லேண்ட்ரோவர் காதலர்... தான் வடிவமைத்த காரிலேயே இறுதி யாத்திரை செல்லும் இளவரசர் பிலிப்!
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கணவரும், இளவரசருமான பிலிப் (99) வயது மூப்பு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரது இறுதிச் சடக்கு வரும் 17ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பிரச்னை காரணமாக அரச குடும்பத்தினர் மட்டுமே இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில், இங்கிலாந்து இளவரசர் பிலிப் இறுதி ஊர்வலம், வேட்டாயாடுவதற்கான அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட வாகனத்தில் நடைபெற உள்ளது. அவர் கொடுத்த ஆலோசனையின் பேரில் உருவாக்கப்பட்ட விசேஷ லேண்ட்ரோவர் காரில்தான் இறுதி யாத்திரை செல்ல இருக்கிறார்.

இளவரசர் பிலிப் லேண்ட்ரோவர் கார்களை பயன்படுத்தினார். அவரது பயணங்கள் பெரும்பாலும் லேண்ட்ரோவர் கார்களில்தான் அமைந்தன. தான் வாழ்ந்த காலத்தில் லேண்ட்ரோவருடன் இருந்த பிணைப்பு, அவரது இறுதி ஊர்வலம் வரை தொடர இருக்கிறது.

அதாவது, 'கன் பஸ்' என்ற பெயரில் லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி காரை கடந்த 2005ம் ஆண்டு விசேஷமாக வடிவமைத்து வாங்கினார். அவரது விருப்பத்திற்கு ஏற்ப இந்த வாகனத்தை ஃபோலி ஸ்பெஷலிஸ்ட் வெஹிக்கிள்ஸ் நிறுவனம் கட்டமைத்து கொடுத்துள்ளது.

இளவரசர் பிலிப் கொடுத்த யோசனைகளின் அடிப்படையிலேயே இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டது. இந்த நிலையில், இளவரசர் பிலிப் உடல் வரும் 17ந் தேதி மாலை வின்ட்சர் கோட்டையில் இருந்து அருகிலுள்ள செயின்ட் ஜார்ஜ் சேப்பலுக்கு இறுதி சடங்கிற்காக எடுத்துச் செல்லப்பட உள்ளது.

இதற்காக, அவர் வடிவமைத்து வாங்கிய அதே லேண்ட்ரோவர் டிஃபென்டர் கன் பஸ் எஸ்யூவி பயன்படுத்தப்பட உள்ளது. முந்தைய தலைமுறை லேண்ட்ரோவர் டிஃபென்டர் 130 எஸ்யூவியின் அடிப்படையில்தான் கன் பஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கன் பஸ் பச்சை வண்ணத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும், எல்இடி விளக்குகள், பச்சை வண்ண லெதர் இன்டீரியர், ஓக் மரத் தகடுகளுடன் அலங்கார வேலைப்பாடுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் இளவரசர் பிலிப் விருப்பத்தின் பேரில்தான் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஒருமுறை தனது மனைவி ராணி இரண்டாம் எலிசபெத்திடம் பேசிக் கொண்டிருக்கும்போது, தான் இறந்துவிட்டால், இந்த லேண்ட்ரோவரில் வைத்து வின்ட்சருக்கு எடுத்துச் செல்லுங்கள் என்று கூறி இருக்கிறார். அவரது விருப்பத்தின் பேரிலேயே இந்த வாகனம் தற்போது அவரது இறுதி ஊர்வலத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளது.

அதேநேரத்தில், இந்த வாகனத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அவசர சமயம் கருதி, மாற்று வாகனமாக மற்றொரு லேண்ட்ரோவர் எஸ்யூவியும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தான் வாழ்ந்த காலத்தில் மட்டுமின்றி, தனது இறுதி யாத்திரையிலும் லேண்ட்ரோவர் காரில் பிலிப் செல்ல இருப்பது இங்கிலாந்து மக்களிடேயே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நூற்றாண்டுக்கும் மேலாக அரச குடும்பத்தினருக்குமான லேண்ட்ரோவருக்கான பிணைப்பு எத்தகையது என்பதை இதன் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
Image Courtesy: Foley Specialist Vehicles Ltd

இளவரசர் பிலிப் இறுதி ஊர்வலத்தில் இங்கிலாந்து ராணுவத்தினர், அரச குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட உள்ளனர். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூட கலந்து கொள்ளவில்லை. அரச குடும்பத்திலிருந்து பிரிந்து வாழும் பிலிப் பேரன் ஹாரி தற்போது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள இங்கிலாந்து வந்துள்ளார். பிலிப்பின் இறுதி ஊர்வலம் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் நேருவுடன் இளவரசர் பிலிப் மிகவும் நெருங்கி பழகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








