பணியாளர்களுக்கு நானோ கார் பரிசளித்த புனே தொழிலதிபர்!
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கா தனது நிறுவனத்தின் சிறந்த பணியாளர்களுக்கு ஃபியட் புன்ட்டோ கார்களையும், ஆபரணங்களையும், வீடுகளையும் வாரி வழங்கி சூரத் வைர ஏற்றுமதி வியாபாரி சாவ்ஜி தோலக்கியா பரபரப்பை ஏற்படுத்தினார். கலியுகத்தின் வள்ளல் என்று அவருக்கு நாடு முழுவதும் இருந்து பலர் தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அவரது வழியில் புனேயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சிறப்பாக பணியாற்றிய தனது நிறுவனத்தின் பணியாளர்களை கவுரப்படுத்தவும், ஊக்கமளிக்கும் விதமாக நானோ கார்களை பரிசாக வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

அந்த தாராள மனசுக்காரர்..
சிஎன்சி பால்ஸ்க்ரூஸ் அண்ட் பேரிங் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், நிறுவனருமான வரதராஜ் கமலேஷ் நாயக் என்பவர்தான் இந்த தாராள மனசுக்கு சொந்தக்காரர். புனேயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இவரது நிறுவனத்தின் தொழிற்சாலை மங்களூரில் செயல்பட்டு வருகிறது.

பணியாளர்களுக்கு பரிசு
புனே தலைமை அலுவலகம் மற்றும் மங்களூர் ஆலையில் பணியாற்றி வரும் 12 தொழிலாளர்களுக்கு நானோ காரை அவர் பரிசளித்துள்ளார். சூரத் வைர வியாபாரியின் நிறுவனம் ரூ.6,000 கோடி ஆண்டு வர்த்தகத்தை கொண்டது. ஆனால், வரதராஜின் நிறுவனம் ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் மட்டுமே வர்த்தகம் கொண்டது.

கவுரப்படுத்துவது கடமை
இந்த பரிசு வழங்கப்பட்டது குறித்து வரதராஜ் கூறுகையில், "எனது பணியாளர்களின் அயராத உழைப்பிலும், திறமையாலும் எனது நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இதற்கு காரணமான எனது தொழிலாளர்களுக்கு உரிய அங்கீகாரமும், கவுரப்படுத்துவதும் எனது கடமை என பெருமிதம் தெரிவித்திருக்கிறார் வரதராஜ்.

விருதுகள்
வரதராஜின் நிறுவனம் நேர்மைக்கும், தரமான பொருட்கள் தயாரிப்பிற்கும் பல்வேறு விருதுகளை வாங்கியிருக்கிறது. NEFF ஜெர்மனி ஆட்டோமேஷன் விருது, சரியாக வரி செலுத்துவதற்காக மத்திய சுங்க இலாகாவின் விருதுகள் மற்றும் சிறந்த வாடிக்கையாளருக்கான கனரா வங்கியின் விருது என்று வரதராஜின் மனது போன்றே அவரது நிறுவனம் பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறது.

விரிவாக்கத் திட்டம்
கடந்த 28 ஆண்டுகளுக்கு முன் வரதராஜின் நிறுவனம் துவங்கப்பட்டிருக்கிறது. தற்போது அவரது நிறுவனம் தயாரிக்கும் உதிரிபாகங்களுக்கு பல வெளிநாடுகளில் கிராக்கி இருக்கிறது. இதையடுத்து, அமெரிக்காவின் போஸ்டன் நகரில் ஒரு ஆலையை திறக்க அவர் திட்டமிட்டிருக்கிறார். மேலும், மங்களூர் ஆலையின் மூலம் கிடைத்த வெற்றியை வைத்து நாக்பூர், இந்தூர் மற்றும் ஹரித்வாரில் புதிய ஆலைகளை அமைக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.

சிறிசோ, பெரிசோ...
நானோ கார் ஒன்றின் விலை ரூ.2.25 லட்சம் அடக்க விலையில் கிடைக்கிறது.
கார் சிறிசோ, பெருசோ... வரதராஜ் மனசு ரொம்ப பெருசு.!!


Click it and Unblock the Notifications








