிய தலைமுறை தார் எஸ்யூவிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு குவிந்து வரும் முன்பதிவுகளே இதற்கு சாட்சி. தற்போதைய நிலையிலேயே 20,000 என்ற முன்பதிவு எண்ணிக்கையை புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி கடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இந்த எஸ்யூவியின் ஒரு சில வேரியண்ட்களுக்கு 7 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நீடிப்பதாகவும் கூறப்படுகிறது. அதிக தேவை காரணமாக புதிய தார் எஸ்யூவியின் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து மஹிந்திரா நிறுவனம் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன. இதன் 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரையும், 320 என்எம் (மேனுவலில் 300 என்எம்) டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதுதவிர 2.2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் தேர்வும் மஹிந்திரா தார் எஸ்யூவியில் வழங்கப்படுகிறது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 130 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது. இந்த இரண்டு இன்ஜின்களுமே 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகளை பெற்றுள்ளன. அத்துடன் சௌகரியத்திற்கும், பாதுகாப்பிற்கும் பல்வேறு வசதிகளையும் புதிய மஹிந்திரா தார் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








