பைக்கை ஓட்னது பேயா! சமூக வலை தளங்களில் வைரல் ஆகும் வீடியோவால் அதிர்ச்சி!
சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதில், வயதான நபர் ஒருவர் பைக் ஓட்டி செல்வதை, இல்லை... இல்லை... அமர்ந்து செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆம், உண்மையில் அந்த நபர் பைக்கில் அமர்ந்து கொண்டு மட்டும்தான் செல்கிறார்.
அவர் பைக்கை ஓட்டவில்லை. பைக்கின் ஒரு பக்கத்தில் அவர் ஹாயாக கால் மேல் கால் போட்டு கொண்டு பயணம் செய்வதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. அவரது கைகள் ஹேண்டில் பார் மீது இல்லை. இருப்பினும் அந்த பைக் தானாக பயணம் செய்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், பேய் ஏதாவது பைக்கை ஓட்டி செல்கிறதா? என்ற ரீதியில் வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் பேய் எதுவும் பைக்கை ஓட்டவில்லை. சமூக வலை தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக 'செட்' செய்து இந்த வீடியோவை எடுத்துள்ளனர் என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது.
ஆனால் இது போன்ற பயணங்கள் ஆபத்தானவை என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். போதாக்குறைக்கு இந்த வீடியோவில் நாம் காணும் நபர், ஹெல்மெட் வேறு அணியவில்லை. வீடியோவில் நாம் பார்த்தவரை எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை. ஆனால் ஹெல்மெட் அணியாமல் இது போன்று பயணம் செய்யும்போது அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், பாதிப்புகள் கடுமையாக இருக்கலாம்.
எனவே வாகனங்களை பாதுகாப்பாக ஓட்ட வேண்டும் என இந்த செய்தியின் மூலமாக அனைவரையும் கேட்டு கொள்கிறோம். இந்திய சாலைகளில் சமீப காலமாக இது போன்ற ஆபத்தான பயணங்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை டூவீலர்களில் பயணம் செய்து கொண்டே முத்தமிட்டு கொள்வது மற்றும் கட்டியணைத்து கொள்வது போன்ற செயல்களில் பலர் ஈடுபடுவதை நாம் பார்த்து வந்தோம்.
அது ஒரு 'டிரெண்ட்' ஆகவே மாறியது. இதை தொடர்ந்து தற்போது இது போன்ற சம்பவங்கள் நடைபெற தொடங்கியுள்ளன. இதை உடனடியாக தடுக்காவிட்டால், மற்றவர்களுக்கு இது தவறான ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்பதை சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த வீடியோவில் நாம் காணும் முதியவர் யார்? என்பது அடையாளம் தெரியவில்லை. ஆனால் வீடியோ வைரல் ஆகி கொண்டிருப்பதால், சம்பந்தப்பட்ட நபரை காவல் துறை அதிகாரிகள் கண்டறிவார்கள் என நாம் எதிர்பார்க்கலாம். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து.
இல்லாவிட்டால் நாங்கள் ஏற்கனவே கூறியபடி இது தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்தி விடும். சமூக வலை தளங்களில் லைக்குகளை பெறுவதற்காகவும், மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் இன்னும் பலர் தொடர்ந்து இது போன்ற மிகவும் ஆபத்தான செயல்களில் ஈடுபட தொடங்கி விடுவார்கள். எனவே காவல் துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பது சிறப்பான ஒன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








