போலீஸ்னா இப்படித்தான் இருக்கணும்... வாகன ஓட்டிகளுக்கு அபராதம் இல்லை... அதற்கு பதில் என்ன தெரியுமா?
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதற்கு பதிலாக, போலீசார் மேற்கொண்டுள்ள ஒரு முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

உலகில் சாலை விபத்துக்களால் அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. இங்கு ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களால் உயிரிழப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே இதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது.

எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்கும் விதமாக புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. எனவே வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவார்கள் என மத்திய அரசு நம்புகிறது.

இதன் மூலம் இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும் எனவும் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில், கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய அபராத தொகைகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் அபராத தொகைகள் மிக கடுமையாக உள்ளதால் பல்வேறு மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஒரு சில மாநிலங்கள் புதிய அபராத தொகைகளை அமலுக்கு கொண்டு வருவதை நிறுத்தி வைத்துள்ளன. இன்னும் சில மாநிலங்கள் அபராத தொகைகளை குறைத்து விட்டன. மேலும் சில மாநிலங்கள் அபராத தொகைகளை குறைப்பது குறித்து பரிசீலித்து வருகின்றன. புதிய அபராத தொகைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாநிலங்களில் தெலங்கானாவும் ஒன்று.

அங்கு புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தெலங்கானா மாநிலம் ரச்சகொண்டா போக்குவரத்து போலீசாரின் ஒரு நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதற்கு பதிலாக இலவச ஹெல்மெட்களை வழங்கும் முயற்சியை அவர்கள் கையில் எடுத்துள்ளனர்.

அத்துடன் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ், இன்சூரன்ஸ் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை வாகன ஓட்டிகள் பெறுவதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் செய்துள்ளனர். அத்துடன் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அதன் முக்கியத்துவம் குறித்து போக்குவரத்து போலீசார் கவுன்சிலிங்கும் கொடுக்கின்றனர்.

இதுகுறித்து ரச்சகொண்டா போலீஸ் கமிஷனர் மகேஷ் பகவத் கூறுகையில், ''அதிக அபராதம் செலுத்துவதற்கு பதிலாக ஹெல்மெட்களை வாங்கும்படி வாகன ஓட்டிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கிறோம். ஒரு நல்ல ஐஎஸ்ஐ தர ஹெல்மெட்டின் விலை சுமார் 800 ரூபாய். ஆனால் ஹெல்மெட் அணியாவிட்டால் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

எனவே அபராதம் செலுத்துவதற்கு பதிலாக ஹெல்மெட் வாங்கி அணியும்படி வாகன ஓட்டிகளை கேட்டு கொள்கிறோம். அதேபோல் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழுக்கான செலவு வெறும் 50 ரூபாய் மட்டுமே. ஆனால் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி இதற்கான அபராதம் கடுமையானது. எனவே உங்கள் பணத்தை அபராதங்களில் இழக்க வேண்டாம் என விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கிறோம்.

அத்துடன் அதற்கு பதிலாக அந்த பணத்தை அனைத்து ஆவணங்களையும் சரியாக வைத்து கொள்ள பயன்படுத்தும்படியும் கேட்டு கொள்கிறோம். வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதம் வசூலிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் கிடையாது. அவர்களின் பாதுகாப்பிற்காக அவர்களை விதிகளை கடைபிடிக்க வைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்'' என்றார்.

இதனிடையே ஆர்டிஓ அலுவலகத்துடனும், போலீசார் கூட்டணி அமைத்துள்ளனர். இதன் மூலம் டிரைவிங் லைசென்ஸ் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு அதனை பெற ஏற்பாடு செய்யப்படுகிறது. ரச்சகொண்டா போலீசாரின் இந்த நடவடிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அத்துடன் பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








