ஹோண்டா நிறுவனத்திற்கு எதிராக குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் துவங்கிய குப்புசாமி.. காரணம் என்ன.
ஹோண்டா நிறுவனத்திற்கு எதிராக குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் துவங்கிய குப்புசாமி.. காரணம் என்ன.?
ஹோண்டா நிறுவனத்திற்கு எதிராக குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கியுள்ளார் தாராபுரத்தைச் சேர்ந்த ஒருவர்.

தாராபுரம் அருகேயுள்ள கவுண்டச்சிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவர் கடந்த வருடம் புதிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியுள்ளார்.

சிறிது நாட்களிலேயே குப்புசாமி வாங்கிய புதிய ஆக்டிவா ஸ்கூட்டரில் தொடர்ந்து அடிக்கடி பழுது ஏற்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக ஸ்கூட்டர் வாங்கிய ஹோண்டா ஷோரூமிற்கு சென்று முறையிட்டுள்ளார் குப்புசாமி.

எனினும் குப்புசாமியின் ஆக்டிவாவில் ஏற்பட்ட பழுது மட்டும் நீக்கப்படவில்லை. இதே போல கடந்த ஒரு வருடத்திற்குள்ளாக 25 முறை அவரின் ஆக்டிவா ஸ்கூட்டர் தொடர்ந்து பழுதாகியுள்ளது.

இருப்பினும் வண்டியினை விற்பதில் காட்டிய அக்கறையை ஹோண்டா நிறுவன தரப்பினர் பழுது நீக்குவதில் காட்டாததால் ஆக்டிவாவில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்ந்து நீடித்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஜூன் 24 அன்று இரவு, தன் மனைவி குழந்தைகளுடன் அந்த ஆக்டிவா ஸ்கூட்டரில் வெளியில் கிளம்பிச் சென்றிருக்கிறார் குப்புசாமி.

அப்போது மீண்டும் ஆக்டிவாவில் பழுது ஏற்பட்டு திடீரென இயங்காமல் நின்றுள்ளது. இதனால் வேறு வழியில்லாமல் 4 கிமீ தூரத்திற்கு வண்டியை தள்ளிக்கொண்டே வீடு வந்து சேர்ந்திருக்கிறார் அவர்.

இந்த சம்பவத்தால் மனம் நொந்துபோன குப்புசாமி, இனியும் பொறுமை காப்பதில் பலனில்லை என்ற முடிவிற்கு வந்து அலட்சியம் காட்டிவரும் ஹோண்டாவிற்கு எதிரான நூதன நடவடிக்கையில் இறங்கினார்.

அடுத்த நாளே அவர் தனது மனைவி, மட்டும் இரு குழந்தைகளுடன் தான் பைக் வாங்கிய, தாராபுரம் பைபாஸ் சாலையில் உள்ள ஹோண்டா ஷோரூம் முன்பாக அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளார்.

தரமில்லாத ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு மாற்றாக புதிய ஆக்டிவா ஸ்கூட்டரை மாற்றித்தரக் கோரி தன்னுடைய குடும்பத்துடன் குப்புசாமி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர் தனது ஆக்டிவா வாகனத்தில் ‘எச்சரிக்கை' என்ற தலைப்பில் ஹோண்டா நிறுவனத்தை கண்டித்து வாசகங்கள் எழுதப்பட்ட நோட்டீஸ் ஒன்றையும் தன் பைக்கில் ஒட்டி, அதனை ஷோரூம் முன்பாக நிறுத்தியுள்ளார்.

உலகின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹோண்டா, இந்தியாவிலும் முன்னணி நிறுவனமாக வலம் வருகிறது.

குப்புசாமி தொடங்கியுள்ள இந்த போராட்டம், வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை இழந்து அந்நிறுவனத்திற்கு அவப்பெயரை தேடித்தரும் என்பதால் இந்த விஷயத்தில் அந்நிறுவனம் கவனம் செலுத்தும் என நம்பலாம்.

இதற்கு முன்னதாக பிஎம்டபிள்யு, மெர்சிடிஸ், ஸ்கோடா போன்ற முன்னணி கார் நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவையை கண்டித்து இதைப் போன்ற பல போராட்டங்கள் பல மாநிலங்களில் நடந்திருந்தாலும், தமிழகத்தில் இது முதல் முறை என்று கூறலாம்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குப்புசாமியின் புகைப்படங்களை அவரின் நண்பர் ஒருவர் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இந்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஹோண்டா நிறுவனத்திற்கு எதிராகவும், குப்புசாமியை ஊக்கப்படுத்தியும் பல கருத்துகள் உலா வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








