பணத்தால் தப்பிக்க முயன்ற குடும்பம்!! புனே கார் விபத்து வழக்கில் புது திருப்பம்... 17-வயது இளைஞனின் தவறா?
சமீபத்திய புனே போர்ஷே கார் விபத்து நாளுக்கு நாள் புது, புது பிரச்சனைகளை கொண்டு வந்துக் கொண்டிருக்கிறது. தற்போது, கார் விபத்தை ஏற்படுத்திய 17 வயது இளைஞனின் தாத்தா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
மதுபோதையில் கார் விபத்தை ஏற்படுத்துவது நம் இந்தியாவில் தொடர்கதையாகி வருகிறது. ஆனால், இதில் வெறும் 17 வயது மட்டுமே ஆன, ஓட்டுநர் உரிமத்தை பெறுவதற்கு கூட தகுதியில்லாத இளைஞன் சிக்கியது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இவன் ஏற்படுத்திய மோதலில் பைக்கில் சென்றுக் கொண்டிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உயிரிழந்துள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த மே 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து நடந்தது. அன்றிலிருந்து இன்றுவரை புது, புது விஷயங்கள் இந்த வழக்கில் இருந்து வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. மும்பை மற்றும் புனே பகுதிகளில் இவ்வாறு அன்-டைம் பார்டிகள் நடப்பதும், அதன் விளைவாக வாகன விபத்துகள் நடப்பதும் வாடிக்கையான ஒன்றுதான்.
ஆனால், இந்த விஷயத்தில் நாட்டின் ஒட்டுமொத்த மீடியாவின் பார்வையும் திரும்பியிருப்பதற்கு காரணம், இந்த விபத்தை ஏற்படுத்தியவருக்கு உடனே ஜாமீன் கிடைத்ததுதான். குற்றவாளிக்கு வயது 17 மட்டுமே என்பதால், வழக்கமான நீதிமன்றத்திற்கு பதிலாக சிறார் நீதி வாரியத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு, சில நிபந்தனைகளுடன் சம்பந்தப்பட்ட இளைஞனுக்கு ஜாமீன் கிடைத்தது.

அதாவது, விபத்தை ஏற்படுத்தி வெறும் 24 மணிநேரத்திற்குள்ளாக நிபந்தனை ஜாமீன் கிடைத்துவிட்டது. இது நீதிமன்ற துறையின் மீதே மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த செய்தி நாடு முழுவதும் வேகமாக பரவியது. இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வழக்கை மீண்டும் கிளற ஆரம்பித்தனர். இதனையடுத்து, இளைஞனின் ஜாமீன் உடனடியாக ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று (மே 24), காரை தன் மகன் ஓட்டவில்லை என்றும், தங்களது குடும்ப கார் டிரைவர் ஓட்டியதாகவும் அந்த இளைஞனின் தந்தை விஷால் அகர்வால் பேட்டியளித்தார். இதற்கு சாட்சியாக, சம்பவத்தின் போது காருக்குள் இளைஞனுடன் இருந்த இருவர் போலீசார் முன்பு நிறுத்தப்பட்டனர். இதற்கிடையில், புனே போலீசார் இளைஞனின் தாத்தா சுரேந்திர அகர்வாலை விசாரிக்க ஆரம்பித்தனர். இவரும் இளைஞனின் தந்தை கூறியதையே கூறினார்.

ஆனால் மறுப்பக்கம், இளைஞனின் குடுபத்தினரிடம் பலி ஆடாக மாறிவிட கூடாது என்பதற்காக குற்றம் சுமத்தப்பட்ட அவர்களது கார் டிரைவர் புனேவின் யெர்வாடா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில், தன்னை மிரட்டி, கட்டாயப்படுத்தி பழியை ஏற்க வைத்ததாக கார் டிரைவர் பரபரப்பு தகவல்களை அளித்துள்ளார்.
இதனையடுத்து, கார் விபத்து பழியை வற்புறுத்தி ஏற்க வைத்த குற்றத்திற்காக இளைஞனின் தாத்தா சுரேந்திர அகர்வால் மற்றும் தந்தை விஷ்ணு அகர்வாலின் மீது இரண்டு வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இளைஞனின் வீட்டிற்கு சென்ற போலீசார், அங்கிருந்த சுரேந்திர அகர்வாலை கைது செய்துள்ளனர். இவர் மீது ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விஷயத்தில் டெக்னாலஜி மிக முக்கிய பங்கு வகித்தது. சுரேந்திர அகர்வால் மற்றும் விஷ்ணு அகர்வாலின் செல்போன் நம்பர் மற்றும் உரையாடல்களை வைத்துதான் இந்த வழக்கில் உண்மையை கண்டறிந்துள்ளனர். அதுமட்டுமின்றி, கார் டிரைவரை அவரது மனைவி பழியை ஏற்க விடாமல் வற்புறுத்தியுள்ளார். முடிவில், இந்த சம்பவத்தில் ஒரு விலையுயர்ந்த போர்ஷே கார் பயன்படுத்த முடியாத நிலைக்கு ஓரங்கட்டப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









