ஹைவேயில் இனி க்யூஆர் கோடு! அவசரத்திற்கு ஸ்கேன் செய்தால் உடனே உதவி!
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே க்யூஆர் கோடுகளை நிறுவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை டிஜிட்டல் மற்றும் பிரிண்ட் செய்யப்பட்ட பதாகைகள் மூலமாக மக்களுக்கு பயன்படும் வகையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த க்யூஆர் கோடு என்ன செய்யும்? இதனால் என்ன பலன்? விரிவாக காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை மக்கள் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்ல விரைவாக செல்ல வேண்டும் என்றால் நெடுஞ்சாலைகளை தான் மக்கள் பயன்படுத்தியாக வேண்டும். இந்நிலையில் நெடுஞ்சாலைகளில் பயணிக்க சுங்கவரியை செலுத்த வேண்டும்.

இந்த சுங்கவரியை வசூலிக்க ஆங்காங்கே சுங்கசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஃபாஸ்ட் டேக் கார்டு முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையியில் இப்படியாக சுங்க கட்டணம் செலுத்தி பயணிக்கும் மக்களுக்கு சாலை பயணத்தில் பிரச்சனை ஏற்பட்டால் அதை சமாளிக்க என்ன செய்வது எப்படி உதவியை பெறுவது என தெரியாமல் தவிக்கின்றனர். ஒவ்வொரு சுங்கசாவடிகளிலும் உதவியை வழங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதை பெறுவது குறித்து போதுமான விழிப்புணர்வு மக்களிடம் இல்லாமல் உள்ளது.
இதை உணர்ந்த மத்திய அரசு சாலைகளில ஆங்காங்கே பிரிண்ட் செய்யப்பட்ட பதாகைகள் மற்றும் டிஜிட்டல் பதாகைகளில் க்யூஆர் கோடை அமைக்க திட்டமிட்டுள்ளது. சாலையில் பயணிக்கும் போது இந்த க்யூ ஆர்கோடை ஸ்கேன் செய்தால் நீங்கள் பயணிக்கும் நெடுஞ்சாலை குறித்த தகவல்கள் அதில் இடம் பெறும். குறிப்பாக நீங்கள் பயணிக்கும் சாலையின் நெடுஞ்சாலை எண், நீளம் எவ்வளவு எந்தெந்த ஊர்களை இணைக்கிறது. இங்கு பிரச்சனை ஏற்பட்டால் அவசரத்திற்கு எந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்ற தகவலை வழங்கும்.

இந்த தகவல்கள் எல்லாம் ராஜ்மார்க் யாத்ரா என்ற செயலி மூலம் கிடைக்கும். இந்த செயலி இல்லை என்றாலும் ஆன்லைனில் இதை பார்த்துக்கொள்ள முடியும். இதனால் இது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற அடிப்படையில் இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது. எப்பொழுது செயல்பாட்டிற்கு வரும் என்ற தகவல் இதுவரை கிடைக்கவில்லை.
ஆனால் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம். ஒவ்வொரு கட்டணமாக இந்த பதாகைகளை பொருத்தும் பணி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முழுவதும் இது முழு வீச்சில் மிக விரைவாக பயன்பாட்டிற்கு வரும். நிச்சயம் இந்த திட்டம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற பேச்சு நிலவி வருகிறது. இப்படி ஒரு வசதியை நீண்ட நாட்களாக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் இந்த க்யூஆர்கோடை பயன்படுத்துவது சிறப்பாக இருக்கும். ஆனால் இப்படியான பாதாகைகள் சேதமாகாமல் இருக்க வேண்டும். க்யூஆர் கோடு எப்பொழுதும் ஸ்கேன் செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்பதை மத்திய அரசு உறுதி செய்தால் இந்த திட்டம் வெற்றி பெறும்.


Click it and Unblock the Notifications









