2 உயிர்களை காவு வாங்கிய சிறுவன்! தந்தைக்கு தண்டனை கிடைக்குமா? பெற்றோர் விழிப்புணர்வுடன் இருப்பது எப்படி?
புனேவில் 18 வயது நிரம்பாத மைனர் சிறுவன் ஒருவன் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவத்தில் இரண்டு பேர் பலியாகி உள்ளார்கள். இந்த வழக்கில் காரை ஓட்டி வந்த சிறுவன் மற்றும் அவரது தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவரது தந்தை தான் காரின் உரிமையாளர் என்பதால் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை பெற்றோர்கள் எப்படி கவனம் கொள்ள வேண்டும் என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை புனேவில் 17 வயது சிறுவன் ஒருவன் கோட்சே காரை ஓட்டி சென்று பைக் மீது மோதிய விபத்தில் பைக்கில் சென்ற இரண்டு சாப்ட்வேர் இன்ஜினியர்கள் உயிரிழந்துள்ளார்கள். இந்த சம்பவத்தில் காரை ஓட்டிச் சென்ற சிறுவனின் தந்தை விஷால் அகர்வால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் விஷால் அகர்வால் மீது தனது மகனை கவனிக்க தவறியதாக மோட்டார் வாகன சட்டப்படி கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பலருக்கு பல்வேறு விதமான கேள்விகள் எழுந்துள்ளது. தனது மகன் செய்த தவறுக்கு பெற்றோர்கள் ஜெயில் தண்டனையை அனுபவிக்க முடியுமா? அப்படி அனுபவித்தால் அவர்களுக்கு எவ்வளவு ஆண்டு காலம் தண்டனை விதிக்கப்படும்? பெற்றோர்கள் கவனக்குறைவாக இருப்பது சட்டப்படி குற்றமா? என்ற பல்வேறு சந்தேகங்கள் மக்களுக்கு எழுந்துள்ளது. இதைப் பற்றி சட்டம் என்ன சொல்கிறது என பார்ப்போம்.
குறிப்பிட்ட இந்த சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தந்தை விஷால் அகர்வால் மீது ஜூவனைல் ஜஸ்டிஸ் ஆக்ட் மற்றும் மோட்டார் வாகன சட்டப்படி வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. ஜூவனைல் ஜஸ்டிஸ் ஆக்ட் பிரிவு 75 மற்றும் 77ன் கீழ் இந்த வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. மோட்டார் வாகன சட்டப்படி சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது குற்றமாகும்.
மோட்டார் வாகன சட்டம் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களது பெற்றோர்களை பொறுப்பு என சொல்கிறது. இந்தியாவில் பல்வேறு சம்பவங்களில் சிறுவர்கள் வாகன விபத்து ஏற்படுத்தியதன் விளைவாக இந்த சட்டம் கடந்த 2019ம் ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டம் பிரிவு 199 இன் கீழ் இந்த சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இதன்படி சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் அவர்களுக்கு தண்டனை வழங்க முடியாத சூழ்நிலையில் அவர்களது பெற்றோருக்கு ரூபாய் 25000 அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க இந்த சட்ட பிரிவில் இடம் உள்ளது. ஆனால் வாகனத்தின் உரிமையாளருக்கு இந்த சட்டப்படி ஜெயில் தண்டனை விதிக்க வாய்ப்புகள் இல்லை.
ஆனால் விபத்து ஏற்படுத்திய சிறுவனின் பெற்றோருக்கு ஜெயில் தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. குறிப்பிட்ட இந்த சம்பவத்தில் இரண்டு உயிர்கள் பலியாகி உள்ளதால் செக்ஷன் 304 ன் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த வாகனத்தின் பதிவு எண் என்பது நீக்கப்படும்.
சிறுவனின் பெற்றோருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றால் பெற்றோரின் அனுமதியுடனே சிறுவன் காரை ஓட்டிச் சென்றுள்ளான் என்ற ஆதாரப்பூர்வமான நிரூபனம் தேவை. பெற்றோரின் அனுமதி இல்லாமல், கவனத்தில் கொண்டு வராமல் சிறுவன் வாகனம் ஓட்டினால் அவர்களுக்கு ஜெயில் தண்டனை விதிக்க சட்டத்தில் இடமில்லை.
அதேநேரம் சிறுவனிடம் பயிற்சி உரிமம் இருந்தால் அந்த நேரத்திலும் சிறுவனின் பெற்றோருக்கு பெற்றோரின் கவனத்திலேயே சிறுவன் காரை எடுத்துச் சென்று இருந்தாலும் பெட்றோருக்கு தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் இல்லை. இந்தியாவில் 16 வயது நிரம்பியவருக்கு பயிற்சி உரிமம் என்பது விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட இந்த சம்பவத்தில் காரை ஓட்டிச் சென்ற சிறுவனுக்கு பயிற்சி உரிமம் இல்லை என்றே தெரிகிறது.
கடந்த 2020ம் ஆண்டு இதுபோல சிறுவனை பைக் ஓட்ட பெற்றோர் அனுமதித்த வழக்கில் அவர்களுக்கு ரூபாய் 42500 அபராதமாக விதித்து ஒடிசா மாநில நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது அதே போல இந்த சம்பவத்திலும் கட்டாயம் சிறுவனின் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயில் தண்டனை குறித்த விபரங்களை கோர்ட் மட்டுமே முடிவு செய்ய முடியும்.
அனைத்து மாநிலங்களிலும் போலீசார் சிறுவர்களை கார் அல்லது பைக் ஓட்ட அனுமதிக்க கூடாது என பல்வேறு விதமான விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் செய்து வருகிறார்கள். இருந்தாலும் பெற்றோர்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை. குறிப்பிட்ட இந்த சம்பவத்தில் சிக்கிய காருக்கு சாலை வரிகளும் கட்டாமல் இருந்துள்ளது. அதே நேரம் வாகனத்தை ஓட்டி வந்த சிறுவனுக்கு லைசென்ஸ் இல்லாமல் இருந்துள்ளது.
மேலும் கார் விபத்தில் சிக்கிய நேரத்தில் சிறுவன் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜூவனைல் ஜஸ்டிஸ் ஆக்ட் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் உங்கள் குழந்தைகளை முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது. இது முற்றிலும் சட்டவிரோதமான செயலாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் பெரும்பாலும் சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கும் சம்பவம் அதிகம் இருக்கிறது. இதற்கு பெற்றோர்களின் கவன குறைவை காரணமாக இருக்கிறது. வீட்டில் குழந்தைகள் அடம்பிடிக்கிறார்கள் என்ற காரணத்திற்காக அவர்களுக்கு வாகனம் வாங்கி கொடுப்பது மற்றும் வாகனங்களை ஓட்ட அனுமதி கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயல்களில் அதிக பெற்றோர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications








