ஒரே குழப்பம்... இல்லாத ரூல்ஸை சொல்லி காசு வசூல் பண்றாங்க... போலீஸ் நடவடிக்கையால் மக்கள் கடுப்பு...
பெரும் குழப்பங்களுக்கு மத்தியில், ஒரு விதிமுறையை சொல்லி காவல் துறையினர் அபராதம் வசூல் செய்து வருவதால், வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இருந்தாலும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, ஊரடங்கில் தொடர்ச்சியாக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என பல்வேறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

வீடுகளை விட்டு வெளியே வரும்போதெல்லாம் முக கவசம் அணிய வேண்டும் என்பது இதில் ஒன்று. இந்த விதிமுறையை மீறுபவர்கள் மீது மஹாராஷ்டிரா மாநிலம் புனே மாநகர காவல் துறையினர் தற்போது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளனர். இதன்படி கார்களில் தனியாக பயணம் செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதாவது காரில் தனியாக பயணம் செய்யும்போது, முக கவசம் அணியாதவர்களுக்கும் புனே காவல் துறை அதிகாரிகள் தற்போது அபராதம் விதித்து வருகின்றனர். ஆனால் சொந்த கார்களில் தனியாக பயணம் செய்பவர்கள் முக கவசம் அணிய தேவையில்லை என்பதுதான் உண்மை. எனவே புனே காவல் துறையினரின் நடவடிக்கை கார் உரிமையாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கார்களில் தனியாக பயணம் செய்பவர்கள் முக கவசம் அணிவது கட்டாயமா? அல்லது தேவையில்லையா? என்ற குழப்பம் இங்கு நீண்ட காலமாகவே இருந்து கொண்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களும் இந்த குழப்பத்திற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகின்றன.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலில், ''பொது இடங்கள், வேலை செய்யும் இடங்கள் மற்றும் பயணங்கள் மேற்கொள்ளும்போது முக கவசம் கட்டாயம்'' என கூறப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்படி, கார் பொது இடமாக கருதப்படுகிறது. எனவே ஜன்னல் கண்ணாடிகளை ஏற்றி விட்டு காரில் தனியாக செல்லும்போது, முக கவசம் அணியவில்லை என்றால் காவல் துறையினர் அபராதம் விதிக்கின்றனர்.

ஆனால் மத்திய சுகாதார துறை அமைச்சகமோ, காரில் தனியாக பயணம் செய்பவர்கள் முக கவசம் அணிய தேவையில்லை என்கிறது. அதாவது கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்கள், காரில் தனியாக பயணிப்பவர்கள் முக கவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு எதையும் கொண்டிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர்தான் இப்படி ஒரு விளக்கத்தை மத்திய சுகாதார துறை அமைச்சகம் வழங்கியது. எனவே குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புனே காவல் துறையினரின் நடவடிக்கையால், மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தெளிவான வழிகாட்டுதல் வழங்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஆனால் தெளிவான வழிகாட்டுதல்கள் வரும் வரையில், காரில் தனியாக பயணம் செய்பவர்கள் முக கவசம் அணியவில்லை என்றாலும், காவல் துறையினர் அபராதம் விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த குழப்பம் புனேவில் மட்டும் ஏற்படவில்லை. காரில் தனியாக பயணம் செய்பவர்களுக்கு முக கவசம் கட்டாயமா? என்ற குழப்பம் நாடு முழுக்க உள்ளது.

எனவே அரசு விரைவில் தெளிவான வழிகாட்டுதலை வழங்குவது நல்லது. இப்படிப்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில், கடந்த 3 நாட்களில் மட்டும் புனே காவல் துறையினர் 25 லட்ச ரூபாய்க்கும் மேல் அபராதம் வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து புனேக்கர் நியூஸ் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.

முக கவசம் தொடர்பாக பலருக்கு அதிருப்தி இருந்து வரும் நிலையில், இன்னும் ஒரு சிலருக்கு அபராதத்தை செலுத்தும் முறையில் புகார்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது காவல் துறையினர் அபராத தொகையை ரொக்கமாக மட்டுமே பெறுவதாகவும், வேறு எந்த ஆன்லைன் முறையும் இல்லை எனவும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் சிலர் கூறுகையில், ''தற்போதைய நிலையில் பெரும்பாலான மக்கள் ஆன்லைன் முறையை மட்டுமே நம்பியுள்ளனர். ஆனால் காவல் துறையினரிடம் ஆன்லைன் பண பரிவர்த்தனை முறைகள் எதுவுமே கைவசம் இல்லை. ரொக்கமாக மட்டுமே வசூல் செய்கின்றனர். அது ஏன்? என்பது தெரியவில்லை. அபராதம் வசூலிப்பதாக இருந்தால் ஆன்லைன் முறைகளும் அவசியம்'' என்றனர்.


Click it and Unblock the Notifications








