இனி இது இல்லாம பெட்ரோல் பங்க் போனா 10 ஆயிரம் அபராதம் கட்டணும்... அதிர்ச்சியில் உறைந்த வாகன உரிமையாளர்கள்...
இந்தியாவில் உரிய ஆவணங்கள் இல்லாமல், வாகனங்களை ஓட்டுவது என்பது சாதாரணமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. டிரைவிங் லைசென்ஸ் (Driving Licence), இன்சூரன்ஸ் (Insurance) மற்றும் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் (Pollution Under Control Certificate) போன்ற ஆவணங்கள் இல்லாமல், நிறைய பேர் இங்கு வாகனங்களை ஓட்டி கொண்டுள்ளனர்.
இதில், மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாமல் இயங்கும் வாகனங்களால், சுற்றுச்சூழல் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் வாகன உரிமையாளர்கள் பலர் இதை எல்லாம் ஒரு பொருட்டாக கூட எடுத்து கொள்வதில்லை. எனவே மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாமல் இயங்கும் வாகனங்களுக்கு எதிராக அரசு அதிகாரிகள் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இத்தகைய வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் (Fine) விதிப்பதுடன், மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) விற்பனை செய்யப்படாது என்பது போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வரிசையில் மற்றொரு புதிய நடவடிக்கை ஒன்றை எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த புதிய நடவடிக்கையின் கீழ், இனிமேல் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் பங்க்குகள் ஆட்டோமேட்டிக்காகவே அபராதம் விதித்து விடும். அது எப்படி? என்பதை விரிவாக பார்க்கலாம்.
இந்த புதிய திட்டத்தின் கீழ், பெட்ரோல் பங்க்குகளில் நிறைய கேமராக்கள் பொருத்தப்படும். எரிபொருள் நிரப்ப வரும் வாகனங்களின் பதிவு எண்களை இந்த கேமராக்கள் டிராக் செய்யும். அதன்பின் அந்த பதிவு எண் கொண்ட வாகனத்திற்கு மாசு கட்டுப்பாடு சான்றிதழ் உள்ளதா? என்பதை இந்த கேமராக்களின் சிஸ்டம் பரிசோதனை செய்யும்.

சம்பந்தப்பட்ட வாகனத்திற்கு மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இருந்து விட்டால் பிரச்னை கிடையாது. ஆனால் ஒருவேளை மாசு கட்டுப்பாடு சான்றிதழ் காலாவதியாகி இருந்தால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தும்படி வாகனத்தின் உரிமையாளர் செல்போனுக்கு மெசேஜ் வரும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு இந்த மெசேஜ் அனுப்பி வைக்கப்படும். மஹாராஷ்டிரா மாநிலம் புனே (Pune) நகரில்தான், இந்த திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாமல் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வரும் என நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் போக்குவரத்து தொடர்பான விதிமுறை மீறல்களை கட்டுக்குள் கொண்டு வர அதிநவீன தொழில்நுட்பத்தை அரசு அதிகாரிகள் தற்போது பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இது உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய விஷயம். ஆனால் கடந்த காலங்களில் ஒரு சில முறை தொழில்நுட்பங்கள் தடுமாறியுள்ளன.
எனவே இது போன்ற திட்டங்களை குளறுபடிகள் இல்லாமல் செயல்படுத்தினால் நன்றாக இருக்கும். குளறுபடிகள் ஏற்பட்டால், திட்டம் தோல்வியில் முடிவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்கூட்டியே சிறப்பாக திட்டமிட்டு திட்டத்தை செயல்படுத்துவது அவசியம் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.
அதே நேரத்தில் வாகன ஓட்டிகளும் இனிமேலாவது மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாமல் வாகனங்களை இயக்குவதை தவிர்க்க வேண்டும். புனே நகரை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, இந்தியாவின் அனைத்து பகுதிகளை சேர்ந்த வாகன ஓட்டிகளும், மாசு கட்டுப்பாடு சான்றிதழ் பெற்று வாகனங்களை இயக்குவது நன்மை பயக்கும்.


Click it and Unblock the Notifications








