யமஹா டீ-சர்ட்டை கொடுத்து மயக்கிட்டாங்க!! 200 பைக்குகளில் இளைஞர்கள்... திமுக எம்.எல்.ஏ துவங்கி வைத்த ஊர்வலம்!
புதுச்சேரியில் இளைஞர்கள் சிலர் ஆயுத பூஜைக்காக சுத்தம் செய்து, பொட்டு வைத்து அலங்கரித்த சுமார் 200 யமஹா ஆர்.எக்ஸ்100 (Yamaha RX100) பைக்குகளில் சாலையை அதிர வைத்தப்படி ஊர்வலம் சென்றுள்ளனர்.
ஆயுத பூஜை வந்தாலே, வருடம் முழுவதும் கழுவாமல் மூலையில் ஓரங்கப்பட்ட வாகனங்களை கூட கழுவி சுத்தம் செய்து, நாலாப்புறமும் பட்டை போட்டு, சந்தானத்தை தெளித்துவிடும் பழக்கம் நம்மில் பெரும்பாலானோர் இடத்தில் உள்ளது. பின்னர், அவ்வாறு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களை போட்டோ பிடித்து, சமூக வலைத்தளங்களில் லைக்குகளை அள்ள முயல்வோம்.

ஆனால், புதுச்சேரியில் இளைஞர்கள் சுமார் 200 யமஹா ஆர்.எக்ஸ்100 பைக்குகளில் சாலையை அதிரவிட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் நடந்துள்ள இந்த சம்பவம் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்திருந்தாலும், சம்பவம் நடைபெற்ற பகுதி மக்கள் இதனை அசால்ட்டா கடந்துச் செல்கின்றனர். ஏனெனில், அந்த பகுதியில் ஒவ்வொரு வருடமும் இவ்வாறுதான் நடக்குமாம்.
காரைக்காலில் யமஹா ரைடர் ஒர்க் ஷாப் என்ற பெயரில் யமஹா இருசக்கர வாகனங்களை பழுது பார்க்கும் இடம் ஒன்று உள்ளது. இந்த வொர்க் ஷாப் மூலமாக பலர் பழைய யமஹா ஆர்.எக்ஸ்100 பைக்குகளை வாங்கியதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஆயுத பூஜையன்று இந்த வொர்க் ஷாப்பிற்கு திரளான ஆர்.எக்ஸ்100 பைக் உரிமையாளர்கள் வருவர்.

அந்த வகையில், இந்த வருடமும் ஏறக்குறைய 200 ஆர்.எக்ஸ்100 பைக் உரிமையாளர்கள் தங்களது பைக் மற்றும் நண்பர்கள், குடும்பத்தினர் உடன் காரைக்காலில் உள்ள இந்த யமஹா பைக் ரைடர் வொர்க்-ஷாப்பிற்கு வந்துள்ளனர். பின்னர், கழுவி சுத்தமாக கொண்டுவரப்பட்ட அந்த 200 ஆர்.எக்ஸ்100 பைக்குகளுக்கும் வொர்க் ஷாப்பில் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. வந்தவர்களுக்கு இனிப்பு உள்ளிட்டவற்றை வழங்கிய பின்னர், 200 யமஹா ஆர்.எக்ஸ்100 பைக்குகளும் க்ரூப்பாக நகர் வலம் செல்ல ஆரம்பித்தன.
இந்த ஊர்வலத்தை அந்த பகுதி திமுக எம்.எல்.ஏ நாக தியாகராஜன் துவங்கி வைத்தார். ஊர்வலத்தில் பங்கேற்ற ஆர்.எக்ஸ்100 பைக் உரிமையாளர்கள் அனைவருக்கும் யமஹா டீ-சர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் யமஹா ஆர்.எக்ஸ்100 பைக்கை சாலையில் பார்ப்பது அரிதாகி வரும் சூழலில், ஒரே நேரத்தில் இத்தனை ஆர்.எக்ஸ்100 பைக்குகளை பார்த்தது அந்த பகுதி மக்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

யமஹா ஆர்.எக்ஸ்100 பைக்கை உங்களில் பெரும்பாலானோர் ஒருமுறையாவது நேரில் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். குறிப்பாக, உறுமும் சைலன்சர் சத்தம் அதன் அடையாளம். ஒரு ஆர்.எக்ஸ்100 பைக் சாலையில் சென்றாலே அதன் சத்தத்தினால் மற்றவைகளில் இருந்து தனித்து தெரியும். அப்படியிருக்கையில், 200 ஆர்.எக்ஸ்100 பைக்குகள் ஒரே நேரத்தில் சென்றுள்ளன என்றால், அங்கு அந்த நேரத்தில் ஏற்பட்டிருக்கும் அதிர்வை யோசித்து பாருங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: யமஹா ஆர்.எக்ஸ்100 பைக்குகளை பார்ப்பது அரிதாகி வருவதால், காரைக்காலில் நடந்த இந்த நிகழ்வு பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தாலும், கிட்டத்தட்ட 20- 25 வருடங்களுக்கு முன் பயன்பாட்டில் இருந்த பைக்கை இப்போது பயன்படுத்துவதை நாம் ஊக்கப்படுத்துகிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம். ஏனெனில், மத்திய அரசு பழைய வாகனங்களை மக்கள் பயன்படுத்தி, காற்றை மாசுபடுத்துவதை விரும்பவில்லை.


Click it and Unblock the Notifications









