‘G’ போர்டை மாட்டி கொண்டு இனி தப்பித்து செல்ல முடியாது!! யாராக இருந்தாலும் சோதனை செய்ய போலீசாருக்கு உத்தரவு
'G' அல்லது 'அ' எழுத்து மற்றும் 'Human Rights' என்று எழுதியுள்ள தனியார் வாகனங்களில் சோதனை நடத்தும்படி அனைத்து சோதனைச்சாவடி போலீஸாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏன் இந்த சோதனை? என்பது குறித்த விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

தமிழகத்தில் ஏராளமான தனியார் வாகனங்களில் அரசு வாகனங்கள் என்பதை குறிப்பதுபோல் Government-இன் முதல் எழுத்தான 'G' அல்லது அரசாங்கம் என்ற வார்த்தையின் முதல் எழுத்தான 'அ' குறிக்கப்படுவது வழக்கமானதாக உள்ளது.

சிலர் Human Rights, Police, On Duty, Press, Lawyer என்றும் ஸ்டிக்கர் அல்லது போர்டு வைத்து சொந்த வாகனங்களை இயக்கி வருகின்றனர். இவ்வாறான வாகனங்களில் பெரும்பாலும் முக்கிய பிரமுகர்களும், செல்வந்தர்களுமே வருவதால், வாகன சோதனையின்போது இவர்கள் போலீஸாருக்கு சரிவர ஒத்துழைப்பதில்லை.

இதனை பலர் நேரில் பார்த்திருக்கலாம். சிலர் வீடியோக்களிலும், திரைபடங்களிலும் பார்த்திருக்கலாம். இதுபோன்ற ஸ்டிக்கர் அல்லது போர்டு வைத்துவரும் வாகனங்களை போலீஸாரும் பெரிதாக சோதனை செய்யாமல் விட்டுவிடுகின்றனர். இவ்வளவு ஏன், சில சோதனைச்சாவடிகளில் வாகனங்களில் இவ்வாறான எழுத்துகள் குறிக்கப்பட்டிருந்தால், நிறுத்தாமல் கூட அப்படியே அனுப்பி வைப்பர்.

இதனாலேயே இதுபோன்ற போர்டுகளை வாகனங்களில் பொருத்திக்கொண்டு சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இவ்வாறு சட்டத்திற்கு புறம்பான செயல்கள் அரங்கேறுவது போலீஸாருக்கு நன்றாகவே தெரியும்.

இருப்பினும் 'G' அல்லது 'அ' எழுத்தை நம்பர் போர்டில் கொண்ட வாகனங்களை நிறுத்த சில போலீஸார் சிறிது தயக்கம் காட்டி வந்தனர் என்பது உண்மையே. ஆனால் இந்த தயக்கம் இனி இருக்காது. ஏனெனில் இவ்வாறான எழுத்துகளுடன் நம்பர் ப்ளேட்டை கொண்ட வாகனங்களை தடுத்து நிறுத்தி, சோதனை செய்ய போலீஸாருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழகம் முழுவதும் சோதனை சாவடிகளில் பணிபுரியும் போலீஸாருக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'அ' அல்லது 'G', Human Rights, Police, On Duty, Press, Lawyer போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட வாகனங்களை சோதனை செய்து தனியாக அறிக்கை தயார் செய்ய வேண்டும்.

அதில் அவர்கள் வைத்துள்ள ஸ்டிக்கர் அல்லது போர்டின் விவரங்கள் இருக்க வேண்டும். மேலும், S.No, நேரம் & தேதி, வாகன பதிவெண், வாகனத்தை பயன்படுத்துபவரின் பெயர், முகவரி, மொபைல் எண், அலுவலக முகவரி, எங்கிருந்து எங்கு செல்கிறார் மற்றும் வாஹன் செயலி விபரங்கள் ஆகியவற்றையும் சோதனையில் இருக்கும் போலீஸார் குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது உண்மையில் போலீஸாருக்கு சவாலான காரியமாகும். ஏனெனில் எல்லா அரசு அதிகாரிகளும் பிரமுகர்களும் இந்த சோதனைக்கு தங்களது ஆதரவை அளிப்பர்களா என்பதை இனி பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எப்படியிருந்தாலும், சில இடங்களில் பிரச்சனைகள் உருவாக வாய்ப்புள்ளது என்பது மட்டும் உறுதி.

இதனால் தான் சோதனையின்போது தகராறில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உயர் அதிகாரிகள் சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பிற்கு நிற்கும் போலீஸாருக்கு அறிவுறுத்தியுள்ளனர். ஆதலால் அரசு துறையில் உயர் பதவி வகிப்பவராக இருந்தாலும், தங்களது வாகனத்தை நிறுத்தி தங்களது அடையாளத்தை போலீஸாருக்கு காண்பிக்க வேண்டியது அவசியமாகும்.

ஏனெனில் இந்த சோதனை, அரசு அதிகாரிகள் மற்றும் பிரமுகர்களின் மரியாதை கெடுக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது கிடையாது. இவ்வாறான நம்பர் ப்ளேட்டை மாட்டி கொண்டு தப்பித்து செல்லும் சமூக விரோதிகளை களையெடுப்பதற்காகவே தமிழக அரசு இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

இவ்வாறான அறிவிப்புகளினால், வாகனங்களின் பதிவெண்ணை கண்காணிப்பதில் நாட்டிற்கே தமிழகம் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தை போல் நமது அண்டை மாநிலமான கர்நாடக அரசும் வாகனங்களின் நம்பர் ப்ளேட்டில் அதிகம் கவனம் செலுத்தக்கூடியது.

குறிப்பாக வாகன பதிவிற்கான கட்டணம் கர்நாடகாவில் சற்று அதிகமாக உள்ளதால், தலைநகர் பெங்களூரில் வசிப்பவர்கள் கூட வெளி மாநிலங்களில் வாகனத்தை பதிவு செய்துவிட்டு, அம்மாநில நம்பர் ப்ளேட் உடனே நீண்ட காலத்திற்கு பயணம் செய்து வருகின்றனர். இத்தகையவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதை கர்நாடக போலீஸார் முழு மூச்சாக மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications