எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா டைம் பாமா? இப்படி வரிசையா வெடிச்சுக்கிட்டே இருக்குது!
மும்பை அருகே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது. பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து ஒட்டு மொத்த ஸ்கூட்டரும் தீயில் கருகி நாசமாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரியும் சம்பவம் கடந்த மார்ச் மாதம் முதல் அவ்வப்போது நடந்து கொண்டே தான் இருக்கிறது. இது குறித்து அரசு விசாரணை மேற்கொண்டு பேட்டரி தயாரிப்பு விவகாரத்தில் பல விதிமுறைகளை வகுத்தாலும் தற்போதும் அவ்வப்போது இந்த சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. சமீபத்தில் மும்பை அருகே ஒரு குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடித்து எரிந்துள்ளது.

மும்பை வாசை-விரார் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெலுங்கானாவை மையமாகக் கொண்டு செயல்படும் ப்யூர் இவி நிறுவனத்தின் இ-ப்ளூட்டோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த ஓராண்டிற்கு முன்பு இவர் இந்த ஸ்கூட்டரை ரூ92 ஆயிரம் பணம் கொடுத்து வாங்கியுள்ளார். இந்த ஸ்கூட்டரை அவர் தன் வீட்டிலேயே சார்ஜ் போட்டு அவ்வப்போது வெளியே செல்வதற்காக மட்டும் பயன்படுத்தி வந்துள்ளார். கடைசியாகக் கடந்த டிசம்பர் 15ம் தேதி ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட்டுள்ளார்.
அதன் பின் ஸ்கூட்டரை பயன்படுத்தி வந்துள்ளார். டிசம்பர் 17ம் தேதி ஸ்கூட்டரை எடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து எப்பொழுதும் அவர் ஸ்கூட்டரை பார்க் செய்யும் இடத்தில் பார்க் சென்று விட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார்.அவர் வீட்டிற்குச் சென்று 2 மணி நேரத்திற்குப் பிறகு ஸ்கூட்டர் தீ பிடித்து எரிந்துள்ளது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அந்த ஸ்கூட்டரின் உரிமையாளரிடம் தகவலைச் சொன்னார்கள்.
பின்னர் அவர் வந்து ஸ்கூட்டரில் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றால் சுமார் 20 நிமிட போராட்டத்திற்குப் பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. தீயில் எரிந்தது அவரது இ-ப்ளூட்டோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்தான். இந்த ஸ்கூட்டர் எரியும் போது அது சார்ஜிலும் போட்டிருக்கவில்லை. இந்த ஸ்கூட்டர் எரிந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த ப்யூர் இவி இ-ப்ளூட்டோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1.8 கிலோ வாட் ஹவர் போர்ட்டபிள் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 25 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது. இதுமுழு சார்ஜில் 85 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த சம்பவத்தில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கடந்த 4 மாதத்தில் தீப்பிடித்து எரியும் 3 வது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இது முதல் இரண்டு சம்பவத்திலும் போர்டபிள் பேட்டரி கொண்ட ஸ்கூட்டர்கள் தீ பிடித்து எரிந்துள்ளது.
இந்த ஸ்கூட்டரை அதன் உரிமையாளர் ரூ92 ஆயிரம் கொடுத்து வாங்கியுள்ளார். இந்த ஸ்கூட்டர் வாங்கும் போது அதற்கு 5 ஆண்டுகள் வரை வாரண்டி வழங்கப்பட்டது. இந்த வாரண்டி இன்னும் இருப்பதால் இந்த சம்பவம் வாரண்டிக்குள் வருமா என்பது இதுவரை தெரியவில்லை. தற்போது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உரிமையாளர் இந்நிறுவனத்தின் மீது போலீசில் புகார் கொடுக்கப்போவதாக முடிவு செய்துள்ளார்.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரியும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருவது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிவதால் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீதான நம்பகத் தன்மை மாறிக்கொண்டே இருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீதான உங்கள் கருத்து என்ன? கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








