தயாராகுங்கள்... தண்ணீரில் காரை சுத்தம் செய்ய தடை...? அரசு அதிரடி!!!
வாகனங்களை கழுவுவதற்கு பயன்படுத்தப்படும் நீரை சேமிக்கும் விதமாக புதிய திட்டம் ஒன்று செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவின் தலையாய பிரச்னைகளில் ஒன்றாக தண்ணீர் பற்றாக்குறை இருக்கின்றது. நாட்டின் ஒரு சில பகுதிகளில் அடை மழை கொட்டி தீர்த்து வந்தாலும், பல பகுதிகளில் ஒரு சொட்டு நீருக்கு பல கிமீ நடந்து செல்லும் துயர நிலை காணப்பட்ட வண்ணம் உள்ளது.
இதற்கு, மழை பொய்த்து போனது ஒரு காரணமாக கூறப்படுகின்றது. ஆனால், நகர மயமாதலின் காரணமாக அழிக்கப்பட்டு வரும் வனங்களே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

அதிகரித்து வரும் ஜனத் தொகை காரணமாக காடுகளின் அளவு ஒவ்வொரு வருடமும் குறைந்துக்கொண்டே வருகின்றது. அதுமட்டுமின்றி, வளர்ச்சி என்ற பெயரில் சாலையோரங்களில் உள்ள மரங்களை வெட்டுதல், புதிய சாலைகளுக்காக காடுகளை அழித்தல் உள்ளிட்ட காரணங்களால் லட்ச கணக்கான மரங்கள் கொத்து கொத்தாக வெட்டி சாய்க்கப்படுகின்றது.

இதன் பின்விளைவாக ஒவ்வொரு பருவத்திலும் பொழிய வேண்டிய மழை பொய்த்து போகின்றது.
இதனால், பெருமளவிலான பாதிப்பைச் சந்திப்பது என்னமோ நம் நாட்டு விவசாயிகள்தான். விவசாயத்தில் பெரும் நஷ்டம் அடைவதன்காரணமாக பல விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு, நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், வீணாக செலவு செய்யப்படும் தண்ணீரினை சேமிக்கின்ற வகையிலான ஓர் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்படி, இனி வாகனங்களைக் கழுவ நீரை பயன்படுத்தக்கூடாது என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

பயந்துவிடாதீங்க, இந்த அதிரடி உத்தரவு தமிழகத்திற்கு இல்லை. பஞ்சாப் மாநில அரசுதான், அதன் மக்களின் எதிர்காலத்தை முன்னிட்டு இத்தகைய அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கின்றது.
அதேபோன்று, இத்திட்டம் உற்பத்தி ஆலை மற்றும் சர்வீஸ் மையங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இந்தியாவின் பிரதான மாநிலங்களில் குறைந்தது ஒரு வாகன உற்பத்தி மையமாவது இருந்துவிடுகின்றது. அதேபோன்று, விற்பனையாகும் கார்களை சர்வீஸ் செய்வதற்கான சேவை மையம் ஏரளமாக தொடங்கப்படுகின்றன.
இவற்றின்மூலம், வாகனங்களை தூய்மைப்படுத்த நாள் ஒன்றிற்கு ஆயிரம் கணக்கான லிட்டர் தண்ணீர் பயன்படுத்துகின்றது. இதனால், மக்களின் குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்படுகின்றது.

இத்தகைய சூழலைத் தவிர்க்கும் விதமாக, வாகனங்களை தூய்மைச் செய்ய டிரை வாஷ் முறையை கையாளுமாறு பஞ்சாப் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இம்முறை மூலம், அதிகபட்ச நீர் வீணடிப்பது தவிர்க்கப்படும் என தெரிகின்றது.
அண்மையில், சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டபோது, நகரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்பீல்டு நிறுவனம், இத்தகைய நடவடிக்கையை தானாக முன்வந்து மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இந்த பிரத்யேக நடவடிக்கையை பஞ்சாப் மாநில அரசு, அம்மாநிலத்தில் கட்டாயமாக கடைபிடிக்கக்கூறி அறிவிக்க இருக்கின்றது.
தோராயாமாக ஒரு புதிய காரை சுத்தம் செய்ய 200 லிட்டர் முதல் 1,000 லிட்டர் வரையிலான தண்ணீர் தேவைப்படுகின்றது. இது வாகனத்தின் உருவத்தைப் பொருத்து மாறுபடும். இது ஒரு சிறிய கிராமத்தின் ஒரு நாள் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாகும்.

இந்த அளவிலான நீர் வீணாவைத் தவிர்க்கும் விதமாக பஞ்சாப் மாநில அரசு இந்த அதிரடி நடவடிக்கையை கையாள இருக்கின்றது.
இந்த திட்டத்தை முதல் கட்டமாக மாநிலத்தின் ஆறு முக்கிய பகுதிகளான மொஹலி, லூதியானா, ஜலந்தர், பதிந்தா, அமிர்தசரஸ் மற்றும் பாட்டியாலா உள்ளிட்ட இடங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முதலில் சர்வீஸ் மையங்களிலேயே இத்திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இதில் வெற்றியடையும் பட்சத்தில் மாநிலம் முழுவதும் அமலுக்கு கொண்டுவரப்பட உள்ளது.

இதுகுறித்து, பஞ்சாப் மாநிலத்தின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாக பொறியாளர் அசோக் சர்மா கூறியதாவது, "ஆட்டோமொபைல் சேவை நிலையங்களுக்கு நாள் ஒன்றிற்கு சுமார் 10 முதல் 12 வரையிலான கார்களை டிரை வாஷ் முறையில் சுத்தம் செய்யும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இம்முறைகுறித்து வாடிக்கையாளர்களிடம் ரிவியூ பதில் கோர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் இத்திட்டம் நல்ல வரவேற்பைப் பெறுமானால், இதனை மாநிலம் முழுவதும் நடைமுறைக்குக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் பேசிய அவர், "நீர் பற்றாக்குறை மற்றும் நீர் பாதுகாப்பின் முக்கியத்துவம் தொடர்பான பிரச்னைகள் குறித்து அறிந்தவர்கள், அரசின் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். ஒரு மாத முடிவிற்கு பின், பொதுமக்கள் பதில் தொடர்பான தரவு தயாரிக்கப்பட்டு அரசாங்கத்திற்கு அனுப்பப்படும். இதன் பின்னரே மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்துவது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தார்.

டிரை வாஷ் என்பது, ரசாயனம் கலந்த ஸ்பிரே முறை மூலம் சுத்தம் செய்யப்படும் செயலாகும். இது, சந்தையில் மிக எளிதில் கிடைக்கக் கூடிய ஓர் பொருள். இதனை பயன்படுத்துவதன் மூலம் வாகனத்திற்கோ அல்லது வாகனத்தின் நிறத்திற்கோ எந்த பின்விளைவும் ஏற்படுத்தாது. மேலும், தண்ணீர் மூலம் கழுவினால் கிடைக்கக்கூடிய அதே சுத்தம் டிரை வாஷ் முறையிலும் கிடைக்கும்.

இந்த ஸ்பிரே கெமிக்கல் குறைவான விலையிலும் கிடைக்கின்றது. ஆகையால், மக்கள் இதனை பயன்பாட்டுக் கொண்டுவரும் பட்சத்தில் அதிகளவிலான விலை மதிப்பற்ற நீர் பாதுகாப்படுவதுடன், எதிர்காலத்திற்கும் சேகரித்து வைக்க உதவும்.
இத்தகைய திட்டம் பஞ்சாப் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான ஒன்று. கடந்த காலங்களில் தமிழகம் சந்தித்த தண்ணீர் பற்றாக்குறை மிக வேதனையான ஒன்று. மேலும், தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்க ரயில் மூலம் நீர் கொண்டு வரப்பட்டது.

இத்தகைய சூழலைத் தவிர்க்க பஞ்சாப் அரசு மேற்கொண்டிருக்கும் சிறப்பான நடவடிக்கையை, தானாக முன் வந்து வாகன நிறுவனங்கள் மற்றும் இதர மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications








