உயிர்காக்கும் பணியில் களமிறங்கும் ஆட்டோக்கள்... ஆம்புலன்ஸ் இல்லனா என்னங்க நாங்க இருக்கோம்...
ஆம்புலன்ஸ் பற்றாக்குறை தலைவிரித்தாடும் நிலையில் ஆட்டோ டிரைவர்கள் தங்களின் ஆட்டோரிக்சாக்களையே ஆம்புலன்ஸ்களாக மாற்றி வருகின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிப்போரின் எண்ணிக்கை மிகக் கடுமையாக உயர்ந்து வருகின்றது. இதைவிட உயிரிழப்போரின் எண்ணிக்கை பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உயரத் தொடங்கியிருக்கின்றது.

தீவிர தொற்றின் காரணமாக நோயாளிகள் இறப்பதைவிட ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறப்போரின் எண்ணிக்கை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது.

போதாக்குறைக்கு தற்போது ஆம்புலன்ஸ் பஞ்சமும் தலைவிரித்தாட ஆரம்பித்திருக்கின்றது. இரண்டாம் அலை பரவல் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்த நிலை தென்பட்டாலும், தற்போது மக்கள் கொத்து கொத்தாக பாதிப்புக்குள்ளாகி வருவதால் ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு பெரும் கவலைக்குரியதாக மாறியிருக்கின்றது.

நாடு முழுவதிலும் இந்த நிலையே காட்சியளிக்கின்றது. இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் உதவிக் கரம் நீட்டும் வகையில் சில தனி நபர்கள் தங்களின் கார்களையே ஆக்சிஜன் வசதிக் கொண்ட வாகனங்களாக மாற்றி வருகின்றனர். ஏழை, எளிய மக்களுக்கும் பயன்படும் வகையில் குறைந்த கட்டண சேவையை அவர்கள் வழங்கி வருகின்றனர்.

இந்த மாதிரியான சூழ்நிலையில் மஹராஷ்டிரா மாநிலம், புனேவில் ஆட்டோக்காரர்கள் சிலர் தங்களின் ஆட்டோரிக்ஷாக்களை ஆக்சிஜன் இருக்கும் வாகனங்களாக மாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில் நோயாளிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்கும்வகையில் கணிசமான ஆட்டோக்காரர்கள் இந்த நடவடிக்கையில் களமிறங்கியிருக்கின்றனர்.

இந்தியாவில் அதிகம் பாதிப்பைச் சந்தித்து வரும் நகரங்களில் புனேவும் ஒன்று. இங்கு மருத்துவ அடிப்படை கட்டமைப்பு மிகக் கடுமையாக சரிந்து காணப்படுகின்றது. படுக்கை, மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் போன்ற அனைத்திற்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியுள்ளது.

இந்த நிலையிலேயே புனவேச் சார்ந்த ஆட்டோக்காரர்கள் தங்களின் ஆட்டோரிக்ஷாக்களை தற்காலிக ஆக்சிஜன் வசதிக் கொண்ட ஆம்புலன்ஸ்களாக மாற்றத் தொடங்கியிருக்கின்றனர். "தங்களிடம் இருக்கும் ஆக்சிஜன்கள் வாயிலாக ஓர் நோயாளுக்கு குறைந்ததது 6 முதல் 7 மணி நேரம் வரை ஆக்சிஜனை வழங்க முடியும்" என ஆம்புலன்ஸாக மாறியிருக்கும் ஆட்டோக்களின் உரிமையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இதேபோன்று நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில், அம்மாநில அரசு பேருந்துகளையே ஆக்சிஜன் மையங்களாக மாற்றி பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றன. இதேபோன்று தற்போது புதிதாக சென்னை மாநகராட்சியின் ஆணையராக பொறுப்பேற்றிருக்கும் ககன்தீப் 250க்கும் மேற்பட்ட கார்களை ஆக்சிஜன் வாகனங்களாக மாற்றி பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








