ரியல் எஸ்டேட்காரங்க இந்த விஷயத்தை சொல்ல மாட்டாங்க... ஏர்போர்ட் பக்கத்துல வீடு வாங்க கூடாது... ஏன் தெரியுமா?
விமான நிலையங்களுக்கு அருகில் ஏன் வீடு வாங்க கூடாது? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எங்கே வசிக்க போகிறோம்? என்பதை தேர்ந்து எடுப்பது வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்று. வீடு பாதுகாப்பாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும் என்பது பலரின் எண்ணம். அத்துடன் அனைத்து வசதிகளும் அருகிலேயே இருக்க வேண்டும் எனவும் பலர் விரும்புகின்றனர். ஆனால் ரியல் எஸ்டேட் வேல்யூ அதிகமாகி கொண்டே செல்வதால், நகர பகுதிகளில் வீடு வாங்குவது கடினமான ஒன்றாக உள்ளது.

இதன் காரணமாக நகரங்களுக்கு வெளியே வீடு வாங்குவதற்கு மக்கள் நினைக்கின்றனர். நகர பகுதிகளை காட்டிலும் இங்கே குறைவான விலையில் வீடு வாங்க முடியும். அல்லது நிலம் வாங்கி வீடு கட்ட முடியும். பெரும்பாலான விமான நிலையங்கள் இதுபோன்ற இடங்களில்தான் அமைந்துள்ளன. அதாவது புறநகர் பகுதிகளில்தான் விமான நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

நகர பகுதிகளில் இருந்து விமான நிலையங்களை சற்று தள்ளி வெளியே அமைப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. விமான நிலையங்களுக்கு அதிக இடம் தேவைப்படும் என்பது ஒரு காரணம். விமான நிலையங்கள் அமைப்பதற்கு தேவைப்படும் அளவிற்கான பெரிய இடத்தை நகர பகுதிகளில் கையகப்படுத்துவது என்பது மிகவும் சிரமமான காரியம்.

இதுதவிர பாதுகாப்பு உள்பட இன்னும் பல்வேறு காரணங்களை சொல்ல முடியும். விமான நிலையங்கள் புறநகர் பகுதிகளில் அமைக்கப்படுவதால், அங்கும் நிலத்தின் மதிப்பு உயர்கிறது. எனவே அங்கு நிலத்தில் முதலீடு செய்வது உங்களுக்கு எதிர்காலத்தில் நல்ல பலனை அளிக்கலாம். ஏனெனில் தற்போது குறைவான விலையில் வாங்கும் நிலத்தை, நீங்கள் எதிர்காலத்தில் நல்ல விலைக்கு விற்க முடியும்.

ஆனால் விமான நிலையங்களுக்கு அருகே குடியேறுவது உங்களுக்கு பலன் அளிக்குமா? என்பது சந்தேகம்தான். விமான நிலையங்களுக்கு அருகே வாடகைக்கோ அல்லது புது வீடு கட்டியோ குடியேறலாமா? அல்லது வேண்டாமா? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. எந்த ஒரு விஷயம் என்றாலும் ஒரு சில நன்மைகளும், ஒரு சில தீமைகளும் இருக்கும்.

விமான நிலையங்களுக்கு அருகில் குடியேறுவதிலும் கூட அப்படித்தான். புறநகர் பகுதியில் இருப்பதால், போக்குவரத்து நெரிசல் பிரச்னை பெரிதாக இருக்காது என்பது முதல் நன்மை. விமான நிலையங்களுக்கு அருகே வசதிப்பதில் இருக்கும் மிக முக்கியமான நன்மை இதுதான். இதுதவிர புறநகர் பகுதியில் இருப்பதால், குறைவான மாத வாடகையில் வீடு கிடைக்கும் என்பது இரண்டாவது நன்மை.

அதேபோல் நிலத்தின் விலை குறைவு என்பதால், நீங்கள் சொந்தமாக வீடு கட்டுவதாக இருந்தாலும், நகர பகுதிகளை காட்டிலும் குறைவாகவே செலவு ஆகும். ஆனால் விமான நிலையங்களுக்கு அருகே வசிப்பதில் பல்வேறு தீமைகளும் இருக்கின்றன. இவை உடல் நலம் சார்ந்த பிரச்னைகள் என்பதால், தீவிரமாக கவனத்தில் எடுத்து கொள்வது நல்லது.

விமான நிலையங்களுக்கு அருகே வசிப்பதில் இருக்கும் மிக முக்கியமான பிரச்னை ஒலி மாசுபாடு (Noise Pollution). விமானங்களின் சத்தம் தவிர்க்க முடியாத ஆபத்துக்களில் ஒன்று. இது உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். மிகவும் எரிச்சலூட்டும் வகையான ஒலி மாசுபாடுகளில் இதுவும் ஒன்று.

இதன் காரணமாக உங்கள் தூக்கம் கெட்டு போவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருந்தால், இன்சோம்னியா (Insomnia) மற்றும் இதர உடல் நல பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்பதில் இருக்கு அடுத்த பிரச்னை காற்று மாசுபாடு (Air Pollution).

ஆம், ஒலி மாசுபாட்டுடன் காற்று மாசுபாடு பிரச்னையாலும் நீங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. விமானங்களில் இருந்து உமிழப்படும் தீங்கு விளைவிக்கு வாயுக்களால், நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடலாம். இந்த வாயுக்கள் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலையும் மாசுபடுத்துகின்றன.

குறிப்பாக காற்றின் தரம் (Air Quality) குறைந்து, பல்வேறு வகையான சுவாச பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த விஷயத்தில் மிக முக்கியமான காற்று மாசுபடுத்திகள் எவைவென்றால், அவை நைட்ரஜன் டைஆக்ஸைடு (Nitrogen Dioxide) மற்றும் கார்பன் மோனாக்சைடு (Carbon Monoxide) ஆகும்.

விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு ஆஸ்துமா மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை உடல் நலம் சார்ந்த பிரச்னைகள் என்பதால், விமான நிலையங்களுக்கு அருகே குடியேறுவதை பற்றி ஒரு முறைக்கு இரு முறை யோசித்து கொள்வது நல்லது.

வாடகை வீடு என்றாலே நாம் தீவிரமாக யோசிக்க வேண்டும். அதிலும் சொந்த வீடு கட்டுவது என்றால், மிகவும் கவனமாக யோசித்து முடிவு எடுப்பது நல்லது. ஏனெனில் விமான நிலையங்களுக்கு அருகில் குடியேறுவதில் ஒரு சில நன்மைகளை காட்டிலும், தீமைகள், முக்கியமாக உடல் நலம் சார்ந்த பிரச்னைகள் மிகவும் அதிகமாக உள்ளன.

தற்போது வீடுகளை கட்டி விற்பனை செய்து வரும் நிறுவனங்கள் விமான நிலையங்களுக்கு அருகிலேயே வீடு இருப்பதாக விளம்பரங்களை செய்து வருகின்றன. இந்த விளம்பரங்கள் கவர்ந்து இழுக்கும் வகையில் இருந்தாலும், மிகவும் கவனமாக இருப்பது நல்லது. மேற்கண்ட பிரச்னைகளை மனதில் வைத்து கொண்டு, இந்த விஷயத்தில் முடிவு எடுங்கள்.

உலகின் பல்வேறு இடங்களில், விமான நிலையங்களுக்கு அருகே வசிக்கும் மக்கள் போராட்டங்களை நடத்தும் அளவிற்கு கூட நிலைமை சென்றுள்ளது. விமானங்களின் சத்தம்தான் இந்த போராட்டங்களுக்கு காரணம். விமான நிலையங்களுக்கு அருகே குடியேறுவதற்கு முன்பு இதை எல்லாம் கவனத்தில் கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும்.


Click it and Unblock the Notifications








