பெண்களுக்கு குஷியளிக்கும் புதிய திட்டம்! கட்டணமில்லா பேருந்துபோல் 'பிங்க் லைசென்ஸ் டே' அறிமுகம்!
பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவதை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கென தனி ஓர் நாளை ஒதுக்கி புதுச்சேரி மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நாட்டிலேயே முதல் முறையாக புதுச்சேரி மாநில அரசு பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவதை ஊக்குவிக்கும் விதமாக 'பிங்க் லைசென்ஸ் டே' எனும் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கின்றது. பெண்களுக்கு மிகவும் பிடித்தமான நிறமாக கருதப்படும் இந்த நாளில் பெண்களுக்கு மட்டும் ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

இதன்படி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று சிறப்பு முகாம்கள் புதுவை மாநிலத்தின் போக்குவரத்து அலுவலகங்களில் நடத்தப்பட இருக்கின்றன. அங்கு பிரத்யேகமாக பெண் வாகன ஓட்டிகளுக்கு மட்டும் லைசென்ஸ் வழங்கப்படும். இதற்கான அறிவிப்பையே மாநிலத்தின் போக்குவரத்துத் துறை வெளியிட்டிருக்கின்றது.

இதுகுறித்து நேற்றைய (டிசம்பர் 13) தினம் செய்தியாளர்களிடத்தில் பேசிய மாநிலத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, "மாணவிகள் மற்றும் பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஏதுவாக அவர்களுக்கென தனி ஒரு நாளாக வாரத்தின் இறுதி நாள் சனிக்கிழமையை ஒதுக்க அரசு முடிவு செய்திருக்கின்றது" என்றார்.

கடந்த வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை அன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநிலத்தின் முதலமைச்சர் என்ஆர் ரங்கசாமி தலைமையில் இதற்கான தொடக்க விழாவும் சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

மாநில அரசு மிக சமீபத்தில் பெண்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் இளஞ்சிவப்பு நிற பேருந்துகளை பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருப்பதாக அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்திருந்தார். மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின்கீழ் பெண்களுக்கான பிங்க் நிற பேருந்து இயக்க மாநில அரசால் முடிவெடுக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்தே தற்போது பெண்களுக்கான சிறப்பு நாள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த திட்டத்தை முன்னோடியாகக் கொண்டு புதுவையில் 'பிங்க் நிற பேருந்துகள்' மற்றும் 'பிங்க் டே' ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த பிங்க் நிற பேருந்துகளில் பெண்களுக்கானவை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால் பெண்களால் மட்டுமே அதில் பயணிக்க முடியும். விரைவில் புதுச்சேரி மாநில அரசு ஒன்றிய அரசின் வாயிலாக 200 புதிய பேருந்துகளை வாங்க இருக்கின்றது. அதில் சிலவற்றையே இளஞ் சிவப்பு நிறத்தில் பெண்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட இருக்கின்றன.

இதுமட்டுமின்றி, பெண்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஜிபிஎஸ் தொழில்நுட்ப கருவிகள் மற்றும் கேமிராக்களை பொருத்தவும் மாநில அரசு திட்டமிட்டிருக்கின்றது. கண்கானிப்பு கேமிராக்கள் பேருந்துகளில் மட்டுமின்றி பேருந்து நிறுத்தங்களிலும் பொருத்தப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

பெண்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது புதுவை பெண்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக, பணிக்கு செல்லும் பெண்கள், கல்லூரிக்கு செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு இந்த திட்டங்கள் பேருதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








