ஒன்றரை மணிநேரம் விமானத்திற்குள்ளேயே அடைப்பட்டு கிடந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்!! காரணம் இதுதான்!
சமீபத்தில் இந்தியாவின் மேற்கு மாநிலங்களை தாக்கிவிட்டு சென்ற டவ்-தே புயலின் காரணமாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சுமார் ஒன்றரை மணிநேரங்கள் விமானத்திற்கு உள்ளேயே அடைப்பட்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் சில விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அவற்றை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனா பரவல் எதிரொலியின் காரணமாக நம் அனைவரது இயல்பு வாழ்க்கையும் முற்றிலுமாக மாறிவிட்டது. இந்த நிலை இன்றில் இருந்தோ அல்லது நேற்றில் இருந்தோ இல்லை, கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக இதே நிலை தான்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தொடர்ச்சியாக பல்வேறு விதமான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்குகளை அரசாங்கள் பிறப்பித்து வருகின்றன. இதனால் வீட்டில் அடங்கி இருப்பதும், முறையான கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொள்வதும் மட்டுமே இப்போதைக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளாகும்.

ஆனால் ஒரு சில முக்கிய பிரமுகர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருப்பது என்பது முடியாத காரியமாகும். குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ துவங்கிய முதலே, கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.

இருப்பினும் நீண்ட நாட்களுக்கு இவ்வாறு கிரிக்கெட் போட்டிகளை தள்ளிப்போட்டு கொண்டே செல்ல முடியாது (ஏனெனில் பலர் கிரிக்கெட்டை தான் தனது எதிர்கால வாழ்க்கையாக நம்பி பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்) என்பதால் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை நடத்த பிசிசிஐ முடிவெடுத்தது.

அதன்படி, தள்ளிப்போடப்பட்ட 2020ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி மிகுந்த கொரோனா பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் கடந்த ஆண்டு இறுதியில் யுஏஇ-யில் நடத்தப்பட்டது. அதன்பின் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட கிரிக்கெட் தொடர்கள் ஆஸ்திரேலியாவிலும், இந்தியாவில் நடத்தப்பட்டன.

இதனால் 2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியை ரசிகர்களின்றி இந்தியாவில் நடத்திய ஐபிஎல் நிர்வாகத்திற்கு கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இடையுறாக வந்ததை அடுத்து 2021 ஐபிஎல் பாதியில் தற்காலிகமாக நிறுத்தி கொள்ளப்பட்டது.

இருப்பினும் உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்து செல்லவுள்ளது. அதற்கு முன்னதாக 14 நாட்கள் அவர்கள் குவாரண்டைனில் இருப்பதற்காக மும்பையில் பிசிசிஐ பயோ பபுள்-ஐ ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக நாட்டின் பல்வேறு பகுதியில் வசிக்கும் இந்திய வீரர்கள் சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா என 3 இடங்களில் இருந்து தனிவிமானம் மூலம் மும்பை சென்றுள்ளனர். இந்த நிலையில் இந்த பயணம் குறித்த தனது அனுபவங்களை தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில், 'அனைத்து வீரர்களும் தற்போது மும்பையில் பபுளில் உள்ளோம். ஆனால் பயணம் செய்து இங்கு வந்த அனுபவம மிகவும் வித்தியாசமாக இருந்தது. சென்னை, ஹைதராபாத், கொல்கத்தாவில் இருந்து மட்டுமே தனி விமானம் புறப்படும் என்பதால் வேறு மாநிலங்களில் இருப்பவர்களும் இந்த குறிப்பிட்ட 3 நகரங்களில் ஏதேனும் ஒன்றிற்கு பல கிமீ தூரம் தனியாக காரில் பயணம் செய்து வந்தனர்.
இதுவே அவர்களுக்கு தனி பபுள் போன்று இருந்திருக்கும். சென்னையில் இருந்து கிளம்பிய விமானம் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவிற்கு சென்று அங்கு சில வீரர்களை ஏற்றி கொண்டு மாலை 6 மணியளவில் மும்பை விமான நிலையத்தை சென்றடைந்தது.

இதற்கே பல மணிநேரங்கள் ஆகிவிட்டது. விமான நிலையத்திற்கு பல கிமீ ட்ராவல் செய்து வந்தவர்கள் கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் ட்ராவல் செய்தது போல் உணர்ந்திருப்பார்கள். இருப்பினும் மும்பை விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்தில் இருந்து உடனடியாக எங்களை வெளியேற அனுமதிக்கவில்லை.
காரணம், எங்களை விமானத்தில் இருந்து அழைத்து செல்லும் பேருந்து கடும் மழை காரணமாக ஓடுத்தளத்திலேயே சிக்கி கொண்டது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் பேருந்து விரைவாக மீட்க முடியவில்லை. நிலைமை சரியான பின்னரும் பேருந்து முழுவதையும் சானிடைஸ் செய்ய வேண்டி இருந்ததால் அதற்கு வேறு தனியாக நேரமானது என்றார். கிரிக்கெட் வீரர்கள் மும்பை சென்ற சமயத்தில் டவ்-தே புயல் தனது தீவிரத்தை காட்டி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








