ஈஃபிள் டவரை மிஞ்சிய உலகின் உயரமான காஷ்மீர் ரயில்வே பாலத்திற்கு விரைவில் திறப்பு விழா..!!
உலகின் உயரமான காஷ்மீர் ரயில்வே பாலம் விரைவில் கட்டிமுடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஃபிள் டவரை விட 30 மீட்டர் உயரத்தில் ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டு வரும் உலகின் மிக உயரமான வளைவு ரயில்வே பாலத்தின் கட்டமைப்பு பணிகள் 2019 ஜூன் மாதத்தில் நிறைவடையும் என கூறப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் கத்ரா மற்றும் பனிஹல் பகுதிகளுக்கு இடையே, உலகின் மிக உயரமான இரும்பு ரயில்வே பாலம் கட்டப்பட்டு வருகிறது.
செனாப் ஆற்றின் மேல் கட்டப்பட்டு வரும் இது, தரைமட்டத்தில் இருந்து சுமார் 359 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள ரெய்ஸி மாவடத்தின் கத்ரா மற்றும் பனிஹல் பகுதிகளுக்கு இடையே இந்த பாலத்தின் கட்டமைப்பு பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

2004ம் ஆண்டு தொடங்கப்பட்ட இதற்கான கட்டமைப்பு பணிகள் காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தினால் 2008 முதல் 2009 ஆண்டுகளில் நிறுத்தப்பட்டன.

காற்றின் வேகத்தை தெரியப்படுத்தும் தானியங்கி சமிக்ஞை அமைப்பு மற்றும் காற்றின் வேகத்தை அளக்கும் அனமீமீட்டர் போன்ற உபகரணங்கள் பொருத்தப்பட்ட பிறகு பணிகள் தொடங்கின

இதற்கு பிறகு ஒரு மணி நேரத்திற்கு 90 கி.மீ வேகத்தில் காற்று அடிக்கும் போது மட்டும் பணிகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டு, மீண்டும் பாலத்திற்கான கட்டமைப்பு பணிகள் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகின்றன.

பாலம் கட்டும் பணியில் உள்ள பொறியாளர் ஆர். ஆர். மாலிக் இந்த இரும்பு ரயில்வே பாலம் சுமார் 120 ஆண்டுகள் வரை வலிமையுடன் தாங்கி நிற்கும் என கூறுகிறார்.

மேலும் இந்த பாலத்தின் மீது ரயில்கள் ஒரு மணி நேரத்திற்கு 260 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும் என்றும் பொறியாளர் ஆர். ஆர். மாலிக் தெரிவிக்கிறார்.

பாலத்தின் மீதுமட்டுமல்லாமல் செனாப் ஆற்றின் மறுபகுதியில் ரயில்கள் செல்வதற்கு 5.9 கி.மீ , 9.3 கி.மீ மற்றும் 13 கி.மீ நீளங்களில் மூன்று சுரங்க வழிப்பாதைகள் தயாராகி வருகின்றன.

இந்த சுரங்களை கட்டமைப்பது மிக சவாலான பணியாக உள்ளது.கொங்கண் ரயில்வே கட்டமைத்து வரும் பணிகளின் பாலங்களுக்கான துணைத்தூண் கட்டும் பணிகளும் மிக சவாலாக இருப்பதக இதில் பணியாற்றும் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ரயில்வே பாதையில் பயணிக்கும் ரயில்கள் அனைத்தும் 80 சதவீதம் சுரங்க வழிப்பாதையில் தான் பயணிக்கும் என்று கூறுகிறார் இந்த கட்டமைப்பிற்கான திட்ட மேலாளர் எஸ்.எம். விஸ்வமூர்த்தி.

உதம்புரில் இருந்து பாரமுல்லாவை இணைக்கும் வகையில் செனாப் நதியின் மீது கட்டப்பட்டு வரும் இந்த இரும்பு பாலம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் உலகின் மிக உயரத்தில் இருக்கும் வளைவு ரயில் பாலம் என்ற பெருமையைப் பெறும்.

கத்ரா- பனிஹல் இரும்பு வளைவு ரயில்வே பாலத்தில், 2019 இறுதியில் ரயில்களை இயக்கி சோதித்து பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலகின் உயரமான வளைவு இரும்பு ரயில்வே பாலம் என்ற பெயர் பெறப்போகும் இதன் மீது முதல் ரயில் உத்தம்பூர்- ஸ்ரீநகர் நகரங்களுக்கு இடையே 2020ல் ஓடத்துவங்கும்.


Click it and Unblock the Notifications








